Header Ads



ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்புவது முடியாத காரியமாயுள்ளது - அதாஉல்லாஹ்


நிறைவேற்றதிகார முறைமையை ஒழிக்காது, ஜனாதிபதி பதவியில் உள்ள வரை அதனை இலகுவாக நீக்கும் யோசனைகள் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டுமென தேசிய காங்கிரஸ் ஆலோசனை முன்வைத்துள்ளது.

அனைத்து கட்சிகளின் கூட்டத்திலே, கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

நிறைவேற்றதிகாரத்திலுள்ளவர், பொருத்தமற்றவராக இருக்கலாம். அதற்காக, இந்தப்பதவி பொருத்தமுடையது இல்லையென்ற பொருளுக்கு வரமுடியாது. நம்பிக்கையுடன் வாக்களித்து கொண்டுவரப்பட்ட ஜனாதிபதி ஒருவர் மக்களது நம்பிக்கையை இழந்தால், அவரை பதவியை விட்டு அனுப்பும் இலகுவழிகள் இருத்தலவசியம்.

இப்போதுள்ள வழிமுறையால், ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்புவது முடியாத காரியமாயுள்ளது. மேலும், இந்நடைமுறையால் கால தாமதங்களும் ஏற்படுகின்றன. எனவேதான், நிறைவேற்றதிகார ஜனாதிபதியை இலகுவாக வீட்டுக்கு அனுப்பும் புதிய யோசனைகள் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.

அதாவது, பாராளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் அவரை வீட்டுக்கு அனுப்பினால் போதுமானது. எப்படியோ, ஜனாதிபதியாக தெரிவாகின்றவர் அறுபது அல்லது அறுபத்தைந்து வீதங்களுக்குள்தானே வாக்குகளைப் பெறுகின்றனர். ஆகவே,150 எம்பிக்களின் ஆதரவுடன் நிறைவேற்றதிகார ஜனாதிபதியை நீக்கினால் போதுமானது.

மாறாக இத்தீர்மானத்தை உயர் நீதிமன்றத்திடம் விடல்,பின்னர் சர்வஜன வாக்கெடுப்புக்குவிடல் போன்ற நடைமுறைகள் எல்லாம் காலவிரயத்தையே ஏற்படுத்துகின்றன.

ஆனாலும், சாதாராண பெரும்பான்மையூடாக (113) நிறைவே ற்றதிகாரத்தை நீக்க நேரிடும் பட்சத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்க்கும் வழிமுறைகள் இருத்தலவசியம்.

இன்னும், பாராளுமன்ற எம்பிக்களை விலைக்கு வாங்கும் கேவல கலாசாரத்தையும் ஒழிப்பது அவசியம். நாட்டினதும், மக்களினதும் பாரிய எதிர்பார்ப்புக்கள் விலைபோகும் நிலைமைகள் நிலைத்தால், எதையுமே சாதிக்க முடியாது.

உண் மையில், நிறைவேற்று அதிகாரமுறைமை சிறுபான்மையினருக்கு பாதுகாப்பானதே! ஜனாதிபதி வேட்பாளருக்கு சிறுபான்மை சமூகங்களின் வாக்குகளும் தேவைப்படுவதால், எதையாவது நிபந்தனைகளாக முன்வைக்கும் சந்தர்ப்பம் இந்தத் தேர்தலில் கிடைக்கிறது. மாறாக,பாராளுமன்றம் ஜனாதிபதியை தெரிவுசெய்யும் முறையில், இச்சந்தர்ப்பம் இழக்கப்படுவதாகவும் தேசிய காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.