ரிஷாத் பதியுதீன், ஹிஷ்புல்லா, அசாத்சாலி ஆகியோர் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள் - செஹான் சேமசிங்க
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் குறித்து பாராளுமன்றத்தில் தெரிவு குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் எவ்வித புதிய விடயங்களும், கண்டுப்பிடிப்புக்களும் உள்ளடக்கப்படவில்லை.
புலனாய்வு பிரிவினரை மையப்படுத்தியே குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. பயங்கரவாதிகளுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் குறித்து எவ்வித விடயங்களும் வெளிப்படுத்தப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று -24- ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்கப்பெறாது. பாராளுமன்ற தெரிவு குழு பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புடையவர்களை முழுமையாக பாதுகாத்துள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் எவ்வித புதிய விடயங்களும் முன்னெடுக்கப்படவில்லை.
பாராளுமன்ற தெரிவு குழுவின் அறிக்கை முழுமையாக புலனாய்வு பிரிவினரை சார்ந்துள்ளது அரசியல் தேவைகளுக்காகவே புலனாய்வு பிரிவினர் பலவீனப்படுத்தப்பட்டார்கள்.
இவ்விடயத்தில் அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். பாராளுமன்ற தெரிவு குழுவின் அறிக்கையினை கொண்டு எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது.
பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், மற்றும் முன்னாள் ஆளுநர்களான ஹிஷ்புல்லா, அசாத்சாலி ஆகியோர் தொடர்பில் எவ்வித விடயங்களும் குறிப்பிடப்படவில்லை. அறிக்கையின் ஊடாக இவர்கள் அனைவரும் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள் என அவர் தெரிவித்தார்.
Post a Comment