நீதிமன்றம் தொடர்பில், தெளிவான நம்பிக்கையிருக்கிறது - லக்ஷ்மன் கிரியெல்ல
நீதிமன்றம் தொடர்பில் எனக்கு தெளிவான நம்பிக்கையிருக்கிறது, ஏனென்றால் அரசியலமைப்பு அதனைவிட மிகவும் தெளிவாக இருக்கின்றது என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த வழக்கு விசாரணைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
நேற்று நாட்டுக்காக உரையாற்றிய ஜனாதிபதி கூறிய விடயங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். நாடாளுமன்றத்தில் கலவரம் ஏற்படவிருந்ததாகவும், உறுப்பினர்கள் பணம் கொடுத்து வாங்கப்படுவதனாலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக ஜனாதிபதி கூறினார்.
அரசியலமைப்பில் அப்படி ஒரு விடயமும் இல்லை. நாடாளுமன்றம் ஆரம்பித்த நாளில் இருந்துதான் கலவரம் ஏற்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் கொடுத்து வாங்கப்படுகின்றார்கள். அதனை தனியாக விசாரிக்க வேண்டும்.
இன்று வழக்கு இடம்பெறவிருப்பதனால்தான் ஜனாதிபதி நேற்று நாட்டுக்கு உரையாற்றினார். அவர் காதுக்கு எட்டியிருப்பது வெறுமனே வதந்திகள். எனவே, வதந்திகளை கவனத்தில் கொண்டு நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது.
எங்களை விட ஊடகவியலாளர்களான உங்களுக்கு தெரியும்தானே நாடாளுமன்றத்தை பற்றி. எனவே எனக்கு நம்பிக்கையிருக்கிறது. அரசியலமைப்பு கல்லில் எழுதியது போன்று தெளிவாக இருக்கின்றது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் நான்கரை வருடங்களுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது என்பது மிகத் தெளிவாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment