ஜோர்தானில் பாலியல் வல்லுறவு செய்பவனை, பாதுகாக்கும் சட்டம் நீக்கப்பட்டது
ஜோர்தானில் கற்பழிப்பு குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் பாதிக்கப்பட்டவரை திருமணம் முடித்தால் தண்டனையில் இருந்து தப்பும் சட்டம் ஒன்று நீக்கப்பட்டுள்ளது.
ஜோர்தானில் பெண் உரிமையாளர்கள், முஸ்லிம், கிறிஸ்தவ அறிஞர்கள் மற்றும் ஏனையோரின் பல ஆண்டு பிரசாரத்தின் பின் ஜோர்தான் சட்டத்தின் பிரிவு 308ஐ அந்நாட்டு அமைச்சரவை அகற்றியுள்ளது.
சர்ச்சைக்குரிய இந்த சட்டத்தின்படி கற்பழிப்பு குற்றவாளிகள் சிறைத் தண்டனையில் இருந்து தப்பிக்க பாதிக்கப்பட்டவரை மூன்று ஆண்டுகளுக்குள் திருமணம் முடிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் கெளரவம் மற்றும் நற்பெயரை இந்த சட்டம் பாதுகாப்பதாக இதற்கு ஆதரவானோர் கூறி வந்தனர். கடந்த 2010 தொடக்கம் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜோர்தானில் 159 கற்பழிப்பு குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்க தம்மால் பதிக்கப்பட்டவரை திருமணம் முடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சட்டத்தை அகற்றும்படி அரச குழு ஒன்று பரிந்துரைத்திருந்தது. எனினும் அமைச்சரவையின் இந்த முடிவுக்கு எம்.பிக்கள் வாக்களிக்க இருப்பதால் இது தடைப்படுவதற்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேபோன்றதொரு சட்டத்தை நீக்கக்கோரி லெபனானிலும் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment