யா அல்லாஹ், இலங்கை முஸ்லிம்களை பாதுகாப்பாயாக..!
நமது எதிர்காலம் நமது கரங்களில்தான் இருக்கிறது
இலங்கை முஸ்லிம்களாகிய நாம் மிகவும் நெருக்கடியான காலகட்டமொன்றைச் சந்தித்திருக்கிறோம். இந்த நாட்டில் வாழ்வதா? நாட்டை விட்டும் வெளியேறுவதா? இந்த நாட்டில் நமது சந்ததிகள் வாழ முடியுமா? இன்றேல் இப்படியே காலாகாலாமாக இனவாதத்துக்கு நமது உயிர்களையும் உடைமைகளையும் பலி கொடுப்பதா? என்பதே இன்று எல்லா முஸ்லிம்களின் மனதிலும் எழும் பிரதான கேள்வியாக உள்ளது.
1983 ஜூலைக் கலவரமே இந்த நாட்களில் நமது கண்முன் வந்துபோகின்றன. தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அதே நிலை முஸ்லிம்களுக்கும் வந்துவிட்டதா எனும் கேள்விக்கு அது வெகுதூரத்தில் இல்லை என்பதே பலரிடமிருந்தும் விடையாக வருகிறது. தமிழர்களுக்கு எதிராக ஒரே நாளில் கலவரத்தை அரங்கேற்றியவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டம் கட்டமாக கவலரத்தை கட்டவிழ்த்துவிடுகிறார்களா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.
இலங்கை முஸ்லிம்கள் எப்போதுமே இந்த நாட்டுக்கு துரோகம் செய்ய நினைத்ததில்லை. பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இலங்கை அரசாங்கத்துக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் பக்கபலமாகவே இருந்திருக்கிறார்கள். '' யுத்த காலத்தில் முஸ்லிம்கள்தான் எம்மைப் பாதுகாத்தார்கள். முஸ்லிம் சமூகம் எப்போதும் எம்முடன்தான் இருந்துள்ளது. இவ்வாறான முஸ்லிம் சகோதரர்களுக்கு ஏன் இந்த துரோகத்தை செய்கிறார்கள். இந்த வன்முறையாளர்கள் துரோகிகள்'' என பாதுகாப்புப் படைகளின் தளபதி அட்மிரல் ரவி விஜேவர்தன நேற்று முன்தினம் ஊடக மாநாட்டில் குறிப்பிட்ட கருத்துக்களே இதற்குச் சாட்சியாகும்.
இவ்வாறான பாரம்பரியத்தைக் கொண்ட முஸ்லிம்களை சிங்கள பெரும்பான்மை சமூகம் இந்த நாட்டைச் சூறையாட வந்தவர்களாக நோக்குவதற்கான காரணம் என்ன? இது எங்கிருந்து ஆரம்பித்தது? இந்த இனக்குரோத சிந்தனையை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்தது யார்? இதில் முஸ்லிம் சமூகம் விட்ட தவறுகள் என்ன? என்ற கேள்விகளுக்கு அவசரமாகவும் அவசியமாகவும் விடை காண வேண்டிய கட்டத்துக்கு முஸ்லிம் சமூகம் வந்துள்ளது.
இன்று முஸ்லிம்களுக்கு எதிராக ஏராளமான குற்றச்சாட்டுக்கள் பெரும்பான்மை சகோதரர்களாலும் இனவாதிகளாலும் முன்வைக்கப்படுகின்றன. இவற்றில் மிகப் பெரும்பாலானவை இட்டுக்கட்டப்பட்டவை. அடிப்படையற்றவை. ஆனாலும் சில குற்றச்சாட்டுக்களில் நியாயங்கள் இருக்கின்றன. அவ்வாறெனில் நியாயமான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொண்டு அவற்றைத் திருத்திக் கொள்ள முஸ்லிம் சமூகம் தயாரா? அப்படியானால் அதை எங்கிருந்து தொடங்கப் போகிறோம்? இதை வழிநடத்துவது யார்? என்ற கேள்விகளுக்கும் நாம் இன்றே விடை காண வேண்டியுள்ளது.
மறுபுறம் நாம் அல்லாஹ்வுக்கு அடுத்தாக இந்த நாட்டின் அரசாங்கம் மீதும் பாதுகாப்புப் படையினர் மீதுமே நமது இருப்பை ஒப்படைத்திருக்கிறோம். அவ்வாறான நிலையில் நம்மைப் பாதுகாக்க அரசாங்கமும் படையினரும் தவறியிருக்கின்றனர். கண்டியில் மாத்திரமன்றி அளுத்கம, கிந்தோட்டையிலும் இவ்வாறுதான் செய்தனர். வன்முறையாளர்கள் கலவரத்தை அரங்கேற்ற பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் அதை கைகட்டி வேடிக்கை பார்த்திருக்கின்றனர். சில இடங்களில் தாக்குதலுக்கு துணை போயுள்ளனர். இதற்கான கண்கண்ட சாட்சிகள் உள்ளன. இந்த விடயத்தை உலமா சபை பிரதிநிதிகள் பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபரின் முன்னிலையே எடுத்துக் கூறியுமிருக்கின்றனர்.
ஆக, முஸ்லிம்களின் ஒட்டுமொத்த வாக்குகளால் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியும் பிரதமரும் அதுவும் பிரதமரே சட்டம் ஒழுங்கு அமைச்சராகவிருக்கின்ற நிலையில் முஸ்லிம் மக்களுக்காக சட்டத்தை சரிவர அமுல்படுத்தவில்லை என்றால் அரசியல் ரீதியாக எமக்கு பாதுகாப்பு தரப் போவது யார்? இந் நிலை நீடித்தால் எதிர்காலத் தேர்தல்களில் முஸ்லிம்கள் நிச்சயம் வாக்களிக்கக் கூட முன்வரப்போவதில்லை. இது எவ்வளவு பெரிய அபாயம்?
கண்டி கலவர சூழ்நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமது சக்திக்குட்பட பணிகளை இரவு பகல் பாராது செய்தார்கள் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனாலும் முஸ்லிம் அரசியல்பிரதிநிதிகள் மீது முஸ்லிம் சமூகம் எப்போதே நம்பிக்கை இழந்துவிட்டது. இவ்வாறான இக்கட்டான சமயங்களில் அவர்கள் தமது பதவிகளைத் துறப்பார்கள்... அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பார்கள்.. அரபு நாடுகளின் அழுத்தத்தை இலங்கைக்கு பெற்றுக் கொடுப்பார்கள்... என்றெல்லாம் இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதும் நம்பப் போவதில்லை. நாம் வாக்களித்து பாராளுமன்றுக்கு அனுப்பிய அத்தனை 21 எம்.பி.க்களும் பதவிகளுக்காக ஆளும் தரப்பில் இருக்கையில் எமக்காக எல்லை தாண்டிக் குரல் கொடுப்பார்கள்.. தமது சுகபோகங்களை தூக்கி எறிவார்கள் என எதிர்பார்ப்பது எவ்வளவு மடமைத்தனம்?
இப்படி நமது எதிர்காலம் குறித்து எழும் இந்த நியாயமான கேள்விகளுக்கு நாம் ஒவ்வொருவரும் விடை காணக் கடமைப்பட்டுள்ளோம். நமக்காக யாரும் வருவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போய்விட்டன. அல்லாஹ்வுக்கு அடுத்ததாக நமது எதிர்காலத்தை நாமே திட்டமிட வேண்டியிருக்கிறது. அதற்கிருக்கும் ஒரே வழி கல்விதான்.
கல்வியில் முஸ்லிம் சமூகம் மென் மேலும் அக்கறை காட்ட வேண்டும். கல்வியும் பண்பாடுமற்ற நான்கு இளைஞர்கள் செய்த செயல்தான் இன்று இலங்கை முஸ்லிம்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. இன்னுமின்னும் இவ்வாறான இளைஞர்களைத்தான் நமது சமூகம் பிரசவிக்கப் போகிறதா? இஸ்லாமிய விழுமியங்களைப் புறந்தள்ளிய போதைக்கு அடிமையானவர்கள்தான் நமது சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்களா? இல்லை கல்வி அறிவும் மார்க்க அறிவும் ஒரேசேரப் பொருந்திய பண்பாடும் ஒழுக்கமும் கொண்டவர்கள்தான் நமது சமூகத்தின் அடுத்த தலைமுறையினராக வர வேண்டுமா? என்ற கேள்விகளுக்கு விடை காண வாருங்கள். அதன் மூலமாக மாத்திரமே இந்த நாட்டில் எதிர்காலத்தில் எம்மால் தலை நிமிர்ந்து வாழ முடியும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
அல்லாஹ் இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாப்பானாக.
(விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்)
சகோதரர்களே அஸ்ஸலாமுஅலைக்கும்.
ReplyDeleteகடந்த பல நாட்களாக நமது நாட்டில் நமது சமுதாயத்துக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனவாத செயல்களைக் கருத்தில் கொண்டு நம்மை நாம் கேட்க வேண்டிய கேள்விகள்
1. சிங்களவர்கள் ஏன் நம்மை அடிக்கின்றார்கள் / நம் சொத்துக்களை ஏன் எரிக்கின்றார்கள் / நமது சமுதாயம் செய்த தவறுகள் என்ன? நம்மில் தவறுகள் இருப்பின் அவற்றை எவ்வாறு திருத்தி் கொள்வது?
2. நடைபெற்ற, நடைபெறுகின்ற நிகழ்வுகளில் இருந்து நாம் கற்ற பாடங்கள் என்ன?
3. இந்த நாசகார செயல்கள் இத்துடன் முடிந்து விடுமா அல்லது தொடரப்போகும் பேரழிவுகளுக்கு இதுதான் ஆரம்பமா?
4. அல்லது அப்பப்போ இப்படி அழிவுகள் நடக்கும். உண்மையா பொய்யாஎன்று கூட தெரியாத பேஷ் புக்,வட்ஸ்அப் செய்திப்பரிமாற்றம், எந்தவிதமான நன்மையும் தராத ஹர்த்தால்கள், பாதிக்கப்படாதவர்கள் பாதிக்கப்பட்டோருக்கு சாப்பாட்டு பார்சலுடன் முடிந்த உதவிகள் என்றுதான் நமது எதிர்காலம் இருக்குமா?
5. இதுதான் ஆரம்பம் என்ற உண்மை உணரப்படுகின்றதென்றால், நமது எதிர்கால சந்ததிகள் நிம்மதியாக வாழ என்ன செய்யப் போகின்றோம்?
அவர்கள் முஸ்லீம் நாடுகளுக்கு அல்லது பெரும்பான்மை கிழக்குக்கு ஹிஜ்ரத் போவதா?
6.அல்லது நம்மை நாமே பாதுகாக்க வேண்டிய வழிவகைகளை ஆராய்ந்து அதற்கேற்ப செயற்படுவதா?
7.அப்படி இல்லை என்றால் பெரும்பான்மை சமுதாயங்களுடன் சமரசமாக வாழும் முறைகளை சிந்தித்து செயலாற்றுவதா?
உங்களின் மேலான கருத்துக்களை பதிவிட்டால் அடுத்த கட்ட நகர்வை நாம் கூட்டாக சிந்தித்து செயற்படலாம்.