முஸ்லிம் பெண்களின் கல்விக்கு வித்திட்ட 3 சகோதரிகள் (‘கலீபாத்தா’, ‘ஜனீனாத்தா’, ‘ஒஸீலாத்தா’)
இன்று இலங்கையில் முஸ்லிம் பெண்கள் கல்வியில் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள் என பெருமைப்படுகிறோம். ஆனால் இதற்கு வித்திட்ட பெண்களை நாம் அறிந்திருக்கிறோமா? மக்களுக்காக எவ்வித சுயநலமுமின்றி செயற்பட்ட இவர்களது பெயர்கள் காலவோட்டத்தில் மறக்கடிக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் அவர்களை என்றென்றும் நினைவுபடுத்துவது எமது கடமையாகும். அந்த வகையில் சென்ற நூற்றாண்டில் இலங்கை முஸ்லிம் பெண்களின் சமய மற்றும் உலகக் கல்விக்காக அயராது உழைத்த மூன்று சகோதரிகளைப் பற்றி நாம் அறிந்து கொள்வோம். இவர்கள் ‘கலீபாத்தா” ‘ஜனீனாத்தா” மற்றும் ‘ஒஸீலாத்தா” என்ற பெயர்களால் வரலாற்றில் அறியப்படுகிறார்கள்.
சிறந்த முறையில் வாழ்ந்து மரணித்துப்போன இந்தப் பெண்களின் புகைப்படங்களைத் தேடியபோது மங்கிப் போன நிலையிலிருந்த இவ்வாறான புகைப்படங்களையே என்னால் பெற்றுக்கொள்ள முடிந்தது.
தெமட்டகொட பகுதியில் பலராலும் அறியப்பட்ட ஆலிம்களுள் ஒருவரான காக்கா லெப்பே என்பவரின் புதல்விகளே இந்த மூன்று சகோதரிகளுமாவர். இவர்களுடைய தந்தையின் சரியான பெயரை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை.
இந்த சகோதரிகள் மூவரும் தமது தந்தையிடமிருந்து குர்ஆனை சரளமாக ஓதுவதற்கான பயிற்சிகளை மாத்திரமின்றி தஜ்வீத் கற்கைகளையும் முறையாகப் பெற்றிருந்தனர். இவர்களது தந்தையின் மறைவுக்குப் பின்னரும் குறித்த முஸ்லிம் சமூகத்தில் தமது பெண் பிள்ளைகளை எழுத வாசிக்க மற்றும் தமது பெயர்களை கையொப்பமிட வேண்டும் என்ற நோக்கத்திலாவது பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் தயக்கம் காட்டினர்.
ஆனாலும் இந்த மூன்று சகோதரிகளும் எவ்வித சுயநலமுமின்றி பெண் பிள்ளைகளுக்கு கற்பிக்க முன்வந்தனர். சமூகத்தின் பார்வை தம்மீது விழவேண்டும் என்பதற்காக அவர்கள் இதனைச் செய்யவில்லை. ஆனால் இவர்களுடைய செயற்பாடு முஸ்லிம் பெண்களுடைய கல்வி விடயத்தில் ஒரு பாரிய புரட்சியை ஏற்படுத்தியதன் மூலம் இவர்கள் பிரபலமடைந்தார்கள்.
காக்கா லெப்பே அவர்களினாலேயே பெண் பிள்ளைகளுக்கு கல்வியூட்டும் இந்த சிறிய முயற்சிக்கு அத்திபாரம் இடப்பட்டது. மருதானையில் உள்ள மாளிகாகந்த வீதியில் கல்வத்த எனும் பகுதியில் பெண் பிள்ளைகளுக்கான ஒரு சிறிய குர்ஆன் மத்ரஸா காக்கா லெப்பே அவர்களினால் உருவாக்கப்பட்டது. அவரது மறைவுக்குப் பின்னர் குறித்த மூன்று சகோதரிகளும் மத்ரஸா நடவடிக்கைகளை கொண்டு நடத்தினர்.
இதனால் பல்வேறு குடும்பங்களில் உள்ள பெண்கள் கல்வியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த மத்ரஸாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதன் பின்னர் இடவசதி மற்றும் வளங்கள் என்பன கருத்தில் கொள்ளப்பட்டு மத்ரஸாவின் அமைவிடம் கொழும்பு ஒன்பதிலுள்ள தெமட்டகொட வீதிக்கு மாற்றப்பட்டது.
