காணி அபகரிக்கும் பிரகடனத்தை, இரத்து செய்க - 38 சிவில் அமைப்புகள் ஜனாதிபதிக்கு மகஜர்
முசலி பிரதேச செயலாளர் பிரிவு மக்களின் பாரம்பரிய நிலங்களை மாவில்லு வன ஒதுக்காகப் பிரகடனப்படுத்தும் அரச வர்த்தமானி அறிவிப்பை ரத்துச் செய்யக் கோரி 38 சிவில் அமைப்புகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அதனை இங்கு தருகின்றோம்.
மன்னார்மாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு சொந்தமான பெருமளவு பாரம்பரிய நிலங்களை, வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 3A பிரிவின் கீழ் மாவில்லு வன ஒதுக்காகப் பிரகடனப்படுத்தும் அரச வர்த்தமானி அறிவித்தல் இல. 2011/34 இனை மீளாய்ந்து நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், கீழே கையொப்பமிட்டுள்ள நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவ் வர்த்தமானி அறிவிப்பினால் முசலி பிரிவிலுள்ள கரடிக்குழி, மறிச்சுக்கட்டி, வில்லாத்திக்குளம், பெரிய முறிப்பு, மாவில்லு மற்றும் வெப்பல் உட்பட பல கிராமங்கள் தீவிரமாகப் பாதிக்கப்படும். முசலி பிரிவைச் சேர்ந்த மக்களின் சார்பாக, அவர்களின் கருத்து வெளிப்பாடு மற்றும் நீதிக்கான உரிமைக்கமைவாக நாம் இவ் வேண்டுகோளை விடுக்கின்றோம்.
இவ் வர்த்தமானியானது காடழிப்பு மற்றும் வில்பத்து வன ஒதுக்கில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்பு என்பவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வரையப்பட்டது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். வனப் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு ஒருமித்த முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனினும், இவ் வர்த்தமானி அறிவிப்பும், அதுவரையப்பட்ட முறையும், நில உரிமைக் கோரிக்கைப் பிரச்சினையின் வரலாற்றையும், அதனுடன் தொடர்புடைய மக்களின் உரிமைகளையும் கணக்கில் எடுக்கத் தவறிவிட்டன.
1990 இல் முஸ்லிம் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதையும், போரின் காரணமாக மக்களிற் பெரும்பாலானோர் வெளியேறி, மீண்டுந் திரும்புவதற்கிடையிலான 30 வருட இடைவெளியையும் தவிர்த்து நோக்கின், முசலி பிரதேச மக்கள் (முஸ்லிம்கள், தமிழர் மற்றும் சிங்களவர்) இப் பிரதேசத்தில் பல தசாப்தங்களாகவோ அல்லது பல நூறாண்டுகளாகவோ வாழ்ந்து வருகின்றனர். இம் மக்களில் பெரும்பாலானோர் நெற் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பு என்பவற்றை உள்ளடக்கிய நிலஞ் சார் பொருளாதாரத்திற் தங்கியுள்ள விவசாயிகளாவர்.
ஆயினும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வன எல்லையானது, இம் மக்களுக்குப் ‘பிரகடனப்படுத்தப்பட்ட வனப் பகுதியினுள்’ உள்ள அவர்களின் குடியிருப்பு, விவசாயம் மற்றும் மேய்ச்சல் நிலங்களை மறுக்கின்றது. மேலும், மக்களின் சொந்த மற்றும் அவர்களால் உபயோகப்படுத்தப்படும் நிலம் மட்டுமல்லாது, மக்கட்தொகையின் இயல்பான வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரத்திற்கு அவசியமான மேலதிக நிலமும் இதனால் இழக்கப்படும்.
