தற்கொலை குண்டுதாரிகள் செல்வந்த குடும்பங்களைச் சேர்ந்த, உயர் கற்கை நெறிகளை முடித்தவர்கள்
தற்கொலை குண்டுதாரிகள் செல்வந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் உயர் கற்கை நெறிகளை முடித்தவர்கள் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
அதில் ஒருவர் பிரிட்டனிலும், அவுஸ்திரேலியாவிலும் பட்டப்படிப்பு கற்கை நெறியை மேற்கொண்டவர். என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்கூட்டியே வெளிநாட்டு உளவுப் பிரிவுகள் தகவல் வழங்கியிருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று -24- இடம்பெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளருடனான சந்திப்பின் போதே பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, தகவல் கிடைக்கப்பெற்றும் ஏன் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் இந்த விடயம் தொடர்பில் முழுமையான கவனம் செலுத்தப்பட்டது. இவற்றில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஜனாதிபதி எதிர்வரும் சில தினங்களில் பாதுகாப்பு பிரிவுகளில் மாற்றங்களை மேற்கொள்ளவிருப்பதாக ஜனாதிபதி அறிவித்தார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். தாக்குதலை மேற்கொண்ட இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை இவர்களுக்கும் வெளிநாட்டு அமைப்புக்களுக்கிடையிலான தொடர்புகளில் தற்பொழுது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்களுக்கான நிதி எங்கிருந்து வருகிறது என்பது தொடர்பிலும் தற்பொழுது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவிகளைப்பெற்று விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தாக்குதல்களை நடத்தியவர்கள் பயிற்சிகளை எங்குப் பெற்றனர் என்பது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதால் அது குறித்து விபரங்களை வெளியிடுவது தற்பொழுது சிரமம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Post a Comment