முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட, வாக்குறுதிகளுக்கு என்னாச்சு..?
-A.J.M.Nilaam-
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது சிங்கள வாக்குகள் மைத்திரிக்குக் குறைவாகவே இருந்தன. எனவே அவர் வெற்றிபெற முழுமையாகவே சிறுபான்மைகளின் வாக்குகளைப் பெறவேண்டியிருந்தது. பொது அபேட்சகர் எனும் நிலைப்பாடும் ஐக்கிய தேசியக் கட்சிக்குரிய வாக்குகளும் அதை சாதகமாக்கின.
எனினும் சிறுபான்மைகளோடு எவ்வித உடன் படிக்கைகளையும் மைத்திரி செய்து கொள்ளவில்லை காரணம் அதனால் தனக்குக் கிடைக்க விருக்கும் சிங்கள வாக்குகளின் தொகை குறையலாம் எனும் அச்சமேயாகும். தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு பிரச்சினை தீர மைத்திரியிடமிருந்து வாக்குறுதியைப் பெற்றுக்கொண்டபோதும் முஸ்லிம்கள் எந்த நிபந்தனைகளையும் விதிக்காமல் 100 வீதம் ஆதரித்தார்கள். காரணம் மஹிந்த அரசில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர் அட்டூழியங்கள் நிகழ்ந்ததேயாகும். வழமையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு முஸ்லிம்களின் வாக்குகள் 25% வீதம் கிடைப்பதுண்டு இத்தேர்தலில் அந்த வாய்ப்பை அக்கட்சி இழந்து விட்டது. இதனால் முஸ்லிம் வாக்குகள் 100% வீதம் மைத்திரிக்கே கிடைத்தன. முடிவில் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே மைத்திரி மஹிந்தவை வென்றார். முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாக மைத்திரிக்கே வாக்களிக்காதிருந்திருப்பார்களாயின் நிலைமை என்ன? அவர் தோற்றேயிருப்பார். அவ்விதம் நிகழ்ந்திருக்குமாயின் தனக்கு என்ன ஆபத்து நேர்ந்திருக்கும் என்பது பற்றி அவரே பகிரங்கமாகச் சொல்லிக்காட்டியிருந்தார்.
ஆக அன்று முஸ்லிம்கள் அவருக்குச் செய்த பேருதவியால்தான் எல்லா வகையிலும் மீண்டு தற்போது ஆளுமை செலுத்திக்கொண்டிருக்கிறார். தமக்கு நேர்ந்த அட்டூழியங்களை இவர் விசாரித்துத் தண்டனை வழங்கி நிவாரணமும் தந்து இனி அவ்வாறு நிகழாதிருக்கச் செய்வார் என்பதற்காகவே முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாக அவருக்கு வாக்களித்திருந்தார்கள்.
எனினும் இவரது ஆட்சியிலும் கூட மரத்திலிருந்து விழுந்தவனை மாடு முட்டியது போல் ஆகிவிட்டது. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது போல் எனும் உவமையையும் இங்கு குறிப்பிடலாம். 2015 ஆம் ஆண்டு மைத்திரி முஸ்லிம்களுக்கு வழங்கிய பிரசுரம் இப்படி இருந்தது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது மைத்திரிபால சிரிசேன முஸ்லிம்களின் மீது பரிவு கொண்டு நடந்து கொண்டிருக்கும் இந்த சர்வதிகார குடும்ப ஆட்சியில் முஸ்லிம்களுக்கு கிடைத்த பரிசில்களும் பயன்களும் என ஒரு பிரசுரத்தை வெளியிட்டிருந்தார். இது மைத்திரி தேசத்தின் சுபீட்சம் எனும் தலைப்பில் காணப்பட்டது. இதில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு நிகழ்ந்த அநியாயங்கள் விலாவாரியாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.
1) அநுராதபுரத்தை மல்வத்து ஓயா பள்ளிவாசல் தாக்கப்பட்டது.
2) இரத்தினபுரி 150 பௌத்த தேரர்களைக் கொண்ட குழு ஜெய்லானி பள்ளிவாசலைத் தாக்குவதற்கான முயற்சி.
3) மாத்தறை கந்தர பள்ளிவாசல் தாக்குதல்.
4) குருநாகல்– நாரம்மல பள்ளிவாசலுக்கு சுபஹ் தொழுகைக்காகச் சென்றவர் தாக்கப்பட்டார்.
5) காலி ஹிரும்புர முஹ்யத்தின் ஜும்ஆ பள்ளிவாசல் தாக்கப்பட்டது.
6) கேகாலை ஜும்ஆ பள்ளிவாசல் தாக்கப்பட்டு ஜன்னல்கள் உடைக்கப்பட்டன.
7) இரத்திபுரி ஓபநாயக்க பள்ளிவாசல் தாக்கப்பட்டமை.
8) கம்பஹா மஹர பள்ளிவாசல் தாக்கப்பட்டமை.
9) கம்பஹா மஹர பள்ளிவாசலை மூடுமாறு அமைச்சர் உத்தரவு.
10) கொழும்பு பெபிலியான பிரதேசத்தில் அமைந்துள்ள பெஷன்பக் நிறுவனம் தாக்கப்பட்டது.
11) கம்பளை நகரில் முஸ்லிம் சகோதரருக்குச் சொந்தமான லக்கி எம்போரியம் தாக்கப்பட்டது.
12) மட்டக்களப்பு நாவலடி மஸ்ஜிதுன்நூர் பள்ளிவாசல் தாக்கப்பட்டது.
13) கொழும்பு கிரேண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்கப்பட்டது.
14) திருகோணமலை புல்மோட்டைப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 1500க்கு மேற்பட்ட ஏக்கர் காணிகளை பௌத்த கோயில் அமைக்க சுவீகரிக்கப்பட்டது.
15) மாத்தறை இஸ்ஸதீன் மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜிதுத்தக்வா பள்ளிவாசலின் பதிவினை புத்த சாசன அமைச்சு இரத்தாக்கியது.
16) அநுராதபுரம் கெக்கிராவ A 9 வீதியில் அமைந்துள்ள ஜும்ஆ பள்ளிவாசல் காடையர்களால் தாக்கப்பட்டது.
17) மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவிகள் அபாயா அணிந்து வருவது தடை செய்யப்பட்டது.
18) தெஹிவளை பொலிஸ் நிலையம், தாருஷ்ஷாபிஈ பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்படுவதை நிறுத்துமாறு உத்தரவிட்டது.
19) தெஹிவளை, அத்திடிய மாவத்தையில் அமைந்துள்ள ஹிபா பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதை நிறுத்துமாறு கோரப்பட்டது.
20) கண்டி அம்பதென்ன மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் தாக்கப்பட்டமை.
21) தம்புள்ளைப் பள்ளிவாசலைச் சுற்றி வாழ்ந்த சுமார் 107 முஸ்லிம் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டமை.
22) போதைப்பொருட்களைக் கடத்துவதற்காக முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா பயன்படுத்தப்படுகிறது என BBS பகிரங்கமாக அறிக்கையிட்டது.
23) முற்றுமுழுதாக ஹலால் முறையினை ஒழிக்க வேண்டுமென பத்திரிகையாளர் மாநாடு நடத்தப்பட்டது.
24) மாவத்தகம பள்ளிவாசலுக்கு முன்னால் காணப்பட்ட ‘அமைதி’ எனும் பலகை தீக்கிரையாக்கப்பட்டமை.
25) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அமைந்திருந்த முஸ்லிம்களுக்கான தொழுகை அறை மூடப்பட்டது.
26) கேகால்ல, மாவனெல்ல நகரில் ஹஸன் மாவத்த எனக் காணப்பட்ட விளம்பரப் பலகையை அநகாரிக தர்மபால மாவத்தை என பலவந்தமாக மாற்றியமை.
27) தம்புள்ளை நகர பள்ளிவாசலுக்கு இரு கைக்குண்டு வீசப்பட்டமை.
28) மன்னார் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை அச்சுறுத்தும் வகையில் BBS வில்பத்து சரணாலயத்துக்குச் சென்று முஸ்லிம்களை அச்சுறுத்தியமை.
29) BBS அமைப்பு ரிஷாத்பதியுதீனின் அமைச்சுக்குச் சென்று அட்டகாசம் புரிந்தமை.
30) அளுத்கமையிலும் பேருவளையிலும் இனக்கலவரம்.
31) மாவனெல்லை மஸ்ஜித் தாருல் ஹிக்மாவை மூடுமாறு இரண்டு தேரர்கள் உத்தரவு.
32) பாணந்தறை நோலிமிட் வர்த்தக நிலையம் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டமை.
33) தம்புள்ளை நகர பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல்.
34) நோன்புகாலத்தில் கிறீஸ் யக்காக்களை முஸ்லிம் ஊர்களில் உலாவ விட்டு பெண்களை பயமுறுத்தி கிறீஸ் யக்காக்களை இராணுவ முகாம்களில் மறைத்து வைத்தமை.
என்றெல்லாம் அதில் காணப்படுகின்றன. இவற்றில் ஒரு வேடிக்கை ரிஷாத் பதியுதீனின் விவகாரமேயாகும். அன்று மஹிந்த அரசு மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை அச்சுறுத்தும் வகையில் B.B.S வில்பத்து சரணாலயத்திற்குச் சென்று முஸ்லிம்களை அச்சுறுத்தியதாகவும் B.B.S அமைப்பு ரிஷாத் பதியுதீனின் அமைச்சுக்குச் சென்று அட்டகாசம் புரிந்ததாகவும் கூறிய மைத்திரியே வெளிநாடு சென்றிருக்கையில் வில்பத்து கல்வி சுவீகரிப்பில் கையெழுத்திட்டிருந்த தாகும். அதே அமைச்சரை இப்போதும் வைத்துக்கொண்டு தான் அவர் இதைச் சாதித்துக் கொண்டிருக்கிறார்.
