மக்களிடம் ஒருவகை கவர்ச்சியை ஏற்படுத்தி, அரசாங்கத்தை தக்கவைக்க முயற்சி
எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் நல்லாட்சி அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு விளக்கமளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர்,
கடந்த 2015ஆம் ஆண்டின் தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த அரசாங்கம் ஏராளம் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. பத்து இலட்சம் தொழில்வாய்ப்புகள், ஐந்து லட்சம் வீட்டுத்திட்டங்கள், வொக்ஸ்வகன் கம்பனியின் கிளை இலங்கையில் நிறுவப்படல் போன்றன அவற்றில் முக்கியமானவை. எனினும் எந்தவொரு வாக்குறுதியும் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை.
தற்போது 2025ஆம் ஆண்டு வரையான பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அரசாங்கம் வௌியிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டின் வாக்குறுதிகளுக்கு நடந்த அதே கதிதான் இவற்றுக்கும் நடக்கும்.
ஆனாலும் பொதுமக்கள் மத்தியில் ஒருவகையான கவர்ச்சியை ஏற்படுத்தி அரசாங்கத்தின் மீதான எதிர்பார்ப்பை தக்க வைத்துக் கொள்ளவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் சுதந்திரக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. அவர்கள் எந்தவொரு தேர்தலை எதிர்கொண்டாலும் தோல்வியே கிட்டும்.
ஐ.தே.கவும் தேர்தல்களுக்கு அஞ்சுகின்றது. ஆனால் எந்தவொரு தேர்தல் குறித்தும் அச்சமின்றி அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் ஒரே கட்சி ஜே.வி.பி மட்டுமே என்றும் சுனில் ஹந்துன்னெத்தி தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment