கிறீஸ் மனிதன் என நினைத்து தாக்குதல் - மனைவியின் உருக்கமான கோரிக்கை, மொரகஹஹேனயில் சம்பவம்
(ரெ.கிறிஷ்ணகாந்)
மொரகஹஹேன பிரதேசத்தில் புதிதாக குடியேறிய நபரொருவர் மீது கிறீஸ் மனிதன் எனக் கருதி அப்பகுதி மக்கள் சராமாரியாக தாக்குதல் மேற்கொண்டதில் அவர் காயமடைந்துள்ளதாக தாக்குதலுக்கு இலக்கான நபரின் சகோதரனால் பேஸ்புக்கில் இடப்பட்ட பதிவொன்று வைரலாக பரவிவருகின்றது.
கடந்த 1 ஆம் திகதியன்று மொரகஹஹேன பிரதேச மக்கள், ஊருக்குள் கிறீஸ் மனிதன் ஒருவன் புகுந்துவிட்டதாக கூச்சலிட்டு, கூரிய ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். கிராமமக்களின் கூச்சல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்த மேற்படி நபர் வெளியே சென்று அவதானித்துள்ளார்.
அதன்போது, அப்பிரதேச மக்களுக்கு பரீச்சயமில்லாத இந்நபரை கிறீஸ் மனிதன் என நினைத்து ஆயுதங்களை கொண்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். தனது கணவர் தாக்கப்படுவதனை கண்டு ஓடிவந்த அவரது மனைவி, அவரை விட்டுவிடுமாறு கோரிய போதும் பிரதேசவாசிகள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பின்னர் தாக்குதலில் காயமடைந்த நபரை அவரது மனைவி முச்சக்கர வண்டிஒன்றில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயற்சித்திருந்த போதிலும் அவரை கொண்டு செல்லவிடாமல் கிராம மக்கள் தடுத்திருந்தனர்.
அதன்பின்னர் அவர், அம்பியூலன்ஸ் ஒன்றை வரவழைத்து அதில் காயமடைந்த நபரை ஹொரணை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபரின் கைவிரல்கள் இரண்டு கடுமையாக சேதமடைந்துள்ளமையினால் அவற்றை அகற்ற வேண்டுமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவரின் மனைவி இது தொடர்பில் தெரிவிக்கும்போது, நாங்கள் இப்பகுதிக்கு புதிது என்பதனால் எனது கணவர் இப்பிரதேச மக்களுக்கு அறிமுகம் இல்லை. எனினும் சில தினங்களாக கிறீஸ் மனிதன் என அறியப்படும் நிர்வாணமான மர்ம மனிதர் ஒருவரால் இங்குள்ள மக்களின் உடைமைகள் திருடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நிர்வாணமான நபரொருவரே கிறீஸ் மனிதன் எனக் கூறப்பட்டபோதிலும், ஆடையணிந்திருந்த எனது கணவரை கிராம மக்கள் தாக்கியதோடு அவரை ஊரை விட்டு செல்லுமாறும் கொலை மிரட்டல் விடுத்ததுடன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
எனினும் தனது கணவர் நிரபராதி எனவும் அவர் அவ்வாறான தவறுகள் எதனையும் செய்யவில்லை எனவும் இதுதொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட நபரின் மனைவி கோரியுள்ளார்.

Post a Comment