ஐ.நா.விடம் ஹக்கீம் முறைப்பாடு
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டக் கடமைப்பட்டவர்கள் உடனடியாக செயற்பட்டிருந்தால் அம்பாறை, கண்டி இனக்கலவரங்களைக் கட்டுப்படுத்தியிருக்க முடியுமெனத் தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அந்த இனவாத வன்செயல்களுக்குத் துணைபோனதாகக் கூறப்பட்ட பொலிஸ் உயரதிகாரிகளை சுட்டிக்காட்டி அவர்களை இடமாற்றம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்த போதும் அவ்வாறு நடைபெறவில்லை என விசனம்
தெரிவித்தார். அத்துடன் வெறுப்பூட்டக்கூடிய பேச்சுக்களை தடைசெய்வதற்கான சட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அவர் தனது அதிருப்தியை வெளியிட்டார்.
தற்பொழுது இலங்கை வந்துள்ள ஐ.நாவின் இடைக்கால வதிவிடப் பிரதிநிதி ரெரன்ஸ் டி.ஜோன்ஸ், இங்குள்ள ஐ.நாவின் நல்லிணக்கத்திற்கும் அபிவிருத்திக்குமான ஆலோசகர் கீதா சப்ஹர்வால் சகிதம் அமைச்சர் ஹக்கீமை நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சில் சந்தித்து யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நிலைமாறு கால நீதி தொடர்பில் ஏற்கெனவே மியன்மார், இந்தோனேசியா,மாலைதீவு போன்ற நாடுகளில் பணிபுரிந்து நீண்ட அனுபவம் வாய்ந்த ஐ.நாவின் இடைக்கால வதிவிட பிரதிநிதி ரெரன்ஸ் டி.ஜோன்ஸ் மூன்று மாத காலம் இலங்கையில் தங்கியிருந்து இங்குள்ள களநிலைவரம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ரெரன்ஸ் டி.ஜோன்ஸ், கீதா சப்ஹர்வால் ஆகியோர் யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் நாட்டில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தொடர்பிலும் நிலைமாறுகால நீதி தொடர்பிலும் கேள்விகளை எழுப்பியபோது அமைச்சர் பின்வருமாறு பதிலளித்தார்.
இலங்கையில் முன்னர் நீண்டகாலமாக அவசரகால சட்டம் நடைமுறையில் இருந்ததனால் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்குப் பொறுப்பானவர்கள் பொதுவான சட்டங்களின் கீழ் செயற்படாமல் குறுக்கு வழிகளை கையாள்வதற்குத் தொடர்ச்சியாக எத்தனித்து வருகின்றனர். இதனால் நீதியை நிலைநாட்டுவதில் தாமதமும் முறைகேடுகளும் ஏற்பட்டு வருகின்றன. துரதிஷ்டவசமாக தேசிய அரசினுள் நிலவுகின்ற முறுகல் நிலையின் காரணமாக ஸ்திரமற்ற தன்மை காணப்படுவதான ஒரு தோற்றப்பாடு உள்ளது. ஆயினும் முன்னைய அரசாங்கத்தைவிட இந்த ஆட்சியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொறிமுறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அவதானிக்கப்படுகின்றது.
அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புன்னக்குடாவில் பொதுமக்களுக்கு சொந்தமான காணியில் இராணுவ ஆயுதக்களஞ்சியம் அமைக்கப்படும் விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியது. யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் கூட வடக்கிலும் கிழக்கிலும் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில் படையினரின் பிரசன்னம் பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை உண்டுபண்ணியுள்ளது.
மன்னார், சிலாவத்துறையின் நகர் பகுதி கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றோம். திகன சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் இழப்பீடுகள் வழங்கப்படவில்லை என்ற குறை நீடித்து வருகின்றது.
இனரீதியான வன்முறைகளின் போது கடமையில் ஈடுபடுத்தப்படும் கலகம் அடக்கும் பொலிஸ் படையில் மூவினத்தினரும் இடம்பெற செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் முன்வைத்துள்ளோம். ஒரு சம்பவம் நடைபெற்ற உடனேயே போலிசாரே அங்கு விரைய வேண்டி இருக்கிறது. பொலிசாரினால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாத போதே படையினர் வரவழைக்கப்படுகின்றனர். பொலிஸ் திணைக்களத்தை பொறுத்தவரை சீர்திருத்தங்கள் அவசியமாகும். குற்றச்செயல்களை கையாளும் விதம் குறித்து புதிய சுற்றுநிருபங்கள் ஊடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும்.
குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கும் இனவாத வன்செயல்கள் ஏற்படுவதற்கும் சமூக வலைத்தளங்களும் பெருமளவு காரணமாகும்.அவற்றினூடாக பதிவேற்றம் செய்யப்படும் உணர்வுகளைத் தூண்டக்கூடிய தவறான செய்திகளை கண்டறிந்து அவற்றை வடிகட்டி முறையான விதத்தில் கையாள்வதற்கான வழிவகைகள் ஓரளவு மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவருகிறது என்றார்.
அமைச்சர் ஹக்கீம் கூறியவற்றை கவனமாக செவிமடுத்த ஐ.நா. அதிகாரிகள், அந்த விடயங்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என்றனர். இந்த சந்திப்பில் அமைச்சரின் இணைப்பு செயலாளர் ரஹ்மத் மன்சூரும் உடனிருந்தார்.
சில வருடங்களுக்கு முன்னர் தான் “இலங்கை விடயங்களில் UN தலையிடகூடாது” என்று ஊர்வலங்கள், கையெழுத்துக்கள், முஸ்லிம்நாட்டு பயணங்கள் எல்லாம் செய்து தங்கள் நாட்டு பற்றை காட்டினார்கள்.
ReplyDeleteஇப்போ தலையிடவேண்டும் என கெஞ்சுகிறார்கள்.
கடைசியாக ஞானசேர பிக்கு தானே இதை கண்டுபிச்சாரு, இவர்களின் நாட்டு பற்று என்பது உலக மகா நடிப்பு என்று.
நீங்கள் கூறுவது ஒன்றும் இடம்பெறாவிட்டால் என்ன பூனாவிக்கு அரசோடு இருக்கனும்.. சத்தியமும் சாணக்கியமும் இந்த சமூகத்தை காட்டிக்கொடுத்து கூட்டியும் கொடுக்கிறார்கள்...
ReplyDelete