விஷப் பாம்பு மூலம், குடும்பத்தையே கொலைசெய்ய முயற்சி
குருணாகல் மாவட்டம் கும்புக்கொட்டே என்ற பிரதேசத்தில் கிரிபமுன என்ற கிராமத்தில் கடையொன்றில் வாழ்ந்து வந்த குடும்பத்தினரை கொலை செய்ய காட்டில் பிடிக்கப்பட்ட கொடிய விஷம் கொண்ட பாம்பை பயன்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் கடைக்குரிய அறைக்குள் கடந்த 31 ஆம் திகதி பாம்பு ஒன்றை போட முயற்சித்த போது அங்கிருந்த பெண்ணொருவர் கண்டு கூச்சலிட்டுள்ளார்.
பெண்ணின் சத்தம் கேட்டு கிராம வாசிகள் சம்பவ இடத்திற்கு வந்த போது சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.
அவரை துரத்திச் சென்ற ஊர்வாசிகள் சந்தேக நபரை பாம்புடன் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பாம்பை பரிசோதித்த மருத்துவர்கள் அது கொடிய விஷம் கொண்டது என கூறியுள்ளனர். சந்தேக நபர் நேற்றைய தினம் குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவம் நடந்த கிராமத்தில் இதற்கு முன்னரும் பாம்பு தீண்டி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் சந்தேக நபருக்கு தொடர்புள்ளதா என்பதை அறிய விசாரணை நடத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக கும்புக்கெட்டே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment