கண்டியில் நெகிழவைத்த நிகழ்வுகளும், கொடிய அனுபவங்களும்..!
-கண்டியிலிருந்து எம்.பி.எம். பைறூஸ் -
கண்டி வன்முறை சம்பவங்களுக்காக பிரதேசத்திலுள்ள மக்களோடு தொடர்ந்தும் முரண்பட்டுக் கொண்டிருக்க முடியாது. பிரதேசத்தில் சமாதான சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்திருக்கிறோம் என்கிறார் தும்பர ஜம்இய்யதுல் உலமா தலைவர் மௌலவி அப்துஷ் ஷுகூர். '' பிரதேசத்திலுள்ள பன்சலைகளுக்குச் சென்று நாம் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறோம். கடந்த வாரம் பலகொல்லையின் சில பகுதிகளில் பாதுகாப்பை தந்தது பிக்குமாரும் சிங்கள மக்களும்தான். எங்களுக்குள் நல்லுறவு இருக்கிறது. விரோதமுள்ளவர்களும் இருக்கிறார்கள்தான். ஆனால் எல்லோரும் விரோதிகள் அல்ல'' என்கிறார் அவர்.
இதற்கப்பால் மௌலவி ஷுகூர் மற்றுமொரு முக்கிய விடயத்தையும் அழுத்தமாகச் சொல்கிறார். ''எங்கள் தரப்பிலும் ஒரு பிழை இருக்கிறது. முஸ்லிம்கள் என்றால் யார்? பள்ளிவாசல் என்றால் என்ன? என்று இன்னமும் நாம் அவர்களுக்கு எடுத்துச் சொல்லவில்லை. பள்ளி என்றால் பங்கர் என்றும் அதற்குள் ஆயுதங்கள் இருப்பதாகவுமே சிங்கள மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றி சரியாக விளங்கப்படுத்துவோம் என்றால் இந்த இனவாதப் பிரச்சினையை கூடிய விரைவில் இல்லாதொழிக்கலாம். அப்படிச் செய்தால் எம்மை யாரும் தாக்க வந்தால் அவர்கள்தான் எம்மைப் பாதுகாக்க முன்னிற்பார்கள். வேறு யாரும் எமக்குத் தேவைப்படமாட்டார்கள்'' என்கிறார் அவர்.
பாதுகாக்க முன்வந்த அபூ தாலிப்கள்
இந்தக் கருத்தில் உண்மை இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் ஏராளமான சம்பவங்கள் கண்டியிலும் ஏனைய பகுதிகளிலும் நடந்திருக்கின்றன. பௌத்த மத தலைவர்களே முன்வந்து பள்ளிவாசல்களையும் முஸ்லிம்களையும் பாதுகாத்திருக்கிறார்கள். இவை நாட்டில் நல்லிணக்கத்துக்கான வாயில்கள் இன்னமும் முழுமயாக அடைக்கப்படவில்லை என்பதற்கு கட்டியம் கூறுகின்றன.
''எமது பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களைத் தாக்கப் போகிறார்கள் என்று தகவல் கிடைத்தது. நாம் பள்ளிவாசல்களுக்கு முன்பாக வந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டோம். இந்தப் பகுதியில் 14 பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றுக்கு ஒரு கல் கூட வீசப்படாது காப்பாற்ற எம்மால் முடிந்துள்ளது.
பெரும்பான்மையினரின் பொறுப்பு சிறுபான்மையினரை பாதுகாப்பதாகும்'' என்கிறார் கண்டி வதுரகும்புர தம்மானந்த தேரர்.
இவரைப் போன்றுதான் கோமகொட விகாராதிபதி கஹகல தம்மானந்த தேரர் , மீவதுர வஜிரநாயக்க நாஹிமி ஆகியோரும் பிரதேச முஸ்லிம் குடும்பங்களுக்கு விகாரைகளில் அபயமளித்துப் பாதுகாத்ததுடன் தாக்குதலுக்கு வந்த வன்முறைக்கும்பலையும் விரட்டியடித்திருக்கிறார்கள்.
அதேபோன்றுதான் இந்த இக்கட்டான தருணத்தில் எங்களுக்கு உதவியதும் அயலவர்களான சிங்கள மக்கள்தான் என்கிறார் திகனவைச் சேர்ந்த மற்றொரு இளைஞர். '' எங்களுக்கு நடந்ததைப் பற்றி அவர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள்.
வெசாக் பண்டிகையின்போது தன்சல் நிகழ்வுகளை நாங்களும் சேர்ந்துதான் ஏற்பாடு செய்வோம். அந்த அப்பாவி சாரதியை அடித்துக் கொன்ற நான்கு பேருக்கு எதிராக ஏதேனும் செய்திருந்தால் நாங்கள் கவலைப்படப் போவதில்லை. சம்பந்தமேயில்லாத எங்களை ஏன் இவர்கள் இலக்கு வைத்தார்கள்?'' என்ற பெரும் கேள்விக்குறியுடன் தனது கவலையைப் பகிந்தார் அவர்.
