ரவியை அடுத்தடுத்து சந்தித்த ரஷ்ய, அமெரிக்க தூதுவர்கள்
அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் சிறிலங்கா தூதுவர்கள் நேற்று ஒரே நாளில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை திடீரெனச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர் அலெக்சான்டர் கர்சாவா நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதன்போது சிறிலங்கா- ரஷ்யா இடையிலான நட்புறவு வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சிறிலங்காவின் எதிர்கால அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ரஷ்யா தொடர்ந்து உதவும் என்றும் ரஷ்ய தூதுவர் அலெக்சான்டர் கர்சாவா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நேற்று பிற்பகல் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்பும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சிறிலங்கா மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஆதரவு வழங்க அமெரிக்கா எப்போதும் கடமைப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்திலும் சிறிலங்காவின் அபிவிருத்திக்கான பலமான ஆதரவை அமெரிக்கா வழங்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை ரஷ்ய, மற்றும் அமெரிக்க தூதுவர்கள் ஒரே நாளில் அடுத்தடுத்து சந்தித்துப் பேச்சு நடத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக பார்க்கப்படுகிறது.
Post a Comment