Header Ads



றிஸாட் பதியுதீன் அதனை பார்த்துக்கொள்வார் - விமல் வீரவன்ச


அதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை நாம் அமைக்கமாட்டோம் என முன்னாள் அமைச்சர் றிஸாட் பதியுதீன் கூறுகின்றார்.ஆனால் அதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைக்கின்ற போது றிஸாட் பதியுதீன் அதனை பார்ப்பார் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

மன்னாருக்கு இன்று சனிக்கிழமை (18) காலை விஜயம் செய்த அமைச்சர் விமல் வீரவன்ச காலை 10 மணியளவில் மன்னார் பெரிய கடை பகுதியில் அமைந்துள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்திற்கு (மாந்தை சோல்ட் லிமிட்டெட்) திடீர் விஜயம் மேற்கொண்டார்.

அங்கு சென்ற அமைச்சர் உப்பு உற்பத்தி நிலையத்தை பார்வையிட்டதோடு,அங்குள்ள பிரச்சினைகள் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டார்.

அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை கண்காணித்து அவற்றை அபிவிருத்தி செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதே எனது அமைச்சின் நோக்கம்.

அதனடிப்படையில் மன்னாரில் உள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தின் உப்பு உற்பத்தியானது நாட்டின் சந்தைக்கும், பாவனையாளர்களுக்குமான உப்பினை உற்பத்தி செய்கின்றது.

குறித்த உப்பு உற்பத்தி நிலையத்தை மேன் மேலும் அபிவிருத்தி செய்வதன் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த இளைளுர்,யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

நாட்டிற்கு தேவையான வளங்களை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்வதுடன் வெளிநாட்டிடம் எதிர்பார்க்காமல் இருப்பதே எமது நோக்கம்.

குறித்த விஜயம் ஒரு கண்காணிப்பு விஜயமாகவே அமைந்துள்ளது.நான் தொழிற்சாலைகள் அமைச்சரே தவிர வர்த்தக அமைச்சர் இல்லை.

தொழிற்சாலை உற்பத்திகள் குறித்து சிறந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு இருந்தால் அவற்றை தொடர்ந்து நாம் முன்னெடுத்து இருப்போம்.

தற்போதைய நாடாளுமன்றம் காலவதியாகி விட்டது.அதனால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.மார்ச் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்றது.

கலைக்கப்பட்ட பின் இடம் பெறுகின்ற தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம். அதன் போது பல்வேறு திட்டங்களை நடை முறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

எனவே அதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைப்பதே எமது நோக்கம்.

அதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை நாம் அமைக்கமாட்டோம் என முன்னாள் அமைச்சர் றிஸாட் பதியுதீன் கூறுகின்றார்.

ஆனால் அதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைக்கின்ற போது றிஸாட் பதியுதீன் அதனை பார்த்துக்கொள்வார் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.