நெகிழ வைத்த நிகழ்வுகள்
தெல்தெனியவில் நடந்த இன்னுமொரு நிகழ்வு நம்மை நெகிழவைக்கிறது. முஸ்லிம் தாய் ஒருவரின் குழந்தைக்கு சிங்களத் தாய் ஒருவர் பாலூட்டிய சம்பவம்தான் அது. அதனை ஊடகவியலாளர் ரஞ்சித் குமார சமரகோன் 'ரெஸ' பத்திரிகையில் இப்படி எழுதுகிறார்.
'' தெல்தெனிய நகரம் கொந்தளித்துக் கொண்டிருக்கும்போது பீதியில் உறைந்த மக்கள் பாதுகாப்புத் தேடி ஓடினர். அப்போது முக்கியமான முஸ்லிம் குடும்பம் ஒன்று அடைக்கலம் தேடி அயலிலுள்ள சிங்கள வீடொன்றுக்குள் வந்தது. ஆறு மாத பச்சிளம் குழந்தையொன்றும் அக்குடும்பத்தில் இருந்தது.
அந்த சிங்கள வீட்டில் இளம் தம்பதியொன்றே இருந்தது. ‘‘மகள் ஏ.ஜீ. அலுவலகத்தில் இருக்கிறார். நகரத்தில் குழப்பம் நிகழ்வதால் அவரால் வந்துகொள்ள முடியவில்லை. மகளைக் கூட்டி வருவதற்கு மகன் சென்றுள்ளார். அவரது குழந்தை பசியால் கதறுகிறது. மகள் வரும்வரை நாம் பாதுகாப்புக்காக இங்கே தங்கியிருக்கிறோம்…’’ என்று வந்த அந்தப்பெண் கேட்டுக்கொண்டார். சிங்கள வீட்டார் உடனடியாக வந்தவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கினர்.
‘‘எனக்கும் குழந்தை கிடைத்து ஒருமாதம் தான்…. எனவே, ஒரு பாலகன் பசியால் கதறியழுவதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? அதனால் நான் அக்குழந்தைக்குப் பாலூட்டினேன். …’’ என்று அடைக்கலம் கொடுத்த சிங்களப்பெண் எம்மிடம் கூறினார்.
மூண்டுள்ள மோதலுக்கு இரை தேடிக் கொண்டிருக்கையில், மனிதாபிமானத்துக்கு உயிரூட்டிய இத்தகைய உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இவ்வாறான கதைகள் வெளிச்சத்துக்கு வரவில்லை'' என்று சமரகோன் எழுதுகிறார்.
பாதுகாப்பின்மையை உணரும் தருணம்
தமது குடும்பத்தினர் நாட்டில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்ற ஒரே நம்பிக்கையில்தான் இன்று பல ஆயிரக் கணக்கான குடும்பத் தலைவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர்தான் திகனவைச் சேர்ந்த ரிஸ்வி. குவைத்தில் தொழில் புரிந்தவர். ஊரில் பிரச்சினை என்று கேள்வியுற்ற உடனேயே மனைவி பிள்ளைகளின் பாதுகாப்புத்தான் முக்கியம் என்று கருதி தொழிலையும் விட்டுவிட்டு நாட்டுக்கு வந்துவிட்டார்.
'' நான் தினமும் எனது குடும்பத்துடன் தொலைபேசியில் உரையாடுவேன். தாக்குதல்கள் ஆரம்பித்த மறுநாள் காலையில் 10.30 மணியளவில் நான் வீட்டைத் தொடர்பு கொண்டேன். அந்த நேரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று மனைவி சொன்னார். ஆனால் சில மணி நேரம் கழித்து எமது பகுதியில் தாக்குதல் நடப்பதாக கேள்விப்பட்டேன். மீண்டும் மனைவியைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். தொடர்பு கிடைக்கவில்லை. குவைத்தில் நான் தொழில் புரியும் கடையில் குந்தியிருந்து அழுது புலம்புவதைத் தவிர அப்போது என்னால் எதையும் செய்ய முடியவில்லை.
பின்னர்தான் எனது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் அவரது சாச்சியும் அவரது 2 மற்றும் 8 வயதுடைய இரு மகள்களுமாக வீட்டின் பின் பக்கமாகவுள்ள பற்றைக்காட்டுக்குள் மறைந்திருந்தாக அறிந்தேன். சுமார் 3 மணித்தியாலங்களாக மிக்க பயத்துடன் அவர்கள் மறைந்திருந்தார்கள்.
பின்னர் அவர்களைக் கண்ணுற்ற ஒரு சிங்களப் பெண்மணி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று அடைக்கலம் கொடுத்திருக்கிறார். அந்தப் பெண்ணின் கணவரும் வெளியில் சென்றிருந்தார். ஆனாலும் தைரியமாக இவர்களை அவர் வீட்டில் வைத்து கதவுகளை மூடிப் பாதுகாத்துள்ளதுடன் தேநீர் சாப்பாடு வழங்கி உபசரித்துமிருக்கிறார்'' என்றார்.
