புதிய சின்னம், புதிய யாப்பு, தேர்தல் ஆணைக்குழுவிலும் பதிவு - அதிரடிக்கு தயார் சஜித்
எதிர்வரும் பொதுத்தேர்தலை இலக்கு வைத்து அமைக்கப்பட உள்ள புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாசவுக்கு வழங்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது எனவும், இது சஜித் அணியினர் பெற்ற வெற்றி எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று -31- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
இதற்கு மேலதிகமாக புதிய கூட்டணியின் வேட்பு மனு குழுவின் தலைவர் பதவி மற்றும் கூட்டணியின் பொதுச் செயலாளர் பதவிக்கான நபரை பரிந்துரைக்கும் பொறுப்பும் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க செயற்குழு இணங்கியுள்ளது. செயற்குழுவின் தீர்மானங்கள் மகிழ்ச்சியடைய கூடியதாக உள்ளது.
இதனடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் கூட்டணிக்கான அடிப்படை நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும்.
இந்த கூட்டணியை பெயரளவிலான கூட்டணியாக அல்லாமல் தேர்தல் ஆணைக்குழுவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு புதிய சின்னத்துடன் உருவாக்கப்படும்.
இதற்கு அமைய கட்சியின் யாப்பு, அதிகாரிகள் குழு நியமிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் சஜித் பிரேமதாசவின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்படும்.
இதன் மூலம் சஜித் தலைமையில் வெற்றிகரமான விரிவான அரசியல் அமைப்பாக கட்டியெழுப்படும் எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment