'நிகாப்' அணிந்து சென்று, லஞ்சம் கோரியவர்களை பிடித்த சுகாதார அமைச்சர்
உகண்டாவின் சுகாதார இராஜாங்க அமைச்சர் சாரா ஒபேன்டி, நோயாளி போல் நடித்து, வைத்தியசாலைக்குச் சென்று, லஞ்சம் கோரிய இரு உத்தியோகத்தர்களை கையும் மெய்யுமாக பிடித்துள்ளார்.
உகண்டாவின் தலைநகர் கம்பாலாவிலுள்ள நாகுரு அரச வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது.
உகண்டா நாட்டின் சுகாதார அமைச்சராக ஜேன் ஆசெங் பதவி வகிக்கிறார். அவரின் கீழ் இராஜாங்க அமைச்சர்கள் இருவர் உள்ளனர்.
ஆரம்ப சுகாதார துறை இராஜாங்க அமைச்சர் ஜோய்ஸ் மொரிக்குவும், பொதுச் சுகாதாரத் துறைக்கான இராஜாங்க அமைச்சர் சாரா அச்சியிங் ஒபேன்டியுமே இவ்விருவரும் ஆவர்.
அமைச்சர் சாரா அச்சியிங் ஒபேன்டி, அரச வைத்தியசாலைகளில் நோயாளிகளிடம் லஞ்சம் கோரும் உத்தியோகத்தர்களை நேரில் கண்டுபிடித்து அம்பலமாக்குவதற்குத் தீர்மானித்தார்.
இதன்படி, கம்பாலாவிலுள்ள நாகுரு அரச வைத்தியசாலைக்கு அவர் நோயாளி போன்று சென்றார். இதன்போது, அவர் 'நிகாப்' பாணியில் முகத்தை மறைக்கும் வகையில் ஆடை அணிந்திருந்தார்.
அப்போது தன்னை யாரும் இனங்கண்டு விடக் கூடாது என்பதற்காக, போடா போடா என உகண்டாவில் அழைக்கப்படும் மோட்டார் சைக்கிள் டெக்ஸியில் அமர்ந்தவாறே மேற்படி வைத்தியசாலைக்கு சாரா ஒபேன்டி சென்றமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலையில் நோயாளி போல் நடித்த அவர், தனக்கு சில ஆய்வு கூட பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக உத்தியோத்தர் ஒருவரிடம் கூறினார்.
அப்போது ஊழியர் ஒருவர், மருத்துவரை சந்திப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டுமானால் தனக்கு 5000 உகண்டா ஷில்லிங் (சுமார் 213 இலங்கை ரூபா) பணம் தருமாறு அந்த ஊழியர் வலியுறுத்தினாராம்.
நோயாளி போன்று நடித்த அமைச்சர் சாரா ஒபேன்டி, ஊழியரிடம் பணத்தை கொடுத்துவிட்டு மருத்துவரிடம் சென்றார். அங்கு அவருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.
குறித்த மருத்துவரும் பரிசோதனை செய்வதற்கு தனக்கு 100,000 ஷில்லிங் (சுமார் 4256 ரூபா) லஞ்சம் கோரினாராம்.
இது குறித்து அமைச்சர் சாரா ஒபேன்டி கூறுகையில்,
இந்த வைத்தியசாலையில் அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். ஆனால், நோயளிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் கோருவதாக ஏராளமான முறைப்பாடுகள் எனக்கு கிடைத்தன.
நான் சில மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்வதற்கு 150,000 ஷில்லிங் செலுத்த வேண்டுமென என்னிடம் கூறப்பட்டது. என்னிடம் பணம் இல்லை எனக் கூறிய போதிலும் பணம் கொடுக்குமாறு ஊழியர் வற்புறுத்தினர் எனத் தெரிவித்துள்ளார்.
நான் அவர்களிடம் பணத்தை செலுத்திய பின்னர், பொலிஸாரை அழைத்தேன். அவர்களால் மேற்படி உத்தியோத்தர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் எனவும் அமைச்சர் சாரா ஒபேன்டி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சாரா ஒபேன்டியின் நடவடிக்கையை வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஸ்டீபன் கியேம்பாம்பே பாராட்டியுள்ளார். எமது வைத்தியசாலையிலுள்ள ஊழியர்களின் மோசடியை அம்பலமாக்குவதற்கு உதவிய அமைச்சரவை நாம் பாராட்ட வேண்டும்.
Post a Comment