Header Ads



உலகம் முழுவதும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7,960 பேர் பலி


கொரோனா வைரஸ் கோர தாண்டவத்துக்கு நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 7 ஆயிரத்து 960 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரமாக உயர்ந்தது.

கொரோனா பரவ தொடங்கிய கடந்த 3 மாதங்களில் நேற்றுதான் அதிகமானோர் உயிரிழந்து இருக்கிறார்கள். கிட்டதட்ட 8 ஆயிரம் பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதில் அமெரிக்கா, பிரான்சில்தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதே போல் நேற்று புதிதாக 84 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 82 ஆயிரமாக உயர்ந்தது.

அமெரிக்காவை நிலை குலைய செய்துள்ள கொரோனா வைரசுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் பலியாகிறார்கள். இதில் உச்சக்கட்டமாக நேற்று அதிகபட்சமாக 2 ஆயிரத்து 569 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான்போக்சின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்காவில் இதுவரை கொரோனா வைரசுக்கு 28 ஆயிரத்து 529 பேர் பலியாகி உள்ளனர். அதே போல் நேற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.

மேலும் புதிதாக 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 44 ஆயிரமாக உயர்ந்தது.

அமெரிக்காவில் கடந்த 2 நாட்களாக தினமும் பலியானவர்களின் எண்ணிக்கை 2,400-க்கு மேல் இருப்பது மக்களை பீதி அடைய செய்துள்ளது.

நியூயார்க் மாகாணத்தில் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது. அங்கு 2¼ லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதற்கிடையே அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ்சே கூறும்போது, “அமெரிக்காவில் இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் 6 லட்சத்து 19 பேருக்கு பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது” என்றார்.

ஸ்பெயினில் பலி எண்ணிக்கை 18 ஆயிரத்து 800 ஆக உயர்ந்தது. நேற்று 557 பேர் உயிரிந்தனர். 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 578 பேர் உயிரிழந்தனர். அங்கு இதுவரை 21 ஆயிரத்து 645 பேர் பலியாகி இருக்கிறார்கள். 1 லட்சத்து 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்குள் சென்றது. அங்கு கொரோனா வைரசின் பாதிப்பு குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பிரான்சில் கொரோனா வைரசின் தாக்கம் உச்சத்தை அடைந்து இருக்கிறது. அங்கு நேற்று 1,438 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது. அதேபோல் புதிதாக 4,500 பேர் வைரசுக்கு பாதிக்கப்பட்டனர். மொத்தம் 1 லட்சத்து 47 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இங்கிலாந்தை புரட்டி போட்டு வரும் கொரோனா வைரசுக்கு அங்கு நேற்று 761 பேர் உயிரிழந்தனர். இதுவரை 12 ஆயிரத்த 800 பேர் பலியாகியும், 98 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

ஜெர்மனியில் 3,800 பேர் பலியாகியும், 1 லட்சத்து 34 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். சீனாவில் நேற்று கொரோனா வைரசுக்கு ஒருவர் மட்டுமே உயிரிழந்தனர். இதுவரை 3 ஆயிரத்து 342 பேர் பலியாகி இருக்கிறார்கள். 82 ஆயிரத்து 295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று புதிதாக 46 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் ஈரானில் 4,797 பேரும், பெல்ஜியத்தில் 4,440 பேரும், நெதர்லாந்தில் 3,134 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,239 பேரும், பிரேசிலில் 1,757 பேரும், கனடாவில் 1,010 பேரும், சுவீடனில் 1,203 பேரும் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் 210 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரசுக்கு இதுவரை 5 லட்சத்து 10 ஆயிரம் பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். 14 லட்சம் பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் கள். இதில் 51 ஆயிரம் பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தென்அமெரிக்கா நாடான கொலம்பியாவில் கொரோனா தாக்கம் உள்ளது. இதையடுத்து அங்கு சிறையில் உள்ள 4 ஆயிரம் கைதிகளை வீட்டு காவலில் வைக்க அரசு முடிவு செய்து இருக்கிறது.

No comments

Powered by Blogger.