இதை விடவும் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் மஹிந்தவின் ஆட்சியின் போது முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்ந்த அட்டூழியங்களை விடவும் மைத்திரியின் இந்த ஆட்சியில் அதிகமாக நிகழ்ந்ததேயாகும். மஹிந்த ஆட்சியின் இறுதிக் காலகட்டத்தில் தான் முஸ்லிம்கள் வெறுத்தார்கள். எனினும் முஸ்லிம்கள் மைத்திரி ஆட்சியேற்ற ஆரம்பத்திலேயே வெறுக்கும் நிலை உருவாகியிருக்கக் கூடாது.
முன்பு தனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு அட்டூழியங்கள் நிகழ்ந்ததை மஹிந்த தேர்தலில் தோற்றபின்பே உணர்ந்தார். எனினும் ஒப்புக்காக வருத்தம் மட்டுமே பட்டுக்கொண்டார். முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று இதுவரை அவருக்குத் தோன்றவில்லை. தப்பித்தவறி அவர் வென்றிருந்தால் நிலைமை என்ன? ஒப்புக்காகவும் கூட அவர் வருந்தியிருக்க மாட்டார் அல்லவா?
தனது தரப்பு ஆளுமையை அரசியலில் மீண்டும் பெறவேண்டுமாயின் ஜனாதிபதி தேர்தலில் முழு நாடும் ஒரே தொகுதியாக இருப்பதால் சிங்கள வாக்குகளால் மட்டுமே முடியாது என்பதை இவர் இப்போது நன்றாகப் புரிந்து கொண்டே முஸ்லிம்களை தாஜா செய்கிறார். முஸ்லிம்களுக்கு எதிராக மைத்திரி ஆட்சியில் நிகழும் அநியாயங்களையே மஹிந்த சுட்டிக்காட்டுகிறார். ஆக புதியன புகுதலும் பழையன கழிதலுமாக இவை ஆகிவிட்டிருக்கின்றன.
பழையன கழிதலுக்கு அடையாளமாகவே முன்பு பாதிக்கப்பட்ட சில முஸ்லிம் கிராமங்களும் கூட மஹிந்த தரப்புக்கு வரவேற்பு வழங்குகின்றன. எதிர்காலத்தில் மஹிந்தவைவிட்டு முஸ்லிம்களை அகற்றவே திட்டமிட்டு எதிர்த்தரப்பினர் முஸ்லிம்களுக்கு எதிராக அட்டூழியம் புரிந்ததாக மஹிந்த தரப்பு கூறும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.
நாம் குற்றவாளிகளாக இருப்பின் இதுவரை ஏன் எம்மை விசாரிக்கவோ தண்டிக்கவோ இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. நாம் பொறுப்பல்ல என்பதாலேயே எம்மை விட்டு வைத்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் முஸ்லிம்களுக்கு வழங்கிய வாக்குறுதியை இதுவரை ஏன் நிறைவேற்றவில்லை எனவும் கூறலாம்.
அது மட்டுமல்ல தனது அரசில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்ந்த அட்டூழியங்களையாவது இதுவரை மைத்திரி விசாரித்து தண்டனை வழங்கி பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கியிருக்கின்றாரா? காலியிலும் அம்பாறையிலும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டது என்னவாயிற்று. திகனையில் கைது செய்யப்பட்ட அமித் தண்டிக்கப்படுவாரா அல்லது வழக்கம் போல் பிணை வழங்கப்படுமா? ஞானசார தேரர் முன்புபோல் நீதிமன்றத்துக்கு ஆஜராகாமலிருக்க விசேட சலுகை பெறுவாரா? என்றெல்லாம் இப்போது முஸ்லிம்கள் அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஏனெனில் மீன்பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை என்பது போலதான் இதுவரை முஸ்லிம்களின் விடயத்தில் அனைத்தும் நிகழ்ந்திருக்கின்றன. சந்தியா எக்னெலி கொடவை நீதிமன்றத்தில் ஏசியதற்காகவே ஞானசாரர் குற்றவாளியாகிருக்கிறார். முஸ்லிம்களுக்கு இவர் செய்த அனைத்து அட்டூழியங்களுக்காகவும் அல்ல அந்தளவுக்குத்தான் முஸ்லிம்களுக்கான முக்கியத்துவம் காணப்படுகிறது.
இறைவனிடம் கை ஏந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுது இல்லை
ReplyDeleteBesides these major planned attacks to Muslims
ReplyDeleteThere are unreported many incidences effect daily life of our brothers living with Singhalese area.
Daily businesses all other daily activities and even waiting in the queue in government hospitals our people face problem for the only reason they are Muslims differently dressed
No one look into this grave pathetic situation