Header Ads



ரணிலை பிரதமராக்க வேண்டும் என்ற, எந்த நோக்கமும் எமக்கு இல்லை - அநுரகுமார

மைத்திரி - மஹிந்த கூட்டணியின் சர்வாதிகார போக்கினை தோற்கடித்து ஜனநாயகத்தை வெற்றிகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளோம் எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, ரணிலை பிரதமராக்க வேண்டும் என்ற எந்த நோக்கமும் எமக்கு இல்லை எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின்  செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அங்கு மேலும் தெரிவித்த அவர், 

அரசியல் அமைப்பினை மீறியதாகவோ அல்லது மனநிலை சரியில்லை  என கூறி ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டுவர முடியும். ஆனால் அந்த நிலைமைக்கு இன்னமும் நாம் வரவில்லை. 

ஆகவே இப்போதாவது ஜனாதிபதி நிலைமைகளை சரியாக விளங்கிக் கொண்டு ஜனநாயகத்துக்கு இடமளிக்க வேண்டும்.

அத்துடன் மஹிந்த ராஜபக்ஷவும்  அவரது கூட்டணியும் வலுக்கட்டாயமாக ஆட்சியை கைப்பற்றி சர்வாதிகார போக்கில் செயற்பட ஆரம்பித்ததை அடுத்தே நாம் அனைவரும் நீதிமன்றம் செல்ல தீர்மானம் எடுத்தோம்.  

எனினும் சபாநாயகர் கரு ஜெயசூரிய நேர்மையாக தனது கடமையை செய்தார் என்பதை நாம் கூற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.