Header Ads



ஐதேக யின் நாளைய கூட்டத்தில் சு.க முக்கியஸ்தர் சிலர் மேடையேறும் சாத்தியம்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கான மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பறைசாற்றும் விதமாக நாளை கொழும்பு காலிமுகத்திடலில் பேரணியொன்று நடைபெறவுள்ளது. 

ஐ.தே.கவின் இம் மக்கள் ஆதரவுப் பேரணியில் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் மேடையேறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்றுமுன்தினம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேர்தலில் போட்டியிடும் அனைத்துத் தரப்புக்களும் தமது தீவிரமான தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றன. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் கோத்தபாய ராஜபக்ஷ இன்று தனது தேர்தல் பிரசாரத்தை அனுராதபுரத்தில் ஆரம்பித்திருந்தார்.

அவ்வாறிருக்க ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் நாளை கொழும்பு காலிமுகத்திடலில் பிற்பகல் 2 மணிக்கு மாபெரும் மக்கள் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

No comments

Powered by Blogger.