சஜித் அணியில்தான் ரிஷாத் அணி, அடிப்படைவாதிகள் அனைவரும் அவர்களுடன் தான் உள்ளனர்
(ஆர்.யசி)
அமெரிக்க மேற்குவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் இணைந்து இந்த நாட்டில் இன்னொரு நாசகார செயலை செய்யும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கையின் கேந்திரத்தை கைப்பற்றும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கோத்தபாய ராஜபக் ஷ-, மஹிந்த ராஜபக் ஷ இணைந்த அரசாங்கத்தை உருவாக்கி நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது தேசிய மாநாடு நேற்று சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
கடந்த காலங்களில் மேற்கத்தேய மற்றும் பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக வெற்றியை உருவாக்கிக்கொடுத்த மக்களே இன்று எம்முடன் இணைந்துள்ளனர். சவால்களுக்கே சவால் விடுக்கும் மக்கள் இன்றும் எம்முடன் இணைந்துள்ளனர்.
ஏப்ரல் 21 ஆம் திகதி சஹ்ரான் மூலமாக இந்த நாட்டில் இரத்தம் படிந்தது, அமைதியை விரும்பிய மக்கள் அச்சத்தில் இருந்தனர். சஹ்ரான் யாருக்கு தேவைப்பட்டார், இந்த தாக்குதல் யாருக்கு தேவைப்பட்டது? என்பதை தேடிப்பார்க்க வேண்டிய கட்டம் உருவாகியது.
விடுதலைப்புலிகளை இல்லாதொழித்தாலும் அவர்களின் சக்திகள் வேறு முறைமைகளில் எம்மை தாக்கிக்கொண்டே இருந்தன. காரணம் இலங்கையை மற்றும் இலங்கையின் கேந்திரத்தை கைப்பற்ற வேண்டிய நோக்கமே சர்வதேச சக்திகளுக்கு ஏற்பட்டது. இன்றும் அதே நோக்கம் உள்ளது. மனித உரிமைகள் எனக் கூறிக்கொண்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் நோக்கமே உள்ளது. அதற்காகவே சஹ்ரான் போன்றவர்கள் இவர்களுக்கு தேவைப்பட்டனர்.
கறுப்புப் பணம் நாட்டில் நுழைந்தது. இந்த ஆட்சி பயங்கரவாதிகளை வளர்த்த ஆட்சியாகும். பிரதமர் முதற்கொண்டு அனைவரும் இந்த பயங்கரவாதத்திற்கு இடமளித்த நபர்களாவர். இந்த குற்றங்களில் இருந்து எவரும் தப்பிக்க முடியாது. புலனாய்வுத் துறை 97 தடவைகள் அச்சுறுத்தல் விடுத்தும் தாக்குதலுக்கு இடம் கொடுத்தனர்.
ஐ.எஸ் அமைப்பை உருவாக்கியவர்கள் இந்த நாட்டுக்குள் இன்னொரு தாக்குதலை நடத்தும் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். அமெரிக்க மேற்குலக சக்திகள் இந்த நாட்டை இன்று நாசம் செய்ய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலை சமூக ஊடங்களின் நோக்கங்களுக்கு ஏற்ப நடத்தவே முயற்சித்து வருகின்றனர். இன்று சஜித் மூலமாக தமது பயணத்தை உருவாக்க மங்கள போன்றவர்கள் முயற்சித்து வருகின்றனர். சஜித்தினால் கூட நாட்டினை மீட்டெடுக்க முடியாது.
சஜித் அணியில் தான் ரிஷாத் பதியுதீன் அணியினரும் உள்ளனர். அடிப்படைவாதிகள் அனைவரும் அவர்களுடன் தான் உள்ளனர். இவர்களுக்கு இனியும் இடமளிக்க முடியாது. ஆகவே இவர்கள் அனைவரையும் நிராகரித்து நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும். அன்று நாட்டினை மீட்டெடுக்க மஹிந்த தேவைப்பட்டார். இன்றும் அதேபோன்று ஒரு நாசகார ஆட்சியை வீழ்த்த கோத்தபாய தேவைப்படுகின்றார். இன்று முழு நாடும் கோத்தபாய ராஜபக் ஷவின் தலைமையையே கேட்கின்றனர். மஹிந்த, -கோத்தாவின் மூலமாக நாடு கேட்கும் சுதந்திரத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். நோயாளர் நாடாக இன்று எமது நாடு பயணித்துக்கொண்டுள்ளது. உணவாக உட்கொள்ளும் அனைத்துமே விஷமாக செல்லும் நாடே இதுவாகும். இதிலிருந்து நாம் விடுபட வேண்டும். இந்த நாடு பிச்சைக்கார நாடு அல்ல. அரசாங்கத்தில் கையேந்தி வாழும் நாடு அல்ல.
தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும், நாட்டினை கட்டியெழுப்பும் தலைவர் ஒருவர் எமக்கு கிடைத்துள்ளார். அதையும் தாண்டி புத்திசாலித்தனம் கொண்ட தலைவர் எமக்கு கிடைத்துள்ளார். அவர்தான் எமது கோத்தாபய ராஜபக் ஷ. அவரையே நாம் தலைவராக்க வேண்டும். சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க கோரிக்கை விடுத்து வரும் வேளையில் ரணில் தானே ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறுகின்றார். இது எவ்வாறு என்றால் கல்யாண பத்திரிகையை சஜித் நாடு பூராகவும் பகிர்ந்து செல்லும் நிலையில் மணப்பெண்ணை கடத்தும் வேலையை ரணில் செய்கின்றார். இவ்வாறானவர்களுக்கு நாட்டினை கொடுத்து எந்த அர்த்தமும் இல்லை. ஆகவே மஹிந்த – -கோத்தா ஆட்சியே எமக்கு வேண்டும். சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் மோதிக்கொள்ளாது அனைவரும் இணைந்து வாழக்கூடிய நாட்டினை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்த போராட்டத்தில் எம்மை வெற்றிபெற வைக்க வேண்டியதே மக்களின் கடமையாகும். மக்கள் கடமைகளை சரியாக செய்ய வேண்டும். கோத்தாபய ராஜபக் ஷவை வெற்றிபெற வைத்து நாட்டினை மாற்றுப் பாதையில் கொண்டு செல்வோம் அதற்கு அனைவரும் ஒன்றிணைவோம் என கூறினார்.
Ya Allah dont give us oppressing leader for our counrty
ReplyDelete