முசலி முஸ்லிம்களே, உடனடியாக களத்தில் இறங்குங்கள்...
ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட மாவில்லு பேணற்காடு வர்த்தமானி அறிவித்தல் மூலம் முசலிப்பிரதேசத்தில் சுவீகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள குழு தனது அறிக்கையை எதிர்வரும் 21 ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
இதனால் முஸ்லிம் சமூக அமைப்புகள், அரசியல் குழுக்கள், சமூக ஆர்வலர்கள் முசலி பிரதேச காணிகள் தொடர்பில் தேவையான ஆவணங்கள், தகவல்கள், ஆதாரங்கள் மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பான விபரங்களை அக் குழுவுக்கு உடன் சமர்ப்பிக்குமாறு வேண்டப்படுகின்றனர்.
இதுவரை போதிய தகவல்கள் குழுவுக்கு கிடைக்கப்பெறாமையால் முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிப்பதில் பல சிக்கல்கள் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக அப்பிரதேசத்தில் மீள் குடியேற்றத்திற்காக வரவுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை, அக்குடும்பங்களுக்குத் தேவையான காணிகள், காணிகள் எத்தனை ஏக்கர் தேவைப்படுகின்றன, எந்த இடத்தில் காணிகள் வழங்கப்பட வேண்டும் எனும் விபரங்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுவது கவலைக்குரியதாகும்.
அத்தோடு மீள்குடியேறும் மக்களின் பொருளாதார அபிவிருத்தி, வாழ்வாதாரம் என்பவற்றுக்காகத் தேவைப்படும் வயல் நிலங்கள், விவசாய நிலங்கள் என்பனவும் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. மேலும் மக்கள் வாழ்ந்த பழைய கிராமங்கள் எங்கிருக்கின்றன, அந்தக் கிராமங்களின் எல்லை, அங்கிருந்த பாடசாலைகள், பள்ளிவாசல்கள் போன்றவற்றின் விபரங்களும் இதுவரை வழங்கப்படாததால் குழு அறிக்கையை சமர்ப்பிப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரியவருகிறது.
மீள் குடியேறும் மக்கள் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் வகையில் அமையவேண்டிய கைத்தொழிற் பேட்டைகள் மற்றும் அவை நிறுவுவதற்கான இடம் எங்குள்ளது என்பனவும் தெரிவிக்கப்படவில்லை.
முசலிப் பிரதேச மக்களைச் சந்தித்து தேவையான தகவல்களையும், ஆவணங்களையும் பெற்றுக் கொள்வதற்கு குறிப்பிட்ட குழு அப்பிரதேசத்திற்கு செல்வதற்கு மக்களுக்கு நேரடியாக அறிவிப்பதில்லை. அப்பகுதி அரசாங்க அதிபருக்கு அறிவிக்க, அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் மூலம் கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவிப்பதே வழக்கமாகும். கிராம உத்தியோகத்தர்களே பொதுமக்களுக்கு அறிவிப்பார்கள். இம்முறை பின்பற்றப்பட்டதாகவே தெரியவருகிறது.
இதேவேளை அப்பகுதியிலுள்ள சிங்கள, தமிழ் மக்கள் தொடர்பாக தேவையான ஆவணங்கள், கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள குழு தனது அறிக்கையை 21 ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ளதால் இன்றுவரை முசலி மக்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளாது, தகவல்கள் வழங்காதுள்ள அரசியல் தலைவர்களும் சமூக அமைப்புகளும் நலன் விரும்பிகளும் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ARA.Fareel
Post a Comment