இந்த மத்ரஸா பிரபல்யமடைந்ததைத் தொடர்ந்து பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இங்கு கல்வி கற்க அனுப்பி வைத்தார்கள். மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் உட்பட தேசிய பாடத்திட்டங்களும் இந்த மத்ரஸாவில் அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் மேலும் பிரபல்யம் அடைந்தது.
எவ்வாறாக இருந்தபோதிலும் இந்த மத்ரஸா ஒரு தனியார் நிறுவனமாகவே செயற்பட்டது. இறுதிவரை இந்த மத்ரஸாவுக்கு அரச அங்கீகாரம் கிடைக்கவில்லை. குறித்த மூன்று சகோதரிகள் உட்பட இங்கு பணிபுரிந்த ஏனைய ஆசிரியர்களுக்கும் கல்வி கற்கும் மாணவிகளின் பெற்றோர்களிடம் இருந்து அறவிடப்படும் பணத்தின் மூலமே சம்பளம் வழங்கப்பட்டது.
1935 இல் இந்த மத்ரஸா முஸ்லிம் பெண்களின் கல்வி விடயத்தில் பாரிய பங்களிப்பு செலுத்துவதை உணர்ந்துகொண்ட ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபர் ரி.பி. ஜாயா இந்தக்கல்வி நிலைய வளாகத்தை இடம்மாற்றி விருத்தி செய்ய முன்வந்தார்.
இதன் பின்னர் இலக்கம் 164, தெமட்டகொட வீதி என்ற அமைவிடம் இந்த மூன்று சகோதரிகளின் நினைவுச் சின்னமாக பிரகடனம் செய்யப்பட்டதுடன் அவர்களால் மத்ரஸா தரத்தில் ஹைரியா பெண்கள் பாடசாலை என்ற உத்தியோகபூர்வ கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இன்று இது தலைநரகரில் முஸ்லிம் பெண்களுக்கான முன்னணி கல்வி நிறுவனமாக விளங்குகின்றது.
மத்ரஸத்துல் ஹைரியா என்று பெயர் பெற்ற இந்தப்பாடசாலையில் குர்ஆன் மற்றும் இஸ்லாம் சம்பந்தப்பட்ட விடயங்கள் கற்பிக்கப்பட்டன.
இதனால் தெமட்டகொடயில் மாத்திரமின்றி வெளிப்பிரதேசங்களிலும் இந்தக்கல்வி நிறுவனம் பிரபல்யம் பெற்றது. தற்போது ஸாஹிரா கல்லூரி மற்றும் முஸ்லிம் பெண்கள் கல்லூரி என்பவற்றோடு ஒப்பிடும்போது குறித்த பாடசாலைகளைக் காட்டிலும் க.பொ.த. சாதாரணதரம் மற்றும் உயர்தரத்தில் அதிகமான பெறுபேறுகளை இந்தப்பாடசாலை மாணவிகள் பெற்றுத் தருகிறார்கள்.
இந்த மத்ரஸா உருவாக்கப்பட்டதன் பின்னரும் கூட பழீலா உம்மா , ஸனீரா ஜுனைத் மற்றும் வொஸீலா கரீம் ஆகிய மூன்று சகோதரிகளும் தமது தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்ட அழகிய முறையில் குர்ஆன் ஓதும் கலையை உயர்தர பாடசாலைகளில் கற்றுக் கொடுத்துக்கொண்டுதான் இருந்தார்கள். சில குடும்பங்களின் பல தலைமுறைகளுக்கு இவர்கள் மூவரும் குர்ஆனைக் கற்றுக்கொடுத்துள்ளனர். இதனால் பல தலைமுறைகளில் இவர்களை நினைவில் வைத்துள்ளவர்களும் இவர்களுடைய பாணியிலேயே குர்ஆனை ஓதுபவர்களும் இன்றும் உள்ளனர்.
இவர்கள் மூவரும் தற்போது மரணித்து விட்டார்கள். இவர்களுள் இறுதியாக உயிரிழந்த சகோதரி வொஸீலா கரீம் அவர்களை முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வர் சந்தித்து அவருக்கு பரிசீல்களையும் பாராட்டுக்களையும் அளித்தமை நினைவுகூரத்தக்கதாகும். இவர்கள் மூவரும் சுவனம் நுழைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். – Vidivelli
ஆங்கிலத்தில்: கலாநிதி எம். ஹாரிஸ்தீன்
தமிழில்: எம்.ஏ.எம். அஹ்ஸன்
May Almighty Allah bless highest place in Jannah for our Great Mothers of Islam...
ReplyDeleteAAmeen