Header Ads



மூடப்பட்டுள்ள வாய்களை திறக்க நேரிடும் - துமிந்த எச்சரிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானங்கள் சம்பந்தமாக எவராவது பொய்யான கருத்துக்களை வெளியிட்டு வருவார்கள் என்றால், தான் உட்பட கட்சியின் தலைவர்களினால் மூடப்பட்டுள்ள வாய்களை திறக்க நேரிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சில் இன்று -18- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது கூறிய பொய்யான கருத்துக்களை மீண்டும் கூறிக்கொண்டு சிலர் நாடு முழுவதும் செல்கின்றனர்.

அவர்கள் இவ்வாறு தொடர்ந்தும் செயற்படுவார்கள் எனில் உண்மையில் என்ன நடந்தது என்பதை நாட்டுக்கு தெளிவுபடுத்த நேரிடும் என்றும் கூறியுள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 16 பேரை காப்பாற்றவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 23 பேர் நம்பிக்கையில்லா பிரேரணையில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த சிறிய அணியினர் அரசாங்கத்தில் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமில்லை. அரசாங்கம் சிறந்த யோசனைகளை கொண்டு வரும் போது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

அத்துடன் என்னை ஐக்கிய தேசியக் கட்சியை நோக்கி தள்ள சிலர் முயற்சித்து வருகின்றனர். நானோ, அமைச்சர் மகிந்த அமரவீரவோ எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையப் போவதில்லை.

என் மீது குற்றம் சுமத்தும் நபர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டவர்கள் எனவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.