சிலை உடைப்பு, மாவனெல்லையின் சகவாழ்வுக்கு விழுந்த அடி
-எம்.எஸ்.அமீர் ஹுசைன்-
மாவனெல்லை – ரம்புக்கனை வீதியில் அமைந்துள்ள ரந்திவலை மற்றும் மஹந்தேகம பகுதியில் அமைந்திருந்த புத்தர் சிலைகளை சம்மட்டியால் தட்டி உடைத்தமை தொடர்பாக தொடர்ந்தும் தீவிர விசாரணைகள் தொடர்கின்றன. இந்த விசாரணைகளை கேகாலை பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி சாமிக பி. விக்கிரமசிங்க, கேகாலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஓ.பி. அமரபந்து உட்பட அவரின் கீழான அதிகாரிகளின் தலைமையில் விசாரணைகள் தொடர்கின்றன. இந்த சம்பவத்தோடு தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டு கேகாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிலை உடைப்பை கண்டித்து 2018 டிசம்பர் 29 ஆம் திகதி மாவனெல்லை நகரத்தில் பௌத்த தீவிர போக்குடைய குழுக்கள் சில இணைந்து ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஊர்வலத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததால் அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் ஊர்வலமும் நடைபெறவில்லை. இந்த ஊர்வலத்திற்கு முன்னர் மாவனெல்லை பிரதேசத்தில் சற்று பதற்றமான அசாதாரண சூழ்நிலை காணப்பட்டதாயினும் ஆர்ப்பாட்டம் தடை செய்யப்பட்டது என்ற செய்தி கிடைத்தவுடன் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். மாவனெல்லை மக்கள் மாத்திரமன்றி மாவனெல்லையை அண்டிய பிரதேச மக்களும் கூட இந்த செய்தியால் நிம்மதி அடைந்தனர்.
ஏன் இவ்வாறான ஒரு இனவாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை என்றவுடன் நிம்மதி அடைந்தனர் என்ற கேள்வி எழுகின்றது. அதற்கு ஒரே காரணம் அளுத்கமையிலும் திகனயிலும் ஏற்கனவே நடைபெற்ற சில அசம்பாவிதங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக ஆர்ப்பாட்டம் நடத்திய இனவாத சிங்கள அமைப்புக்களின் குழுவினர் அளுத்கமை நகரத்தையும் திகனையையும் எரித்து நாசமாக்கினர். அதனால் பெருமளவிலான முஸ்லிம்களது உடைமைகள் அழிக்கப்பட்டதால் மக்கள் பொருளாதார ரீதியாக நடுத்தெருவுக்கு இழுத்து விடப்பட்டனர். பாரிய வன்முறையாக மாறின. ஓரிரு தனிநபர்களின் செயற்பாடுகளே எமது சமூகத்தவர்களால் இனவாத வன்முறைகளுக்கு அடிப்படையாக அமைந்ததை ஒருபோதும் மறக்க முடியாது.
மாவனெல்லையிலும் 2001 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி நடைபெற்ற வன்முறையில் இதே போன்ற அழிவை மாவனெல்லை மக்கள் சந்தித்த கசப்பான அனுபவம் இன்னும் நினைவில் இருக்கின்றது. அதே நேரம் மாவனெல்லை கலவரம் நடைபெற்று அதனால் ஏற்பட்ட இன ரீதியான உறவில் ஏற்பட்ட விரிசலை மீண்டும் இணைத்து நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதற்காக மாவனெல்லை கல்விச் சமூகம், வர்த்தக சமூகம் உட்பட பல தரப்பட்டவர்களும் 10 வருடங்களுக்கு மேலாக கடுமையாக பாடுபட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்காக சிங்கள பௌத்த சமூகத்தில் எமக்காக குரல் எழுப்பக்கூடியவர்களை உருவாக்குவதென்பது மிகவும் சிரமமான காரியமாகவிருந்தது. அதிலும் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மாவனெல்லை வாழ் முஸ்லிம்களோடு தோளோடு தோள் நின்றுபாடுபட்ட ஒருவராக பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும் வைத்தியருமான கமகே இருந்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் அவரும் இறந்து இப்போது அந்த பணியில் பாரிய வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில் அதற்காக பௌத்த சமூகத்தில் எமக்காக பேசக்கூடியவர்களை எவ்வாறு நாம் உருவாக்குவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்திலேதான் இந்த சிலை உடைப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் எல்லாவிதமான சமாதான, நல்லிணக்க மற்றும் சகவாழ்வு நடவடிக்கைகளுக்கும் ஒருவிதமான பாதிப்பும் பின்னடைவும் ஏற்பட்டிருக்கின்றது. சாதாரண மக்கள் இதுபற்றி ஆழமாக சிந்திக்காவிட்டாலும் உயர் மட்டங்களில் அதிகார தரப்புக்களில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
