Header Ads



மீன்பிடிக்கச் சென்ற கணவருக்கு, கொரோனா இருக்கலாம் - மனைவி பொலிஸாரிடம் முறைப்பாடு

திருகோணமலையிலிருந்து மீன்பிடிப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு சென்ற 10 மீனவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனது கணவர் மீன் பிடிப்பதற்காக யாழ்ப்பாணம் சென்ற நிலையில் ஒரு மாத காலமாக வீடு திரும்பாமையினால் அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும், என மனைவி ஒருவர் திருகோணமலை பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து திருகோணமலை பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் யாழ்ப்பாணம் மயிலிட்டி கடற்பரப்பில் கடற்றொழிலிற்காக சென்ற திருகோணமலையை சேர்ந்த மூன்று படகுகள் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டன.

திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள இலங்கை சுங்க இறங்குதுறைக்கு கடற்படை மற்றும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் குறித்த படகுகள் இன்று அதிகாலை 1.00 மணிக்கு கொண்டுவரப்பட்டன.

குறித்த படகுகளில் கடற்றொழிலை மேற்கொள்வதற்காக சென்ற திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த 10 மீனவர்களும் கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.

கடற்படையினரால் குறித்த படகுகளில் அழைத்துவரப்பட்டவர்கள் ஆரம்ப கட்ட வைத்திய பரிசோதனைக்கு பின்னர் துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்றுக்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என்ற போதிலும், அவரவர் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்றொழிலை மேற்கொள்வதற்காக திருகோணமலையை சேர்ந்தமீனவர்கள் யாழ் மயிலிட்டிக்கு சென்று அங்கு தங்கியிருந்து தொழிலை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமையினால் மீண்டும் திருகோணமலைக்கு வர முடியாத சூழ்நிலை காணப்பட்டதன் காரணமாக அவர்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.