Header Ads



மரபணு மாற்றம் செய்யப்பட்ட "புதிய இனம்"


இது சிங்கள இனமல்ல.. சிங்கள மக்கள் வேறு.. இவர்கள் வேறு. சிங்கள மக்கள் எங்களோடு இரண்டறக் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... ஓரிரண்டு வருடங்களல்ல.. ஒரு மிலேனியத்துக்கும் மேலாக.. அவர்கள் எங்களைத் தெரிந்திருக்கிறார்கள்.. நாம் அவர்களைத் தெரிந்திருக்கிறோம்.. அவர்கள் எங்களை வெறுக்கவுமில்லை.. நாம் அவர்களைப் பகைக்கவுமில்லை.. அவர்கள் எங்களை விசனத்தோடு பார்க்கவில்லை.. நாங்கள் அவர்களுக்குத் துரோகம் இழைக்கவுமில்லை.. அவர்களது இடங்களை அபகரிக்கவோ.. அவர்களது உடமைகளுக்கு சேதம் விளைவிக்கவோ.. அவர்களது உயிர்களைக் காவு கொள்ளவோ நாம் எப்போதும் துணிந்ததில்லை.

எனவே, சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் இணக்கத்தோடு தான் வாழ்கிறார்கள். இனியும் வாழ்வார்கள். அதனால் இரண்டு இனங்களுக்கும் மத்தியில் இனக்கலவரமொன்று தோன்ற முடியாது. இனியும் தோன்றுவதற்கு வாய்ப்புமில்லை.

தற்போது அடிக்கடி அரங்கேற்றப்படுவதும்.. 1915இல் அரங்கேற்றப்பட்டதும் இனக்கலவரமல்ல. இரண்டு இனங்கள் மோதிக் கொள்ளும் போது தான் ஒரு இனக்கலவரம் தோன்றுகின்றது. அத்தகைய கலவரமொன்று இலங்கை வரலாற்றில் முஸ்லிம் - சிங்கள மக்களிடையே தோற்றம் பெற்றதில்லை. மாறாக, மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஒரு சிறு குழுவே காலத்துக்குக் காலம் முஸ்லிம்களுக்கெதிராக நாசகார வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. அந்தக் குழு சிங்கள மரபுகளையோ பௌத்த விழுமியங்களையோ மதிக்கும் குழுவல்ல. சிங்கள மக்கள் அவ்விரண்டையும் மதிப்பவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் எந்த இனத்துக்கெதிராகவும் அத்துமீற மாட்டார்கள். பிரச்சினைகள் இருந்தால் பேசித் தீர்ப்பார்கள். பொலிஸ்காரர்களாகவும் சிறையதிகாரிகளாகவும் மாற மாட்டார்கள். வீதிக்கு வந்து தண்டனை வழங்கும் மரபு அவர்களுடையதல்ல. 

எனினும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட சில குழுக்களே இத்தகைய அநீதிகளையும் அக்கிரமங்களையும் அரங்கேற்றுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு மனித இயல்புகள் இருப்பதில்லை.. மனிதாபிமானம் தெரிவதில்லை.. நீதிக்கும் அநீதிக்குமிடையில் வேறுபாடு புரிவதில்லை.. அடக்குமுறைக்கும் சட்டத்தின் ஆட்சிக்குமிடையில் பாகுபாடு விளங்குவதில்லை.. காரணங்களைக் கண்டறிவதற்கும் அவதூறுகளை நம்புவதற்குமிடையில் உள்ள வித்தியாசம் தெரிவதில்லை.

ஏன் பகைக்க வேண்டும்?! ஏன் தாக்க வேண்டும்?!! ஏன் அழிக்க வேண்டும்?!!! என்பன போன்ற தர்க்கங்கள் அவர்களுக்குப் புரிவதேயில்லை.
குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களை உடைத்து நொறுக்கித் தீ வைக்கும் போது, “ஏனந்த மாமா மார்கள் இவற்றை உடைக்கிறார்கள்?” என்று ஒரு குழந்தை தனது தந்தையிடம் கேட்கிறது, உடைப்பதற்கு ஒரு காரணம் இருந்தாலல்லவா அதனைப் பிள்ளையிடம் சொல்ல முடியும். “கொத்து ரொட்டியில் கருத்தடை மாத்திரை போட்டாராம் ஒரு கடைக்காரர்.. அல்லது ஒரு சிங்களவரின் தலையில் அடித்தானாம் ஒரு முஸ்லிம் குடிகாரன்” என்றா காரணம் கூறுவது?!!! 
கொத்து ரொட்டி சமாச்சாரத்தையும் குடிகாரன் அடியையும் காரணமாக வைத்து இருபதுக்கும் அதிகமான வணக்கஸ்தலங்கள்.. 102 வியாபார நிலையங்கள்.. 140 வீடுகள்.. 56 வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. இது தான் புதிய இனத்தின் சாதனை.