இவ் வர்த்தமானி அறிவிப்பின்படி, அண்ணளவாக 40,030 ஹெக்டேயரளவு பிரதேசம், விரிவுபடுத்தப்பட்ட மாவில்லு வன ஒதுக்கினுள் உள்ளடக்கப்படும். இதனால் வரலாற்றினால் இணைக்கப்பட்ட முசலி தெற்கு மற்றும் முசலி வடக்குச் சமூகங்கள் (இரண்டும் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களை உள்ளடக்கிய சமூகங்கள்) ஒன்றிலிருந்தொன்று துண்டிக்கப்பட்டு, முசலி பிரதேச செயலாளர் பிரிவானது இரண்டாகப் பிளவுபடுத்தப்படும். இதன் காரணமாக ஒன்றிலிருந்தொன்று துண்டிக்கப்பட்ட தனித்த மக்கள் கூட்டங்கள் உருவாகும். இது மக்களைத் தனிமைப்படுத்துவதோடு, அவர்களது அசையுமாற்றலைக் கட்டுப்படுத்தி, அவர்களுக்கிடையிலான சமூகப் பரிமாற்றங்களைக் குறைக்கும். மேலும், வன எல்லை மக்களின் வீட்டு எல்லைகளுக்கு மிக அருகில் வருவதால், மனித – -விலங்கு இடைத்தாக்கம் அதிகரித்து, ஏற்கனவே பாரிய மனவழுத்தத்தில் உள்ள மக்களை ஆபத்துக்குள்ளாக்கும்.
முசலி மக்கள் தமது வாழ்வு, இருப்பிடம், வாழ்வாதாரம் மற்றும் சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்பப் போராடி வருகின்றனர். மட்டுப்படுத்தப்பட்ட உதவியும், வளங்களும் அவர்களின் வாழ்வை இன்னும் கடினமாக்கியதோடு, நிரந்தர மீள்குடியேற்றத்தில் வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முசலி தெற்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் 40% ஆனோரே திரும்பிவந்துள்ளனர். இவ் வர்த்தமானி அறிவிப்பு, எஞ்சிய 60% மக்களின் மீள்குடியேற்றத்தின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தி, இப் பிராந்தியத்தில் சமூக வளர்ச்சியை மேலும் பின்னடையச் செய்யும்.
முசலியிலிருந்து இடம்பெயர்ந்தோர் மற்றும் திரும்பியோரின் நிலை, ஏனைய இடம்பெயர்ந்தோர் சமூகங்களின் அவல நிலையைப் போல் வருந்தத்தக்கதாகவே உள்ளன. வனப் பாதுகாப்பு மற்றும் மீள்குடியேற்றம் என்பவற்றுக்கிடையிலான முரண்பட்ட கூற்றுக்கள், வில்பத்து மற்றும் அதன் வடக்கு எல்லைக்கு மட்டும் தனித்துவமானதல்ல என்பதை நாம் நினைவிற் கொள்வது முக்கியமானது.
இடம்பெயர்வு தொடர்பான பிரச்சினைகள் பெரும்பாலும் தீர்க்கப்பட்டுவிட்டதாகத் தெரிந்தாலும், இடம்பெயர்ந்து தமது சொந்தவிடங்களுக்குத் திரும்பியவர்களும், இடம்பெயர்ந்து வேறிடங்களில் வாழ்பவர்களும் தமக்கானவொரு நீடித்து நிற்குந் தீர்வினை இன்னும் அடையவில்லையென்பதே நிதர்சனமாகும். இதை ஒரு வரலாற்றுத் தேவையாகக் கருதி, மார்ச் 2017 இன் அரச வர்த்தமானி அறிவித்தல் 2011/34 இனை உடனடியாக ரத்துச் செய்து, 1992 ஆம் ஆண்டின் பிரதேசச் செயலக வரைபடத்தின்படி முசலி தெற்கு எல்லையை மீள அறிவித்துப் பின் பொது ஆலோசனைக்கிணங்க காட்டு எல்லையை வரையறுப்பதன் மூலம் ஜனாதிபதி முசலி மக்களின் கவலைகளைத் தாமதமின்றி, நியாயமானதொரு முறையில் தீர்க்க வேண்டுமென நாம் கோருகிறோம்.
who are they...Names of 38 Civil Org...??
ReplyDeleteWhy can't they take legal action against My3 & company??
ReplyDeletePlease convey this injustice to the world especially to Amnesty International (AI) & Human Rights Watch.
Amnesty International is doing an outstanding job to bring forth justice to affected people.
Muslim legal officers and jurists must take nimble actions in this regard.