Header Ads



முக்கிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி, இன்று பிறப்பித்துள்ள உத்தரவு

வீடொன்றை அல்லது சிறிய வர்த்தக நிலையமொன்றை நிர்மாணிக்கும் திட்டங்கள் உரிய முறையில் தயாரிக்கப்பட்டிருப்பின் அதற்கான அனுமதியை ஒரே நாளில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். நிர்மாணப்பணிகளுக்கான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது நிலவும் கடுமையான சட்ட திட்டங்கள் மற்றும் நீண்டகால தாமதம் காரணமாக மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

எனவே நடைமுறையிலுளன்ள சட்ட திட்டங்களை இலகுபடுத்தி, மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை முடியுமான அளவு குறைப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வீட்டு வசதிகள் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.

திட்டங்களை அனுமதிப்பதற்காக உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குறித்த நிறுவனங்கள் துரிதமாக அவற்றுக்கான ஏற்பாடுகளை செய்தல் குறித்து கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை வழங்கினார்.

தற்போது அனுமதியளிக்கப்படாத திட்டங்களுக்கு அனுமதியளிப்பது சம்பந்தமாக சட்டம் குறித்த அறிவுள்ள அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார். உறுதிச் சான்றிதழை ஒரே நாளில் வழங்குவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

தேசிய, பௌதீக திட்டத்தை இற்றைப்படுத்துவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. முதன்முறையாக வீடொன்றை கொள்வனவு செய்யும் ஒருவருக்கு நீண்டகால கடன் மற்றும் நிவாரண வட்டி முறைமையின் கீழ் கடன் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

திட்டங்களை அனுமதிக்கும்போது ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்தாது பூகோள நிலைமைகளை கருத்திற்கொண்டு பரிந்துரைகளை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மாகாண மற்றும் பிரதேசங்களுக்கேற்ப முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கண்டறிந்து அவற்றுக்கான அனுமதியையும் அரசாங்க நிறுவனங்களினூடாகவே மேற்கொண்டு முதலீட்டுச் சபைக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். அதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வலுவூட்டப்படுவதுடன், தமது திட்டத்தை உடனடியாக ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

நாடளாவிய ரீதியிலுள்ள சகல சிறிய நகரங்களையும் முறையாகவும் அழகிய முறையிலும் அபிவிருத்தி செய்வதன் மூலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். எடுத்துக்காட்டாக தலவாக்கலை, எல்ல மற்றும் கினிகத்ஹேன போன்ற நகரங்களை நவீனமயப்படுத்தக்கூடிய வழி வகைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

வேரெஸ்ஸ கங்கைத்திட்டப் பணிகளை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

கழிவு முகாமைத்துவம் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. 

குப்பைகளை சேதனப் பசளைகளாக மாற்றுவதற்கான திட்டங்களை தயாரிக்குமாறும் அதற்காக அதிகபட்சம் தொழிநுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்ட துறையினரிடம் தெரிவித்தார்.

புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் பங்களிப்பை பெற்று குவிந்திருக்கும் மணற் படிவுகளை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மணலின் விலையை குறைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் பல பிரதேசங்கள் முகங்கொடுத்துள்ள வெள்ள அச்சுறுத்தலுக்கும் தீர்வு வழங்க முடியும்.

பேர வாவிகளை சுத்தப்படுத்தும் திட்டத்தை விரைவாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிப்பட்டது. இதன்போது பேர வாவிக்கு கழிவுகள் சேரும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள இடங்களை உடனடியாக மூடி விடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை வழங்கப்பட்டது.

அமைச்சர்களான காமினி லொக்குகே, இந்திக அனுருத்த, அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020-01-06

No comments

Powered by Blogger.