Header Ads



இலங்கைக்கு வரவிருந்த வீரப்பன்

சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனை பிடிக்க பல ஆண்டுகாலமாக மூன்று மாநில காவல்துறையினர் தீவிரமாக முயற்சித்து வந்தபோது எப்படி தமிழக காவல்துறையினர் வெற்றி கண்டனர் என்பதை விவரிக்கிறார் முன்னாள் டிஜிபியான விஜயகுமார்.

சமீபத்தில் வீரப்பன் வேட்டையை பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார் விஜயகுமார். ’சேஸிங் தி பிரிகேண்ட்’ எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள புத்தகத்தில் வீரப்பன் எப்படி காவல்துறை விரித்த வலையில் வீழ்ந்தார் எனும்  தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

வீரப்பனிடம் அவரை ஈழத்திற்கு அழைத்துச் சென்று அவரின் முற்றிப் போன கண்புரை நோய்க்கு சிகிச்சையளித்து திரும்ப அழைத்து வரக்கூடிய ஒரு ‘போலி’ திட்டத்தின் மூலமே வீரப்பனைக் காட்டை விட்டு வெளியே வரச் செய்ய முடிந்தது என்று விவரிக்கிறார் விஜயகுமார். ஒரு கட்டத்தில் வீரப்பன் கும்பலின் எண்ணிக்கை வெறும் நான்காக குறைந்த விட்ட போது அக்கும்பலின் நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துத் தகவல்களும் நம்பகமான உளவாளிகளால் கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் கும்பலுக்குள் ஊடுருவிய காவல் துறையினர் அவரை ஈழம் செல்லும் ‘போலி’ திட்டத்திற்கு சம்மதிக்கச் செய்தனர். ஈழ விடுதலைப் போர் மீது கொண்டிருந்த ஈர்ப்பாலும், தனக்கு அங்கு சிகிச்சையும், புதிய ஆயுதங்களும் கிடைக்கும் எனும் நம்பிக்கையாலும் வீரப்பன் இத்திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதாக விவரிக்கிறார் மற்றொரு அதிகாரியான செந்தாமரைக்கண்ணன்.

புத்தக வெளியீட்டு விழாவில் பேசும்போது விஜயகுமார், “ வீரப்பன் கொல்லப்பட்ட தினமான அக்டோபர் 18, 2004 அன்றிரவு நான் மேலும் சில காவல்துறை அதிகாரிகளை இழந்துவிடுவேனோ என்று நினைத்திருந்தேன். வீரப்பனை சரண்டடையச் சொல்லி வலியுறுத்தினோம். ஆனால் எங்களை நோக்கி தோட்டாக்கள் பாய்ந்ததால் பதிலுக்குத் தாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது” என்றார்.

வீரப்பனைக் காட்டிலிருந்து ஆம்புலன்ஸ்சில் அழைத்து வந்த போது அதனை ஓட்டிய சரவணன் இன்று துணை ஆய்வாளராக பணி புரிகிறார். அவருடன் இணைந்த இணை காவல்துறை ஆய்வாளர் வெள்ளைத்துரையிடம் ஆயுதமும் இருந்தது. அவர் காவல்துறைக்குப் புதியவர் என்பதால் அவர் தேர்வு செய்யப்பட்டார். 

இப்புத்தகத்தைப் பற்றி முன்னாள் கர்நாடக காவல்துறைத் தலைவர் சங்கர் பிதாரி உட்பட பலரும் பேசினர். பிதாரி வீரப்பன் கும்பலின் எண்ணிக்கையை 300 லிருந்து சில நபர்களாக குறைத்ததில் பெரும்பங்கு வகித்தவர். 

எப்படியிருந்தாலும் வீரப்பனை அவ்வளவு எளிதாக நம்பவைத்து காட்டை விட்டு வெளியே கொண்டு வரக் கையாண்ட வழிகள் ஒரு போதும் அதிகாரிகளால் சொல்லப்படாது என்பது ஏறக்குறைய உறுதி.

No comments

Powered by Blogger.