Header Ads



60 % தங்கத்தை அடகு வைத்துள்ளனர், 51 % பேர் கடன் வாங்குகிறார்கள், 50 % பேர் தங்கள் நகைகளை விற்கிறார்கள்


கொழும்பில் உள்ள 200,000 பேர் உட்பட நாடளாவிய ரீதியில் 50 லட்சம் பேர் உடனடித்தேவையை மாத்திரம் பூர்த்தி செய்து கொள்ளும் நிலையில் வாழ்வதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

இவர்கள் குறைவாக சாப்பிடுகிறார்கள், தங்க நகைகளை விற்று, கடன் பெறுகிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை கடந்த வியாழன் அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் ஐந்து வயதுக்குட்பட்ட 56,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி பதவிக்கு இரண்டு ஆண்டுகளில் அதாவது 2021 நவம்பரில் குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்குவதை அரசாங்கம் நிறுத்தியது.

பாடசாலை உணவு வழங்கலும் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் இலங்கையின் மக்கள் தொகையில் 22 சதவீதத்தினர் வரை உணவு உதவி தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

86 சதவீத வீடுகளில் உள்ளவர்கள் தாங்கள் உண்பதைக் குறைத்துக்கொண்டிருப்பதாகவும், சிலர் சாப்பிடுவதை தவிர்ப்பதாகவும் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கையின் சுகாதாரத்துறையும் ஆபத்தில் உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

2,700 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய அறுவை சிகிச்சை மற்றும் 250 க்கும் மேற்பட்ட வழக்கமான ஆய்வக பொருட்கள் கையிருப்பில் இல்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் அரசியல் களமான குருநாகலில் 6 இலட்சம் பேருக்கு உதவி தேவைப்படுகிறது.

போரினால் கணவர்மாரை இழந்த பெண்களுக்கும் உதவி தேவைப்படுகிறது. ஹம்பாந்தோட்டையில் 200,000 பேருக்கு உதவி தேவைப்படுகிறது. குருநாகலில் 82 வீதமானவர்கள் கடன்களை பெறுகின்றனர்.

60 வீதமானவர்கள் தங்கத்தை அடகு வைத்துள்ளனர். இலங்கையின் தென்பகுதியில் 51 சதவீதம் பேர் கடன் வாங்குகிறார்கள். 50 சதவீதம் பேர் தங்கள் நகைகளை விற்கிறார்கள் என்றும் ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

இந்தநிலையில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர்-ஹம்டி தலைமையிலான இலங்கையின் ஐக்கிய நாடுகள் அலுவலகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையின் 1.7 மில்லியன் மக்களுக்கு உயிர் காக்கும் உதவிகளை வழங்குவதற்காக 47.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை கோரி 'மனிதாபிமான தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் திட்டத்தை ஆரம்பித்துள்ளன.

No comments

Powered by Blogger.