முஸ்லிம் கடைகள் மீது குண்டு தாக்குதல் - குற்றவாளிகளை பிடிப்பதில் பொலிஸார் மும்முரம்
நேற்று முன்தினம் அதிகாலை தென் மாகாணத்தைச் சேர்ந்த கொடபிட்டிய, போர்வை நகரிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் மீது இனந் தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலினால் மூன்று கடைகள் தீப்பற்றி எரிந்துள்ளதுடன் மற்றுமொரு கடை சேதத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் அறிந்து ஸ்தலத்துக்கு விரைந்த அக்குரஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பெற்றோல் நிரப்பப்பட்ட போத்தலொன்று வெடிக்காத நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன் கைவிரல் அடையாளங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அருகிலுள்ள பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்களின் சி.சி.ரி.வி கமரா பதிவுகள் பொலிஸாரால் பெறப்பட்டுள்ளன.
போர்வை நகரில் நேற்று பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் சம்பவம் அறிந்ததும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவைத் தொடர்பு கொண்டு போர்வையில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நிறுத்துமாறும் முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் படியும் கோரிக்கை விடுத்துள்ளார்.
முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை தாமதமின்றி கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகுல ரத்நாயக்க பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் உத்தரவினையடுத்து அக்குரஸ்ஸ பொலிஸார் அருகிலுள்ள பள்ளிவாசல் மற்றும் பெரும்பான்னை இனத்தவர்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையத்தின் சி.சி.ரி.வி கமரா பதிவுகளை பெற்று விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
விரைவில் இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை கைது செய்யமுடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொடப்பிட்டிய மத்ரஸா மற்றும் மக்தப் பொறுப்பாளர் பௌசுல் கரீம் கருத்து தெரிவிக்கையில்;
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவிலே முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் காரணமாக ஒரு தொலைபேசி கடை, ஹோட்டல் ஒன்று பழவகைகள் விற்பனை நிலையம், என்பன தீப்பற்றி சேதங்களுக்குள்ளாகியுள்ளன. மற்றுமொரு விற்பனை நிலையத்துக்கு எறியப்பட்ட பெற்றோல் குண்டு வெடித்துச் சிதறாது பொலிஸாரினால் மீட்கப்பட்டது.
போர்வை பகுதியில் முஸ்லிம்களும் பெரும்பான்மை இன சிங்களவர்களும் நீண்ட காலமாக எதுவித பிரச்சினையுமின்றி ஒற்றுமையாகவே வாழ்கிறார்கள்.
இங்கு 500 முஸ்லிம் குடும்பங்கள் வாழும் நிலையில் சூழ பெரும்பான்மை மக்களே வாழ்கிறார்கள். இப்பகுதியில் ஒற்றுமையுடன் வாழும் இரு சமூகத்துக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்ட சதியே இது. இத்தாக்குதலுடன் தொடர்புடையவர்களைத் தேடிப்பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென்றே இப்பகுதி பன்சலைகளின் தலைமை தேரர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
போர்வை பள்ளிவாசலில் அமைந்துள்ள சியாரத்தைப் பார்வையிட அதிகமான சிங்கள மக்கள் வருகிறார்கள். இதனால் இரு இனங்களுக்கிடையிலும் ஒற்றுமை நிலவி வருகிறது. சந்தேக நபர்களைக் கைது செய்வதில் பொலிஸார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தென் மாகாணசபை உறுப்பினர்கள் பலரும் ஸ்தலத்துக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர். போர்வை பள்ளிவாசல் சி.சி.ரி.வி கமராவிலும் தாக்குதல் தொடர்பான பதிவுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment