Header Ads



"சைக்கிளில் வந்து பென்ஸ் காரில் பயணிக்க விரும்புபவர்கள், அரசியலுக்கு வராமலிருப்பதே நல்லது"

மக்கள் தமது பிரதிநிதிகளாக உங்களை தேர்ந்தெடுப்பது சைக்கிளில் வந்து பென்ஸ் கார்களில் பயணிப்பதற்காக அல்ல,அவர்களின் தேவைகளை பெற்றுக்கொள்வதற்காகவே ஆகும். இதனை நீங்கள் ஒவ்வொருவரும் மனதில் பதிய வைத்துச் செயற்படவேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.கொழும்பு மாநகர சபைக்கு தெரிவான ஐக்கிய தேசியக் கட்சி மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விருப்பு வாக்குகளால் நீங்கள் தெரிவு செய்யப்படவில்லை. உங்கள் வட்டார மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். மக்களை வீடு தேடிச் சென்று பிரச்சினைகளை தீர்த்துக்கொடுப்பது உங்கள் மீதான கடப்பாடாகும்.

கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க உட்பட தெரிவான 60 உறுப்பினர்களும் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்வு நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது. இதில்உரையாற்றிய அவர்,...

அரசியலுக்கு வருபவர் யாராக இருப்பினும் மக்களுக்கு சேவை செய்வதையே இலட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளை இனம்கண்டு நிறைவேற்றிக் கொடுப்பதே எமது பணியாகும். மக்கள் எம்மைத் தேடி வந்து முறையிடும் வரை நாம் காத்திருக்க முடியாது. மக்கள் காலடிக்கு நாம் தான் செல்ல வேண்டும். பைசிக்களில் வந்து பென்ஸ் காரில் பயணிப்பதற்கு விரும்புபவர்கள் அரசியலுக்கு வராமலிருப்பதே நல்லது. அரசியல் பணம் தேடுவதற்கான இடமல்ல மக்கள் சேவைக்கான பணியாகும்.

கொழும்பு மாநகர மக்களுக்கு நிறையவே பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை தீர்த்து வைக்கும் பொறுப்பு உங்கள் கைகளில் உள்ளது. மேயராக பதவியேற்கும் ரோசி சேனாநாயக்கவிடம் கொழும்பு மாநகரை ஒப்படைத்திருக்கின்றோம். பிராந்தியத்தின் சிறந்த மாநகரமாக கொழும்பை மாற்றித்தர வேண்டுமென்பதையே தான் அவரிடமிருந்து எதிர்பார்க்கின்றேன். கொழும்பு மாநகர மக்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. அவற்றை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையதாகும்.

வரலாற்றில் முதற் தடவையாக கொழும்பு மாநகர சபைக்கு ஒரு பெண் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இன்றுவரை பெண் மேயரொருவர் தெரிவாகவில்லை. இது தான் முதற்தடவை. எமது ஐக்கிய தேசியக் கட்சிதான் பெண் பிரதிநிதித்துவத்துக்கு முன்னுரிமை கொடுத்தது. ஒவ்வொரு வீட்டிலும், குடும்பத்திலும் காணப்படும் பிரச்சினைகளை பெண்களே நன்கறிவர். ரோசி சேனாநாயக்க ஒரு குடும்ப பெண் என்ற அடிப்படையில் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காண்பார் என்று நம்புகின்றேன்.

கொழும்பில் பெரும்பான்மையான மக்கள் வறுமைக்கோட்டிலேயே வாழ்கின்றன. அவர்களுக்கு அடிப்படை வசதிகளையும் உட்கட்டமைப்புகளையும் பெற்றுக் கொடுத்து அந்த மக்களின் வாழ்வில் மலர்ச்சி ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொருவரிடமும் நான் கேட்பது உங்களை தெரிவு செய்த மக்களிடமிருந்து தூரமாகிவிடாதீர்கள்.

இணைந்து செயற்படுங்கள், குறைகளை கேட்டறிந்து நிறைவேற்றுங்கள். மக்கள் எம்மிடமிருந்து நிறைய எதிர்பார்க்கின்றனர். அவற்றை பூரணப்படுத்த வேண்டிய பொறுப்பு எம்முடையதாகும்.

டெங்கு பிரச்சினை, குப்பை அகற்றும் பிரச்சினை இந்த இரண்டுமே எமக்கு சவாலாக உள்ளது. இந்தச் சவாலை வெற்றிக்கொள்ள காத்திரமான திட்டங்களை வகுத்துச் செயற்படவேண்டும். எந்த சூழ்நிலையிலும் மக்களோடு முரண்பட வேண்டாம். மக்களின் இன்ப துன்பங்களில் நேரடியாக பங்கேற்று மக்களது மனங்களை வெற்றிகொள்ளுங்கள். அது உங்கள் பணிக்கு வலு சேர்க்கும். என்பதை உறுதியாக நம்புங்கள். நல்ல எதிர்பார்ப்போடு உங்களை தெரிவு செய்த மக்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்வதற்கு உறுதிபூணுங்கள் என்று கூறினார்.

எம். ஏ. எம். நிலாம் 

No comments

Powered by Blogger.