குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நோர்வேயில் இலங்கை முஸ்லிம்கள் இரங்கல்
- Farzan Basir -
இலங்கையில் கடந்தவாரம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் கொல்லப்பட்ட, காயமடைந்தவர்களை நினைவுகூரும் விதமாக,நோர்வேயில் வாழும் இலங்கை முஸ்லீம் சமூக அமைப்பான, ஐக்கிய இலங்கை முஸ்லீம் அமைப்பு ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்ச்சி தலைநகர் ஒஸ்லோவில் புதன்கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் நோர்வே அரசாங்கத்தின் சார்பில் நோர்வேஜிய பிரதி வெளிவிகார அமைச்சர் மரியன்னா ஹாகன் மிகக்குறுகிய நேர அழைப்பில் கலந்துகொண்டார். நோர்வேஜிய வெளிநாட்டமைச்சின் உயரதிகாரிகள், நோர்வேக்கான இலங்கை தூதுவர் அனுஷியா கூரே, பல்வேறு நாடுகளை சேர்த்த இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதிகள், தமிழ், சிங்கள, கிறிஸ்தவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பல்லின சமய தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நோர்வேஜிய முஸ்லீம் அமைப்பின் தலைவர் அனீஸ் ரவூப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது, தூதுவர் அனுஷா குரே, மற்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் மரியன்னா ஆகிய இருவரும் தங்கள் உரையின் போது கண்கலங்கினர். மரியன்னா நோர்வே அரசாங்கத்தின் சார்வில் தாக்குதலுக்கான கண்டனத்தையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அனுதாபங்களையும் தெரிவித்தார். தூதுவர் அனுஷியா குரே இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தினார்.
நிகழ்வில் உரையாற்றிய அமைப்பின் தலைவர் அனீஸ் ரவூப்,இலங்கையில் கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வுகள் நோர்வே வாழ் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள கவலையையும் உணர்வலைகளையும் விவரித்தார். சமய அனுஷ்டானங்களுக்கு மேலதிகமாக நோர்வேஜிய முஸ்லீம் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் ஆபிரிக்க நாட்டு சமய தலைவர்களும் இந்த நிகழ்வில் உரையாற்றினர்.
Post a Comment