Header Ads



சிலோன் தவ்ஹீத் ஜமாஅத், நிறைவேற்றியுள்ள முக்கிய சில தீர்மானங்கள்

சிலோன் தவ்ஹீத் ஜமாத் மாதம்பை கிளை நடத்திய ஏகத்துவ எழுச்சி பொதுக்கூட்டம் நேற்றை தினம் மாதம்பை நகரில் நடைபெற்றது. குறித்த பொதுக்கூட்டத்தின் இறுதியில் அரசிடம் கோரிக்கை முன்வைத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். 

இலங்கையில் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் போதைப் பொருள் பயன்பாடு பல்வேறு வகைகளில் அதிகறித்துள்ளதுடன், குறிப்பாக மாணவர்கள் மத்தியிலும் போதைப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. போதைப் பொருட்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் அண்மையில் அறிவித்துள்ளார். போதைப் பொருள் கடத்தல் காரர்கள் என்று ஹெரோயின் போன்றவற்றை கடத்துபவர்களை மாத்திரம் கணக்கிட்டு தண்டனை வழங்குவதுடன் நிறுத்தாது, எந்தவொரு போதைப் பொருளாக இருந்தாலும்,  போதைப் பொருள் பயன்பாட்டாளர்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் என அதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் மேற்கண்ட தண்டனை வழங்கப்பட வேண்டும்.

சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் தான் குற்றங்கள் குறையும் என்ற வகையில் சாராயம், ஹெரோயின் என அனைத்து வகையான போதைப் பயன்பாட்டாளர்களும் இத்தண்டனைக்குறியவர்களாக அறிவிக்கப்பட வேண்டும்.

ஹெரோயின் போன்றவற்றுக்கு தடை விதித்து, தண்டிக்க முற்படும் இலங்கை அரசாங்கம் சாராய தயாரிப்புக்காக அனுமதி வழங்கியுள்ளது. சிகரட், பீடி போன்ற புகையிலை பொருட்களுக்கும் தாராள அனுமதி கொடுத்துள்ளது. இது போன்ற அனைத்து வகையான போதைப் பொருட்களும், புகையிலை சார்ந்த பொருட்களும் தடை செய்யப்படுவதுடன், சாராய மற்றும் சிகரட், பீடி கம்பணிகளுக்கும் தடை விதித்து போதையற்ற, புகையிலையற்ற சிறந்த தேசத்தை உருவாக்க அரசு முன்வர வேண்டும் என்றும் இப்பொதுக் கூட்டம் வாயிலாக கோரிக்கை வைக்கப்படுகிறது.

புத்தள மாவட்ட மக்களின் கோரிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

நம் நாட்டில் உள்ள பிரச்சினைகளில் குப்பைப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. கொழும்பின் கழிவுகளை கொட்டுவதற்கான இடமின்மையே இதற்குறிய பிரதான காரணமாக சொல்லப்படுகிறது.

குப்பைகளை மீள் சுழற்சி செய்து, அதன் மூலம் எரிபொருள் முதலான பல தேவைகளை வளர்ந்த நாடுகள் பூர்த்தி செய்து வருகின்றன. மேற்க்கு நாடுகளில் அதற்குறிய அறிவியல் ரீதியிலான முறைகள் கடைப்பிடிக்கப்படுவதினால் பல நாடுகளில் குப்பைப் பிரச்சினை ஒரு பூதாகரமான பிரச்சினையாகவே பார்க்கப்படுவதில்லை.

ஆனால் நம் நாட்டில் குப்பைகளை மீள்சுழற்சி செய்து பயன்படுத்தும் வழிமுறைகள் இல்லாத காரணத்தினால் மலைகளாக கொட்டி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் உள்ள அறிவியல் முறைமையை இலங்கை அரசும் பயன்படுத்தினால் இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கிடைத்து விடும்.

கொழும்பு பிரதேச குப்பைகளை புத்தளம் பகுதியில் கொட்டுவதற்கான திட்டத்தை ஆளும் அரசு அறிவித்து அதற்குறிய ஏற்பாடுகளையும் வேகமாக செய்து வருகிறது. அரசின் இந்த முடிவை எதிர்த்து புத்தளம் வாழ் மக்கள் தொடர் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு பகுதியின் குப்பையை இன்னொரு பகுதியில் கொட்டும் அரசின் முறையற்ற இத்திட்டத்தை எதிர்க்கும் பொது மக்களின் கோரிக்கைகள் உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட்டு மாற்றுத் திட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும். என இப்பொதுக் கூட்டம் கோரிக்கை வைக்கிறது.

 திகன, அம்பாறை, காலி கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்.

எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை வாழ் சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல்கள் முடிவுக்கு வராமல் தொடர்ந்த வன்னமே இருக்கிறது. ஆளும் நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து 03 வருடங்களுக்குள் காலி, அம்பாறை மற்றும் திகன ஆகிய பகுதிகளில் பெரும் கலவரங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக வெடித்தன.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அளுத்கமை கலவரத்தில் முஸ்லிம்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அளுத்கமை முஸ்லிம்களுக்கு எதிரான கலவரமே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமையுமளவு முஸ்லிம்கள் தங்கள் வாக்கு பலத்தை மஹிந்தவின் அரசுக்கு எதிராக பயன்படுத்தி புதிய நல்லாட்சி அமைய உதவினார்கள்.

ஆனால் நல்லாட்சி அரசுக்கு உறுதுணையாக இருந்த முஸ்லிம்கள் மீது இந்த ஆட்சியின் போதே காலி, அம்பாறை, திகனை ஆகிய பகுதிகளில் பெரும் கலவரம் தூண்டப்பட்ட பல்லாயிரக் கணக்கான கோடி பெறுமதியான  சொத்துக்களை இழந்து உயிர் சேதங்களையும் முஸ்லிம்கள் சந்தித்தார்கள். ஆனால் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இதுவரை எவ்விதமான நிவாரணங்களையும் ஆளும் அரசு முறையாக வழங்கவில்லை.

ஆளும் அரசு கலவரத்தில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு பூரணமான நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என இப்பொதுக் கூட்டத்தின் மூலம் கோரிக்கை வைக்கப்படுகிறது.

தம்புள்ளை பள்ளிக்கு உடனடி தீர்வு வேண்டும்.

தம்புள்ளை பள்ளிவாயல் பிரச்சினை கடந்த பல வருடங்களாக இழுபரி நிலையிலேயே காணப்படுகிறது. எந்த அரசு ஆட்சிக்கு வர வேண்டும் என்றாலும் தம்புள்ளை பள்ளிப் பிரச்சினையை காரணம் காட்டி முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள முயற்சிக்கலாம் என்கிற குறுகிய சிந்தனையினால் இதுவரைக்கும் தம்புள்ளை பள்ளிக்கு, முன்னால் அரசாங்கமோ, தற்போதைய ஆளும் அரசாங்கமோ எவ்விதமான தீர்வுகளையும் தரவில்லை.

தம்புள்ளை பள்ளிப் பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுத் தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இப்போது குறித்த பிரச்சினையை கண்டும் காணாமல் இருப்பது மிகவும் கண்டனத்திற்கு உரியதாகும்.

தம்புள்ளை பள்ளி விவகாரத்தில் முஸ்லிம்கள் பரிபூரணமாக ஒப்புக் கொள்ளுகிற மிகச் சிறந்த தீர்வையும், இனிமேலும் எவ்விதமாக பிரச்சினைகளுக்கும் இடம் கொடுக்காத வகையிலும் ஆளும் அரசு சிறந்ததொரு முடிவை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.

ஊடகப் பிரிவு,
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ


1 comment:

Powered by Blogger.