உலகில் எந்த மரபு? எந்த தர்மம்? எந்த சட்டம்? எந்தப் பண்பாடு? எந்த மதம்? எந்த மனித இயல்பு? எந்த நாகரிகம்? இந்தத் தர்க்கத்தை ஏற்றுக் கொள்ளும்!!! சிங்களப் பாரம்பரியமும் பௌத்த விழுமியங்களும் இவற்றை ஏற்றுக் கொள்ளுமா?

கொத்து ரொட்டி சமாச்சாரமும் குடிகாரன் அடியும் சோடிக்கப்பட்ட விவகாரங்களே.. திட்டமிடப்பட்ட சதி தான் அரங்கேறியிருக்கிறது என்பதை புலனாய்வுகளை அடிப்படையாக வைத்துப் பகிரங்கமாகக் கூறியிருக்கிறது இலங்கை அரசு.

எனவே தான் சிங்கள பௌத்தர்கள் இந்த நாசகார வேலையை செய்யவில்லை.. சிங்களப் பாரம்பரியமும் பௌத்த விழுமியங்களும் ஏற்றுக் கொள்ளாத நாசகார வேலைகளை அவர்கள் செய்ய மாட்டார்கள். எந்த மதமும் மனித தர்மமும் அங்கீகரிக்காத இத்தகைய நாசகார வேலைகளை நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு புதிய இனமே அரங்கேற்றியுள்ளது, அந்த இனத்திற்கு மதமுமில்லை.. கொள்கையுமில்லை.. விழுமியங்களுமில்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்டதனால் இவைகளனைத்தையும் இழந்த ஒரு இனமே அதுவாகும்.

மரபணு மாற்றம் என்பதன் பொருள் அனைவருக்கும் தெரியும். ஒரு பொருளின் இயல்பை.. பண்பை அதுவல்லாத ஒன்றாக மாற்றும் தொழில்நுட்பமே (Genetic Engineering) அதுவாகும்.

மனிதனுக்குள் அவனது பண்புகளையும் இயல்புகளையும் மாற்றுவதற்கும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். எனினும் மனிதனுக்குள் அதனைப் பரீட்சிப்பதற்கான அனுமதி உலகில் இன்னும் வழங்கப்படவில்லை.

இருப்பினும் மற்றுமொரு வழிமுறையினூடாக மனிதனது இயல்புகளையும் பண்புகளையும் மாற்றும் முயற்சி நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது. அதற்குத் தடை விதிக்கும் சட்டங்கள் உலகில் எங்குமில்லை. கீழ்த்தரமான.. மானக்கேடான.. அசிங்கமான.. உத்திகளைக் கையாண்டு.. அரசியல் நோக்கங்களை அடைவதற்காக.. மதம் என்ற பெயராலும் இனம் என்ற பெயராலும் மற்றுமொரு மதத்தையோ இனத்தையோ சார்ந்தவர்களை ஆபத்தாக சித்திரித்து மூளைச் சலவை செய்வதே அவ்வழிமுறை.

இந்த மூளைச் சலவைக்கு ஆளாகின்றவர்கள் யாராகவுமிருக்கலாம். மரபணு மாற்றத்தின் மூலம் வருவது போன்ற மாற்றங்கள் அவர்களது இயல்புகளிலும் பண்புகளிலும் நிச்சயம் வரவே செய்யும். இயற்கையின் கொடையாக மனிதன் பெற்றிருக்கின்ற மனித இயல்புகளும் மத இயல்புகளும் இவர்களிடம் இல்லாமல் போய் புதிய.. வேறுபட்ட.. வித்தியாசமான.. ஆச்சரியமான இயல்புகளும் பண்புகளும் இவர்களிடம் தோற்றம் பெறும்.

தமது இனத்தைச் சேர்ந்தவனைக் கொலை செய்துவிட்டுப் பிற இனத்தின் மீது பலியைப் போட இவர்களால் தான் முடியும். தமது வணக்கஸ்தலங்களுக்குக் கல்லெறிந்து விட்டுப் பிறரது வணக்கஸ்தலங்களைத் தாக்கும் புத்தி இவர்களுக்குத் தான் வரும். உலகமே அங்கீகரிக்காத விஞ்ஞானமும் ஒத்துக் கொள்ளாத போலிகளை சரித்திரம் போல் சித்தரிப்பதற்குக் கலை பயின்றவர்கள் இவர்களே.  குற்றவாளியை சட்டத்தின் முன் கொண்டு செல்வதற்குப் பதிலாக நிரபராதிகள் மீது காடைத்தனங்களைக் கட்டவிழ்க்கும் கைங்கரியத்தை அரங்கேற்றுவதற்கு இவர்களை விட்டால் உலகில் வேறு எவரும் இருக்க மாட்டார்கள்.
மனித இயல்புகளுக்கும் மத இயல்புகளுக்கும் முற்றிலும் முரணான பண்புகளைக் கொண்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட இந்தப் புதிய மனித இனம் உற்பத்தி செய்யப்பட்டு விட்டது. அதிசயம் என்னவென்றால் இந்தப் புதிய இனம் உற்பத்தி செய்யப்படும் இடங்களாக மத வழிபாட்டுத் தலங்கள் இருப்பதே. அரசியல் வாதிகளுக்காக இவர்களை உற்பத்தி செய்யும் வேலையை மதகுருக்கள் ஏற்றிருப்பது அதனை விட ஆச்சரியமானதாகும்.
இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் புதியவர்கள் என்பதனால் நாட்டில் இவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். மரபணு மாற்றத்தின் மூலம் பெற்ற அதிசயமான குணங்களை வெளிப்படுத்த மாவட்டங்கள் தாண்டி இவர்கள் பயணிக்கிறார்கள். அநுராதபுர மாவட்டம், மாத்தறை மாவட்டம் போன்ற இடங்களிலிருந்து கண்டி மாவட்டத்திற்கு இவர்கள் வருகிறார்கள். இங்கிருந்து அங்கும் செல்கிறார்கள். கண்டியிலிருக்கும் சிங்கள - முஸ்லிம் மக்கள் தங்களுக்கு மத்தியில் நல்லுறவைப் பேணி வாழும் போது மாவட்டம் தாண்டிப் பயணிக்கும் இந்தப் புதிய இனமே வன்முறைகளை வருந்திக் கட்டவிழ்த்து விடுகிறது. தமது அதிசயமான குணங்களை வெளிப்படுத்த சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்கிறது இந்தப் புதிய இனம் என்பதையே இது காட்டுகிறது. இந்தப் புதிய இனத்திற்கு சாதாரண மனித இயல்புகளோடு வாழ்வது கஷ்டமாக இருக்கிறது. 
அரசியல் நோக்கங்களுக்காக இந்த இனத்தை உற்பத்தி செய்திருக்கின்ற குரூரப் புத்தி கொண்டவர்கள் தங்களது இலக்குகளை அடைந்து கொள்வதற்கு பகடைக்காய்களாக இந்த இனத்தைச் சேர்ந்தவர்களைப் பயன்படுத்துகின்றார்கள். புதிய இனத்தைச் சேர்ந்தவர்களோ தங்களது அதிசயப் பண்புகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு கனவுகள் கிடையாது. 

1983இல் இது போன்று ஒரு புதிய இனம் உருவாக்கப்பட்டு தமிழ் மக்களின் உடமைகளுக்கும் உயிர்களுக்கும் பலத்த சேதம் விளைவிக்கப்பட்டது. தமிழ் மக்களை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டதாகவும் புதிய அந்த இனத்தை உற்பத்தி செய்தவர்கள் அப்போது நினைத்தார்கள். அதன் கசப்பான விளைவுகளை முப்பது வருடங்களாக இந்தத் தேசம் அனுபவித்தது. அன்று பாதிக்கப்பட்ட தமிழர்கள் தான் இன்றைய டயஸ் போராக்களாக இருந்து கொண்டு சர்வதேச அழுத்தங்களை இலங்கை மீது பிரயோகித்து வருகின்றன. இலங்கைத் தேசத்தின் நற்பெயருக்கும் சவாலாக இருக்கின்றன. 

இடைக்கால நலன்களுக்காக இத்தகைய அவலங்களை உற்பத்தி செய்கின்ற நாசகாரிகள் விடயத்தில் இந்தத் தேசம் கவனம் செலுத்துமா? அல்லது தேசமோ அதன் மக்களிடையே இருக்க வேண்டிய நேசமோ எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை; குறுகிய இலாபங்களை அடைந்துகொள்ள நினைப்பவர்கள் அடைந்து கொள்ளட்டும் என அரசும் அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருக்கப் போகின்றனரா?

நாடு குட்டிச் சுவராவுவதை தடுக்க வேண்டியவர்கள் தடுக்காது போனால் அதுபற்றிக் கவலைப்படுபவர்கள் கவலைப்பட்டு என்ன பயன்?

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
2018 – 03 - 10

2 comments:

  1. இந்த கட்டுரையை சிங்களத்தில் மொழிபெயர்ப்புச் செய்து சகல சிங்களர்களுக்கும் கிடைக்கச் செய்யவும்

    ReplyDelete
  2. Pls remove this photo. Add the photos of BBS Ganasara, Ravana balaya.

    ReplyDelete

Powered by Blogger.