ரிஸ்வியின் குடும்பத்தைப் போன்றுதான் எம்மிடம் பேசிய பலரது அனுபவங்களும் அமைந்திருக்கின்றன. இரவு முழுவதையும் காடுகளுக்குள்தான் கழித்த பலரை எல்லா ஊர்களிலும் நாம் சந்தித்தோம்.
பாத்திமா பீவி அவ்வாறான ஒரு கொடிய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார் ''எங்கள் பகுதி தாக்கப்பட்டபோது எனது மகள் மாத்திரமே குழந்தையுடன் வீட்டில் இருந்தார். உடனே அவர் பிள்ளையையும் தூக்கிக் கொண்டு ஓடி காட்டுக்குள் ஒளிந்திருக்கிறார். அப்போது பிள்ளை அச்சத்தில் வீறிட்டு அழுதிருக்கிறது. சத்தம் கேட்டால் தாக்க வந்துவிடுவார்கள் என்பதற்காக குழந்தையின் வாயைப் பொத்தி அதில் துணியைப் புகுத்தி சத்தம் வராமல் பாதுகாத்ததாக எனது மகள் என்னிடம் கூறினார்'' என்றார் அச்சம் நிறைந்த பார்வையுடன்.
முஸ்லிம்கள் வன்முறையாளர்களல்லர்
முஸ்லிம்களை வலிய வம்புக்கு இழுப்பதுதான் இவர்களது நோக்கம் என்கிறார் எம். சஹீட். ''தாக்குதல்தாரர்களின் நோக்கம் முஸ்லிம்களையும் வன்முறையாளர்கள் எனக் காண்பித்து ஐ.எஸ்.ஐ.எஸ். முத்திரை குத்துவதாகும். ஆனால் நாங்கள் சமாதானத்தை விரும்பும் மக்கள். பெரும்பான்மை சிங்கள மக்கள் எங்களோடுதான் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு உதவுகிறார்கள். எங்களுக்கு உணவு தந்தார்கள். தங்கள் வீடுகளின் அறைகளைத் திறந்துவிட்டார்கள். தற்காலிமாக அடைக்கலம் தந்தார்கள்'' என்கிறார் அவர்.
நாங்கள் கோழைகளும் அல்லர்
இந்தத் தாக்குதல்களின் போது முஸ்லிம்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்பதுதான் எல்லோரும் எழுப்புகின்ற கேள்வி. '' எங்களை வீடுகளை விட்டும் வெளியேறுமாறும் இங்கு இருப்பது உயிருக்கு ஆபத்து என்றும் பாதுகாப்பு படையினர்தான் வந்து கூறினார்கள். பள்ளிவாசல்களில் கூட இருக்க வேண்டாம் என்றார்கள். சொத்துக்களை விடவும் எங்கள் மனைவி பிள்ளைகளின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதே எங்கள் ஒரே இலக்காகவிருந்தது. அதனால்தான் நாங்கள் வீடுகளை விட்டு வெளியேறினோம். ஆனாலும் வீடுகள், கடைகள், பள்ளிகள் தாக்கப்படுவதாக கேள்வியுற்றதும் எங்கள் இடங்களுக்குச் செல்ல எத்தனித்தோம். ஒரு புறம் போக வேண்டாம் என எங்கள் குடும்பத்தினர் தடுத்தார்கள். மறுபுறம் பாதுகாப்பு படையினரும் அதற்கு அனுமதிக்கவில்லை. இதற்குள் அவர்கள் அனைத்தையும் கொள்ளையடித்து தீ வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்'' என்கிறார்கள் திகன மற்றும் அம்பதென்ன பிரதேச குடும்பத் தலைவர்கள்.
பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட எம்மை அழைத்துச் சென்ற திகனவைச் சேர்ந்த இளைஞரிடம் '' இப்போது இந்த பிரதேச முஸ்லிம்கள் வேறு பகுதிகளில் குடியேறுவது பற்றி யோசிக்கிறார்களா?'' எனக் கேட்டேன். உடனடியாக அதனை மறுதலித்த அவர் '' நாங்கள் ஒரு தடவை கோழைகளாக இருந்தது போதும். இனி வந்தால் திருப்பி அடிப்போம். வாழ்வும் சாவும் இனி இந்த மண்ணில்தான்'' என்றார் உரத்த குரலில்.
- விடிவெள்ளி 16.03.2018
Ketpatharkku naraahattan irukkirathu...Ivaigalai seihinra SLTJ kaaranugalattane Moulavu unga oru iyakkaattukum pudikkuthullai..
ReplyDeleteIslam oru iniya maarkkam naddatthinaal eano easuhinreergal...?
OR avargal aarampitta nihalchi..unga ACJU moolamaattan nadakkanumnu nenakkureengalo...?