பல்டியடிக்க மாட்டேன் - ஐ.தே.க. எம்.பி. யே வதந்தி பரப்புகிறார் - ரங்கே பண்டார
ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் ரங்கே பண்டார கட்சி மாறப் போவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகின்றது.
அமைச்சர் ரங்கே பண்டார ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகி சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் தனது பேஸ்புக் பக்கத்தின் ஊடாக இந்தத் தகவல்களை அமைச்சர் ரங்கே பண்டார கடுமையாக மறுத்துள்ளார்.
தான் எந்தவொரு கட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டும் வேறு கட்சிக்கு தாவும் நிலைப்பாட்டில் இல்லை என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வேறு கட்சிகளின் அரசியல்வாதிகளை பிரதமராக நியமிக்கும் செயற்பாட்டுக்கு தான் ஆதரவளிக்கப்போவதில்லை எனவும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தான் கட்சி மாறப் போவதான வதந்திகளை கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதியொருவரே பரப்பி வருவதாகவும் அவரைப் போன்று தான் கட்சிக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கப் போவதில்லை எனவும் ரங்கே பண்டார தனது பதிவில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment