சரத் பொன்சேக்காவுக்கு, பொதுஜன பெரமுன புகழாரம்
பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் நிச்சயம் ஆதரவு வழங்குவார்கள். ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்படுவோம் என்று சுதந்திரக் கட்சியினர் பேச்சளவில் மாத்திரம் குறிப்பிட்டால் போதாது செயலளவிலும் செயற்படுத்த வேண்டும்.
என எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். நாட்டின் தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டே பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியுள்ளார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஆளும் தரப்பில் அவரை தவிர அறிந்தவர் பிறிதொருவர் கிடையாது.
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் எதிரணியில் பிளவினை ஏற்படுத்தவே ஆளும் தரப்பினர் முயற்சித்தார்கள். ஆனால் அவர்களின் நோக்கம் தற்போது தோல்வியடைந்துள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவே ஜனாதிபதி வேட்பாளர் என்பதை ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டோம். கட்சி உறுப்பினர்களின் அபிப்பிராயத்திற்கு மதிப்பளித்தே பொதுஜன பெரமுனவின் தலைவர் உரிய தீர்மானத்தை கட்சியின் கன்னி சம்மேளனத்தில் உத்தியோக பூர்வமாக நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
தேசிய பாதுகாப்பினையும், நாடு தற்போது அடைந்துள்ள நிலைமைகளையும் கருத்திற் கொண்டே எதிரணியினர் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்கியுள்ளதாக பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அவரைவிட அனுபவம் கொண்டவர் வேறெவரும் கிடையாது.
இன்று தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தரப்பினரையே நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
நாட்டு மக்கள் மீது ஐக்கிய தேசிய கட்சிக்கு எவ்வித அக்கறையும் கிடையாது. ஒரு விடயத்தை இலக்காகக் கொண்டு ஒரு ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்குவதில் பாரிய போட்டிகளும், முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளன. ஐக்கிய தேசிய கட்சிக்குள் காணப்படும் நெருக்கடிகள் இறுதியில் நாட்டு மக்களுக்கே பாதிப்பினை ஏற்படுத்தும். இதுவே கடந்த நான்கு வருட காலமாக நாட்டில் நிலவியது.
இந்நிலைமை தொடர இனியும் இடமளிக்க முடியாது. பொதுஜன பெரமுனவுடன் நிச்சயம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இணைவார்கள். ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்படுகின்றோம் என பேச்சளவில் மாத்திரம் குறிப்பிட்டால் போதாது.
செயலளவிலும் செயற்படுத்த வேண்டும். எமதுவெற்றிக்கு நிச்சயம் சுதந்திரக்கட்சியினர் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றார்.
Post a Comment