திட்டமிட்டபடி பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாது
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை பூச்சியத்தை அடையவில்லை. இந்த நிலையில் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாது என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் அசித திசேரா தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரங்களில் நிலைமை சுமூக நிலைமைக்கு மாறப்போவதில்லை எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இம்மாதத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாது. அவ்வாறு ஆரம்பிப்பதன் மூலமாக மாணவர்களை நோய் தாக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலின் தாக்கம் மற்றும் தற்போதைய நிலவரம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,
கொரோனா வைரஸ் பரவலானது இலங்கையை பொறுத்தவரையில் உலகின் நிலைமையினை விட மாறுபட்ட விளைவுகளையே காட்டுகின்றது.
அதற்கு இலங்கையின் அமைவிடம் மற்றும் காலநிலை ஒரு காரணமாக அமைந்திருக்கலாம். எவ்வாறு இருப்பினும் கடந்த காலங்களை விடவும் இறுதி ஒருவார காலத்தில் நோய் தொற்றாளர்களை கண்டறியும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இம்மாதம் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. அதிலும் சிக்கல்கள் இருப்பதாக நாம் கருதுகின்றோம்.
பொதுவாக மாணவர்களுக்கு நோய் தாக்கத்தின் அறிகுறிகள் மிகவும் குறைவாகவே வெளிப்படுத்தும். அவ்வாறு இருக்கையில் மாணவர்கள் இடையில் ஏதேனும் நோய் பரவல் ஆரம்பித்தால் அது மிகப்பெரிய தாக்கமொன்றை உருவாக்கும்.
ஆகவே பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் நோய் தடுப்புக்கான விசேட வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டியுள்ளது. இம்மாதம் பாடசாலைகளை ஆரம்பிக்க எந்த ஆயதங்களும் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை.
எனவே இம்மாதமளவில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதில் மேலும் சிந்திக்க வேண்டியுள்ளது என்றார்.
Post a Comment