ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் மாநாயக்க தேரர்கள் அனுப்பியுள்ள கடிதம்
சைட்டம் நிறுவனத்தை அடிப்படையாக கொண்டு ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் நாட்டுக்கு நல்லதல்ல என பௌத்த பீடங்களின் மாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மாநாயக்க தேரர்கள் இதனை கூறியுள்ளனர்.
மல்வத்து பீடத்தின் மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர், அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர், அமரபுர பீடத்தின் மாநாயக்கர் கொட்டுகொட ஸ்ரீ தம்மாவாச தேரர், ராமஞ்ஞய பீடத்தின் மாநாயக்கர் நாபான பிரேமசிறி தேரர் ஆகியோர் இணைந்து இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
சைட்டம் மருத்துவக் கல்லூரி சம்பந்தமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள தலையிடுமாறு அரச மருத்துவ பீடங்களின் மாணவர்களின் பெற்றோர் சங்கம், சைட்டம் மாணவர்களின் பெற்றோர் ஒன்றியம் இணைந்து மாநாயக்க தேரர்களிடம் விடுத்த கோரிக்கையை கவனத்தில் கொண்டு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இணங்கும் வகையிலான தீர்வு குறித்து கவனம் செலுத்துமாறு மாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரச மருத்துவப்பீடங்களின் 8 பீடாதிபதிகள் முன்வைத்துள்ள யோசனையை அடிப்படையாக கொண்டு மீண்டும் ஒரு முறை அனைத்து தரப்பினரும் யோசனையை கொண்டு வந்து எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலான தீர்வுக்கு வருமாறும் மாநாயக்க தேரர்கள் கேட்டுள்ளனர்.
Post a Comment