போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பில் 7 வருடங்களில், 61 பேருக்கு மரண தண்டனை
(எம்.எப்.எம்.பஸீர்)
ஹெரோயின், கஞ்சா மற்றும் கொக்கைன் ஆகிய போதைப்பொருட்களுடன் கடந்த 5 வருடங்களில் 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளில், இலங்கையில் 4 ஆயிரத்து 338 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 257 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அத்துடன் இக்காலப்பகுதியில் 27 ஆயிரத்து 581 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அது குறித்து 2 இலட்சத்து 52 ஆயிரத்து 259 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அக்காலப்பகுதியில் 1828 கிலோ கொக்கைன் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவை தொடர்பில் 153 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பில் 61 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 161 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, தற்போதும் மேல் நீதிமன்றங்களில் போதைப் பொருள் குறித்த 582 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.
Post a Comment