மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட வேண்டாம் - ஹனீபா மதனி கர்தினாலுக்கு கடிதம்
கொழும்பு மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்துக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஒரு முஸ்லிம் எந்தக்காரணம் கொண்டும் ஒரு கிறிஸ்தவரையோ வேதக்காரரையோ இம்சிக்கவோ அல்லது கொலை செய்யவோ அல்லது அவர்களின் ஆலயங்களை சேதப்படுத்தவோ முடியாது. இஸ்லாத்தில் அதற்கு அனுமதியேயில்லை .
நமது நாட்டில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், கட்டுவாப்பிட்டி கத்தோலிக்க தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகியவற்றில் உயிர்த்த ஞாயிறில் தாக்குதல் நடாத்தியவர்கள் முஸ்லிம் பெயர் தாங்கியவர்களாவும், முஸ்லிம்களைப் போன்று ஆடை அணிந்தவர்களாகவும், முகத்தில் தாடியுடன் முஸ்லிம்களின் கோலம் போட்டவர்களாகவும் இருந்தார்களே தவிர, அவர்கள் உண்மையான முஸ்லிம்களாக இருக்கவில்லை. அதனால் தான் அவர்களின் சடலங்களைக் கூட முஸ்லிம் மையவாடிகளில் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படவில்லை . எழுந்தமானமாகப் பார்ப்பதற்கு இவர்களின் நடை, உடை, பாவனை, பேச்சுக்கள் அனைத்தும் முஸ்லிம்களை ஒட்டியது போன்றே தென்படுகின்றது.
இது எவ்வாறெனில் மத்திய கிழக்கு நாடுகளில் தலையிலே பெருந்தலைப் பாகைகளையும், முகத்திலே பெருந்தாடிகளையும் ‘லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மத் றசூலுல்லாஹ்’ என்று அறபு மொழியில் எழுதப்பட்ட பெருங்கொடிகளையும் கையிலேந்திக் கொண்டு அபூபக்கர் அல் பஃதாதி எனும் யூதரின் தலைமையில் இயங்குகின்ற ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற இயக்கத்தை ஒத்ததாகும்.
முஸ்லிம்களைப் போன்று வேடம் தரித்து மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகளையும், அங்கு வாழுகின்ற முஸ்லிம்களையும் சிக்கலுக்குள்ளாக்கி அவர்களின் அமைதியான இருப்பை சீர் குலைப்பதுடன், முஸ்லிம்கள் கொடூரமானவர்கள் என்று உலகெங்கும் பறைசாற்றுவதே இவர்களின் நோக்கமாகும்.
இந்த அமைப்பு பெரும் பணச்செலவுடன் நீண்ட நாட்களாக திட்டமிட்டுச் செயற்படுத்தப்படுகின்றது. இதன் பின்புலத்தில் இஸ்ரேலும் இன்னும் பல மேற்கத்திய நாடுகளும் காணப்படுகின்றன. ஏகாதிபத்திய ஆதிக்கத்தை விரிவாக்கம் செய்வதே அவர்களின் முக்கிய நோக்கமாகக் காணப்படுகின்றது.
ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை ஆராய்ந்து பார்க்கின்ற போது இத்தாக்குதலை மேற்கொண்ட பாவிகள் புலனாய்வுத்துறையுடன் தொடர்புபட்டு நீண்ட காலம் பயணித்திருக்கின்ற உண்மையை புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.
இவர்களைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இருந்த பல சந்தர்ப்பங்களை வேண்டுமென்றே தவற விட்டு வந்திருக்கின்றார்கள். ‘ஈஸ்டர் தாக்குதல் எனும் நாடகம் நடந்தேறும் வரை அந்தப்பாவிகளை மூளைச் சலவையுடன் பாதுகாத்து போஷித்து வந்திருக்கின்றனர்.
அளுத்கமை கலவரங்களை ஒழுங்குபடுத்தி முன்னின்று நடாத்தியவர்கள் ஞானசார தேரோவும் அவர்தம் கோஷ்டியினருமே என்பதை இந்த நாட்டின் ஊடகங்கள் அப்போது மிகத்தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டியிருந்தன . அதற்குப் பதிலடி கொடுப்பதாக இருந்தால் ஞானசார தேரரையோ அல்லது அவரது அமைப்பின் பிரதான காரியாலயத்தையோ தாக்கியிருக்க வேண்டும்.
நியூஸிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கிரைஸ்ட்சேர்ச் நகரப் பள்ளிவாசல்களில் நடைபெற்ற தாக்குதலுக்கு உடனடியாகவே முஸ்லிம்களிடம் மன்னிப்புக்கோரினார். தவிரவும், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இது தொடர்பாக நாங்கள் முழுமையாக மன்னிப்பு வழங்குகின்றோம் என அப்போதே அறிவித்து விட்டார்கள்.
யதார்த்தம் இவ்வாறு இருக்கும் போது ‘ஈஸ்டர் தாக்குதல் நியூஸிலாந்து கிரிஸ்ட்சேர்ச் நகரப்பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி என்று எவ்வாறு சொல்லமுடியும்?
‘ஈஸ்டர் தாக்குதல் இயக்குனர்களின் மூளைச்சலவையிலேயே இப்படியான பிழையான பல விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன.
சூத்திரதாரிகள் யார் என்பதை ஆதாரபூர்வமாக கண்டறியப்படாத நிலையில் முஸ்லிம் அரசியல் கட்சியின் தலைமை ஒன்றின் மீதும் அவரின் சகோதரர் மீதும் சந்தேகப்பட்டு குற்றஞ்சாட்டியது முஸ்லிம் மக்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வரலாறு நெடுகிலும் ஜனநாயக வழிமுறையை பின்பற்றிவரும் முஸ்லிம் தலைமைகள் பயங்கரவாதத்துக்கு ஒரு போதும் துணைபோனது கிடையாது. ஆதலால் முஸ்லிம் அரசியல் தலைமை மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் உங்கள் கீர்த்திக்கும் நம்பிக்கைக்கும் களங்கத்தை ஏற்படுத்திவிடும்.
ஆகையால் அரசியல் காரணங்களுக்காகச் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நம்பி, தாங்களும் அக்குற்றச்சாட்டுக்களை சுமத்துவது ஆழ்ந்த கவலையை தருகின்றது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli
සුපිරි
ReplyDeletevery good explanation
ReplyDeleteماشاء الله
ReplyDeleteMasha Allah. For people who want to truth this article makes many thing clear.
ReplyDeleteA sensible and well balanced letter which should be carried by the Main Media.
ReplyDelete