குறித்த கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் இந்த செயலை செய்திருக்கமாட்டார்கள், அவர்கள் நிரபராதிகள் என்று அவர்களது பெற்றோர், உறவினர்கள் உட்பட அவர்களது குடும்பத்தில் நேசம் கொண்ட அனைவரும் கூறுகின்றனர். இதனை சிங்களவர்களே செய்துவிட்டு அவ்வழியால் சென்ற அப்பாவி இளைஞர்களைப் பிடித்து தாக்கி கட்டி பொலிசில் ஒப்படைத்தனர் என்பது அவர்களது குடும்பத்தாரது வாதமாகும். நாம் அதனை வைத்துக்கொண்டு அவர்களுக்கு சாதகமாக அனுதாபத்துடன் பேச முற்படுகின்றபோது இந்த குற்றச் செயலை விசாரணை செய்யும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளோ ”தடுப்புக்காவலில் உள்ள இளைஞர்கள் புத்தர் சிலைகளை உடைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். அதற்கு பயன்படுத்திய சம்மட்டியையும் சந்பந்தப்பட்ட நபரின் வீட்டில் இருந்து மீட்டுள்ளோம். அதனால் இது தொடர்பாக ஆழமாக விசாரணை செய்ய வேண்டும்” என்று கூறுகின்றனர்.
இந்த சம்பவம் மாவனெல்லையில் மாத்திரம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முழு இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றதை நாம் மறக்க முடியாது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக பாரபட்சமற்ற முறையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 26 ஆம் திகதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக புலனாய்வுப் பிரிவினர் பல கோணங்களில் விசாரணை செய்வதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறினார். இது தொடர்பாக பல அரசியல்வாதிகள் செய்தியாளர் மாநாடுகளை நடத்தி கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அதுரலியே ரதனதேரர் குறிப்பிடுகையில், இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் இருக்கின்றது என்பதை இந்த சம்பவங்கள் நிரூபிக்கின்றன. அதனால் முஸ்லிம் அரசியல்வாதிகள் தலையிட்டு விசாரணைகளை தடுக்காமல் ஆழமாகச் சென்று பின்னணியை கண்டுபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர்கள் அனைவரும் இதுவரையில் இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் ஒன்றில்லை என்று கூறி வந்தாலும் திரைமறைவில் இஸ்லாமிய பயங்கரவாதமும் பௌத்த மதத்திற்கு எதிரான சதித்திட்டமும் இருக்கின்றது என்பதை இந்த புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவங்கள் காட்டியுள்ளன. அதனால் பின்னணியில் யார் இருக்கின்றார்கள், வழிநடத்தும் இஸ்லாமிய அமைப்பு எது? எந்த இஸ்லாமிய நாடு பின்புலத்தில் இருந்து இவர்களை வழிநடத்துகின்றது? எங்கிருந்து இவர்களுக்கு பணம் வருகின்றது? மத்திய கிழக்கில் இயங்குகின்ற சர்வதேச நாடுகள் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்தி இருக்கின்ற ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கும் இந்த இளைஞர்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கின்றதா? என்ற வினாக்களுக்கு விடை காணும் வகையில் பல கோணங்களில் புலனாய்வுகளை நடத்த வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் அரசாங்கத்தையும் பாதுகாப்பு தரப்பினரையும் வலியுறுத்தி வருகின்றனர்.
இஸ்லாமியவாதிகள் இஸ்லாமிய பாசறைக்குள் மட்டும் இருந்துகொண்டு அல்லது சவூதி அரேபியாவில் இருந்து ரியால்களுக்காக அல்லது அங்கு குடியிருந்து தொழில் புரிந்துவிட்டு நாடு திரும்பிய நிலையில் இலங்கையின் பல்லின, மத, கலாசார சூழலை சிந்திக்காது செயற்பட்டால் இந்த நாட்டில் ஏனைய இனங்களோடு நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒற்றுமையை பூண்டோடு அழித்து சின்னாபின்னப்படுத்திவிட்டு இங்கு வாழ முடியுமா என்று சிந்திக்க வேண்டி இருக்கின்றது. இந்த குறுகிய வட்டத்திற்குள் வாழ முற்படும் இஸ்லாத்தின் ஒரு பிரிவினருக்காக நாம் இந்நாட்டின் இன நல்லிணக்கத்தை தாரைவார்த்து உடைத்து நொறுக்கி நடப்பது நடக்கட்டும் என்று வாழ முடியுமா என்றும் சிந்திக்க வேண்டி இருக்கின்றது.
