UNP க்கு காலிமுகத்திடலில் கிடைத்த மகிழ்ச்சி 24 மணி நேரத்தில் இல்லாமல் போனது
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் நத்தார் தாத்தாக்கள் பரிசுகளை விநியோகித்தனர், எனினும் பரிசுகளை பெற்றுக்கொண்ட மக்கள் பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் அண்மையில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவான கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் பிரசாரத்திற்காக இரண்டு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். ஒருவர் சீமெந்து பொதிகளை விநியோகித்தார். மற்றைய அமைச்சர் கூரை தகடுகளை விநியோகித்தார். மற்றுமொருவர் தளபாடங்களை வழங்கினார். இறுதியில் பணமும் விநியோகிக்கப்பட்டன.
நிதியமைச்சரே இவற்றுக்கு பணம் வழங்கினார். இது குறித்து தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தோம். காலிமுகத் திடல் கூட்டத்திற்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு சிறிய உத்வேகம் ஏற்பட்டது. இதற்கு முன்னர் நாங்கள் காலிமுகத் திடலை நிரப்பினோம். காலிமுகத் திடலில் கிடைத்த மகிழ்ச்சி 24 மணி நேரத்தில் இல்லாமல் போனது.
2015 ஆம் அலரி மாளிகைக்கு சென்று எமக்கு அமைச்சர் பதவிகளை பெற்றிருக்க முடியும். ஆனால், நாங்கள் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்சவுடன் இருந்தோம். அன்று நாம் சிந்திய கண்ணீர், நவம்பர் 17 ஆம் திகதி ஆனந்த கண்ணீராக மாறும் எனவும் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment