Header Ads



பிரதமருக்கு தகவல் கிடைக்காமை, பாரதூரமான நிலைமை - சாட்சியம் வழங்கினார் ரணில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தானோ அல்லது தன்னுடைய பாதுகாப்பு பிரிவோ எந்த ஒரு தகவலையும் தெரிந்திருக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பாதுகாப்பு சபை கூட்டத்தின்போது இது தொடர்பில் தகவல்கள் கிடைத்ததாகவும் ஐ.எஸ் அமைப்பினருக்கு உதவி செய்யும் நபர்கள் இருப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றதாகவும் பிரதமர் சாட்சி வழங்கியுள்ளார். 

முதலில் சிரியாவில் உயிரிழந்த நபர் தொடர்பில் தேர்தலின் பின்னர் தகவல்கள் கிடைத்ததாகவும் அவர் தொடர்பில் மேலதிக தகவல்களை திரட்டுமாறு புலனாய்வு பிரிவிற்கு உத்தரவு வழங்கியதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். 

இருப்பினும் அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

2018 ஒக்டோபர் மாதம் வரையில் தேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களில் கலந்து கொள்ள முடிந்ததாகவும் இருப்பினும் டிசம்பர் மாதத்தின் பின்னர் அவ்வாறான அழைப்புகள் எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் பின்னர் அது தொடர்பில் தேடிப்பார்த்தபோது தேசிய பாதுகாப்பு சபை கூட்டம் கூடவில்லை என தகவல்கள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தாக்குதலுக்கு முன்னர் புலனாய்வு பிரிவினால் அனுப்பப்பட்ட கடிதம் தனக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியே தனக்கு இது தொடர்பில் தெரியவந்ததாகவும் பிரதமர் உறுதியாக தெரிவித்துள்ளார். 

இவ்வாறான ஒரு தகவல் பிரதமருக்கு கிடைக்காமை பாரதூரமான நிலைமை என பிரதமர் இதன்போது ஒப்புக் கொண்டுள்ளார். 

இறுதியாக இடம்பெற்ற பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்கு பொலிஸ்மா அதிபருக்கு கூட அழைப்பு விடுத்திருக்கவில்லை என பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. சஜித்தும் மைத்ரீயும் நடத்திய நாடகம் , மைத்ரீ அடுத்த ஜனாதிபதி யிடம் தப்பவே சஜித்தை களமிறக்கும் முயற்ச்சி

    ReplyDelete

Powered by Blogger.