மகிந்த செய்த பாவமே இப்போது தொடருகின்றது, ஜனாதிபதி கூறினால் பதவி விலகுவேன்
மகிந்த ராஜபக்ச செய்த பாவத்தின் பலனையே இப்போது அனுபவித்து கொண்டு வருகின்றோம் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று -20- இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
நாடு இப்போது இருக்கும் நிலைக்கு காரணம் மகிந்த ராஜபக்சவே. அவர் அப்போது செய்த பாவமே இப்போது தொடர்ந்து வருகின்றது.
அவருடைய ஆட்சியில் 10 வருடங்களுக்கும் மேலாக இந்தக் குப்பை பிரச்சினை தொடர்ந்தது.
ஆனால் இது தொடர்பிலான திட்டங்கள் ஆலோசனையில் இருந்தது என்று தற்போது சொல்கின்றார், இதை அனைவரும் மறந்து விட்டனர்.
ஆனால் இப்போது எமது அரசை குறை கூறுகின்றார்கள். இன்று மடிந்தது மனித உயிர்கள் ஆனால் அதிலும் அரசியலைத் தேடுகின்றார்கள்.
அதேபோன்று துறைமுக விவகாரத்தில் என்னை பதவி விலகுமாறு கூறுகின்றார்கள். அப்படி நான் பதவி விலகிவிட்டால் அவர்கள் நினைத்தது போல சீனாவிடம் ஒப்பந்தங்கள் போட்டுக் கொள்வார்கள்.
அதனை எதிர்ப்பார்த்தே என்னை வீட்டுக்குச் செல்லக் கூறுகின்றார்கள். கடந்த கால திருடர்களை பிடிக்கவேண்டும் ஆனால் அவர்களுக்கு இப்போதைய அமைச்சர்களும் கூட துணையாக இருப்பது வேதனையான விடயமே.
இவர்களின் போலிக் கூச்சலுக்காக நான் பதவி விலக மாட்டேன். நான் செய்வது குறித்து எனக்கு தெரியும். ஜனாதிபதி கூறினால் மட்டும் நான் பதவி விலகத் தயார் எனவும் அர்ஜுன தெரிவித்தார்.
Post a Comment