அல்குர்ஆனின் வசனங்களை நாம் ஆழமாக ஆராய்ந்தால் சில விடயங்கள் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த அதுவும் அன்றைய அரேபிய சமூகத்திற்கு இஸ்லாத்தை போதனை செய்த 23 வருட காலப்பகுதிக்குள் இருந்த சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு இறங்கிய அல்குர் ஆன் வசனங்களாகவும் உள்ளன. நாம் முஸ்லிம்கள் என்ற வகையில் அல்குர்ஆனையோ நபியவர்களது வாழ்க்கை வழிகாட்டல்களையோ மறுக்க முடியாது. ஆனாலும் எல்லா இஸ்லாமிய சட்டங்களையும் இலங்கை போன்ற இஸ்லாம் அல்லாத மாற்று மத ஆட்சி நிர்வாகம் நடக்கின்ற நாட்டில் அமுல்படுத்த முடியாது.
இஸ்லாத்திலும் அல்குர்ஆனிலோ அல்லது நபியவர்களது வாழ்க்கை வழிகாட்டல்களிலோ முஸ்லிமல்லாதவர்களோடு எதிரி மனப்பான்மையில் வாழ வேண்டும் என்ற எவ்வாறான போதனைகளும் இல்லை. அதற்கு அல்குர்ஆனில் உள்ள 06 ஆவது ஸூரா அல் அன்ஆம் மற்றும் 60 ஆவது ஸூரா அல் முன்தஹினா ஆகிய சூராக்கள் சிறந்த ஆதாரங்களாகும்.
இவ்வாறு பார்க்கும் போது கடந்த 7 வருடங்களாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் இத்தகைய செயல்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு கடுமையான மனவேதனைக்குட்பட்டிருப்பதை மறக்க முடியாது. பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அல்லாஹ்வை மிக மோசமான முறையில் தகாத வர்த்தைகளால் திட்டிய பல சந்தர்ப்பங்களை நாம் மறக்க முடியாது.
அதே போன்று ஸூரா அல் முன்தஹினாவின் 08 ஆம் வசனம் பின்வருமாறு கூறுகின்றது. “மார்க்க விசயத்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இருப்பிடங்களில் இருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே, அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும் நீதம் செய்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதியாக நடப்பவர்களை நேசிக்கின்றான். 60: 08
இந்த வசனங்கள் முஸ்லிம்கள் அந்நிய சமூகத்தவர்களுடன் வாழுகின்ற போது எவ்வாறு அவர்களுடன் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும் வாழ்வதையும் சகவாழ்வை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றது.
அவ்வாறிருக்க பல்லின மத, மொழி, கலாசார பாரம்பரியங்களைக் கொண்ட இலங்கை போன்றதொரு நாட்டில் இன உறவை முறித்து முஸ்லிம்கள் மாத்திரம் தனித்துவமான ஓர் இனமாக வாழ முடியுமா? அதே நேரம் எமது இருப்பை கேள்விக்குறியாக்கும் பல செயற்றிட்டங்கள் திரைமறைவில் நடைபெறுகின்ற நிலையில் அவர்கள் எமது மத நடவடிக்கைகளையும் பொருளாதாரத்தையும் அழித்து நாசமாக்கி எம்மை வெற்று சமூகமாக்குவதற்காக தருணம் பாத்திருக்கின்றனர். அத்தகையவர்களுமக்கு இதுபோன்ற சந்தர்ப்பங்கள் கதவுகளை அகலத் திறந்து கொடுப்பதாக அமையக் கூடாது. எம்மை நாமே அழித்துக்கொண்டால் இந்நாட்டில் இஸ்லாத்தை எவ்வாறு வாழ வைப்பது? முஸ்லிம்களால் அரேபிய தீபகற்பத்திற்கு குடிபெயர முடியுமா? நாம் எமது நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றபோது பல கோணங்களில் இருந்து சிந்தித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம்.
All Muslim wish to punish the culprit who has done this kind of idiotic work, government and police need to investigate deeply to find out the truth not because of Muslim, few Muslim were arrested base on suspecting and end of the investigation they could be innocent, so Budish need to be silent , Most of Sri Lankan are suspecting Anti Muslim political and Budish group who are still targeting Muslim community in different way to launch a massive attack, Rajapaksa , vimal vira vamsa and sambika are suspected politician to achieve some benefits,
ReplyDeleteif anyone generally thinks, now a days Muslim are carefully walk in sri lanka thinking of past incident by Bu-dish extremist , they know well even small such things can bring big issue in sri lanka, so musims never think to do such things to Budish. Muslim has loving peace ,
all Buhish need to put this on their mind,
Also Muslim like to investigate and punish all culprit who has done past anti Muslim incidents in same manner, those impact were massive including many death. if you do the same job you are the police and defence forces otherwise you are ?????????????