இலங்கை எப்போதுமே சிங்கள நாடாகும், தமிழில் தேசியகீதம் இசைக்கப்படும் போது அரசமைப்பு மீறப்படுகிறது
இலங்கை எப்போதுமே சிங்கள நாடாகும், தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படும் ஒவ்வொரு முறையும் நாட்டின் அரசமைப்பு அப்பட்டமாக மீறப்படுகின்றதாக முன்னாள் பிரதி அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இம்முறை 2020 பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ, உள்நாட்டு விவகார, மாகாணசபைகள் அமைச்சில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,
இலங்கையின் அரசமைப்பில் தேசிய கீதமானது சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் "ஸ்ரீலங்கா மாதா' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், தமிழ் மொழியில் 'ஸ்ரீலங்கா தாயே' என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இலங்கையின் அரசமைப்பு மீறப்படுகின்றது.
அரசமைப்பில் ஏதேனும் சர்ச்சை எழுந்தால் சிங்கள மொழியே ஏற்றுக்கொள்ளப்படும் என்று 20ஆவது சரத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையானது சிங்கள நாடாகும். ஆரம்பத்தில் சிங்கலே என்றுதான் விளிக்கப்பட்டுள்ளது. 1815இல் மலைநாட்டு உடன்படிக்கையில் கூட அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
இந்த விகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பேராசிரியர் இந்துராகாரே தம்ம ரத்ன தேரர்,
இலங்கையானது சிங்கள தேசம் என்று இராமாயணத்திலும், யாழ்ப்பாண வரலாற்றை எடுத்துகூறும் யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூலிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கலே என்ற நாட்டில் பிரதான இனம் சிங்களமாகும். ஏனைய இனத்தவர்களும் வாழலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
Post a Comment