சுதந்திரக் கட்சியினர் இரவு நேரங்களில், சஜித்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் - டிலான்
(ரொபட் அன்டனி)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமென கூறிவருகின்ற சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மறுபுறம் ஐக்கிய தேசியக்கட்சியின் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்கும் போக்கை கடைப்பிடிக்கின்றனர் . பகலில் மைத்திரிபால சிறிசேன வேண்டும் என்று கூறுபவர்கள் இரவில் சஜித்திற்கு ஆதரவு வழங்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர் என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
எங்கிருந்தோ வந்தவர்கள் இன்று எமது சுதந்திரக்கட்சியை நிர்வகிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் நாங்கள் எப்போதுமே ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராகவே இருப்போம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக இருக்கின்ற பட்சத்திலேயே இந்த நாட்டின் அரசியலில் ஒரு முக்கிய வகிபாகத்தை வகிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா சுதந்திரக்கட்சியில் இருந்து கொண்டு பொதுஜன பெரமுனவிற்கு சார்பாக செயற்பட்டு வருகின்றார் என்றும் அவர் அவ்வாறு தொடர்ந்து செயற்பட்டால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டி ஏற்படும் என்றும் சுதந்திரக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தமை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை எதிர்த்து எந்த வேட்பாளர் போட்டியிட்டாலும் அவரை நாங்கள் ஆதரிக்கவேண்டிய சூழல் ஏற்படும். எமக்கு வேறு வழியில்லை. கோத்தபாய ராஜபக்ஷதான் எதிர்தரப்பு வேட்பாளர் என்று தீர்மானிக்கப்பட்டால் நாம் அவரை ஆதரிக்கவேண்டி வரும் ஆனால் அப்படியாகும் சந்தர்ப்பத்தில் கோத்தபாய ராஜபக்ஷ இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் சுதந்திரக்கட்சியின் கொள்கையை ஏற்றுக்கொள்ளவேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால் நாங்கள் அவருக்கு ஆதரவு அளிப்போம். வாசுதேவநாணயக்கார போன்றவர்களும் இந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர்.
எனினும் இன்று சுதந்திரக்கட்சியில் எமக்கு எதிராக சிலர் பேசிக்கொண்டிருக்கின்றனர் . என்னைப் பொறுத்தவரையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி எப்போதும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிரானதாகவே இருக்கவேண்டும். சுதந்திரக்கட்சி ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிரானதாக செயற்பட்டால் நாம் அந்தக் கட்சியில் நீடிப்போம். அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக போகின்ற வேறொரு கட்சியில் நாங்கள் இணையவேண்டிய தேவை ஏற்படும்.
ஒருகாலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியில் சஜித்பிரேமதாஸ அணியாக இருந்தவர்கள் இன்று ஜனாதிபதியை சுற்றி இருக்கின்றனர். அவர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சியின் பக்கம் சுதந்திரக்கட்சியை இழுத்து செல்லவே முயற்சிக்கின்றனர். அதாவது சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் போக்கில் ஜனாதிபதியை சுற்றியிருக்கும் இந்த பிரமுகர்கள் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறும் முக்கியஸ்தர்கள் மறுபுறம் சஜித் பிரேமதாஸவிற்கு மறைமுகமாக ஆதரவு வெளியிட்டு வருகின்றனர்.
அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். இதனை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். அதனால் தான் எமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிக்கை விடுக்கின்றனர். எங்கிருந்தோ வந்தவர்கள் எமது கட்சியை நிர்வகிக்க ஆரம்பித்தவிட்டனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஒருபோதும் கையை சுட்டுக்கொள்ளமாட்டார் என எண்ணுகிறோம். அவர் மீண்டும் ஒருபோதும் ஐக்கிய தேசியக்கட்சியின் பக்கம் செல்லமாட்டார். அவர் அவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக செயற்படும் பட்சத்திலேயே அவர் தொடர்ந்தும் இந்த நாட்டில் ஒரு செயற்பாட்டு ரீதியான அரசியலை முன்னெடுக்க முடியும் சுதந்திரக்கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் தற்போது சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்கும் போக்கில் இருப்பதாக எங்களுக்குத் தெரிகிறது.
பகலில் மைத்திரிபால சிறிசேன வேண்டும் என்று கூறுபவர்கள் இரவில் சஜித்திற்கு ஆதரவு வழங்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதாக தெரிகிறது. சுதந்திரக்கட்சியில் தற்போது 23 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 10 எம்.பி.க்கள் வரை ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர். ஆனால் பல முக்கிய பிரமுகர்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் பக்கம் சாயவே முயற்சிக்கின்றனர். அவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் பக்கம் சாய முயற்சிப்பவர்கள் எம்மை சுதந்திரக்கட்சியிலிருந்து வெளியேற்ற முற்படுகின்றனர்.
அது தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்ளவில்லை. நாங்கள் எப்போதும் போன்று ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே செயற்படுவோம். சுதந்திரக்கடசியிடம் தற்போது 15 இலட்சம் வாக்குகளே உள்ளன. ஆனால் தாமரை மொட்டிடம் 50 இலட்சம் வாக்குகள் உள்ளன. பலம் அந்த பக்கமே இருக்கின்றது. எனவே நாம் தான் சில விட்டுக்கொடுப்புடன் பொதுஜனபெரமுனவுடன் இணைந்து பயணிக்கவேண்டும் என்றார்.
Post a Comment