IS உடன் தொடர்பு, மகனின் ஜனாஸாவை வாங்க தந்தை மறுப்பு
-BBC-
இந்தியா - உத்தரப் பிரதேச மாநிலம்லக்னெளவில் ஐ.எஸ். அமைப்பினருடன் தொடர்புடையதாக கூறப்பட்டு போலிஸாரின் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சைஃபுல்லா தேச துரோகி என்று கூறி, சடலத்தை வாங்க அவரது தந்தை மறுத்துள்ளார்.
"போலீஸார் எங்களிடம் வந்து உடலை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் ஒரு சேத விரோதியின் உடலை வாங்க மறுத்துவிட்டோம்," என கான்பூரில் வசித்து வரும் சைஃபுல்லாவின் தந்தை சர்தாஜ் தெரிவித்தார்.
"சைஃபுல்லா சேத விரோதியாக இருந்தால் எங்களுக்கு அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை," எனவும் அவர் தெரிவித்தார்.
தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்டுள்ள சைஃபுல்லாவின் தந்தை சர்தாஜுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
அவரின் ஒரு மகன் அவரது தொழிலிலும் மற்றொரு மகன் டீக்கடையிலும் வேலை செய்கிறார்,
22 வயதான சைஃபுல்லா, வீட்டில் அனைவரை காட்டிலும் இளையவர் மற்றும் அதிகம் படித்தவர்.
"நான் கூறினால் பொய் கூறுவது போல் தோன்றும், யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளலாம் அவனை விட நல்ல பையன் இல்லை. ஆனால் திடீரென்று அவனுக்கு என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை," எனத் தெரிவித்தார் சைஃபுல்லாவின் தந்தை.
சைஃபுல்லா சிறந்த அறிவாளி என்றும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் 80 சதவீத மதிப்பெண்களை அவர் பெற்றுள்ளார் என்றும் சர்தாஜ் தெரிவித்தார்.
பி.காம் படிப்பில் சேர்ந்த சைஃபுல்லா, இரண்டு வருடங்கள் படிப்பை முடித்த பின் அதனை பாதியில் விடுத்து கணிணி வகுப்பில் சேர்ந்துள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன் எந்த வேலையும் செய்யாததால் அவரை அடித்ததாகவும் திட்டியதாகவும் தெரிவித்தார் சர்தாஜ்.
மேலும் சைஃபுல்லா வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார் எனவும் அதன்பின் வீட்டில் உள்ளவர்களிடம் எந்தத் தொடர்பும் வைத்து கொள்ளவில்லை எனவும் சர்தாஜ் தெரிவித்தார்.
"இவை எல்லாம் எப்படி நடந்தது எவ்வாறு நடந்தது என்பது எனக்குப் புரியவில்லை" எனவும் தெரிவித்தார் சர்தாஜ்.
கடந்த திங்களன்று சைஃபுல்லா, தனது தந்தையை தொலைபேசியில் அழைத்து, தனக்கு துபாய் விசா கிடைத்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
அதுதான் தந்தையிடம் அவர் பேசிய கடைசி வார்த்தைகள்.
அதன் பிறகு தொலைக்காட்சியில் லக்னவ் என்கவுண்டர் செய்தியை பார்த்த பிறகுதான் சர்தாஜிற்கு விவரம் தெரிந்துள்ளது.
Post a Comment