Header Ads



இன்னுமொரு கட்சி வேண்டுமா..?

-நாகூர் ழரீஃப்-

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு ஆயிரம் ஆண்டுகளையும் கடந்தது என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம், அதற்காக முன்னின்று உழைத்த பெருந்தகைகளான எமது மூதாதையர்களின் போராட்டங்களையும் தியாகங்களையும், எல்லவற்றிற்கும் மேலாக அவர்களது சமூக உணர்வினையும் மீட்டிப்பார்க்க கடமைப்பட்டுள்ளோம். 

முஸ்லிம் சமூகத்தின் சமய, சமூக, அரசியல் போன்ற அனைத்துத் துறைகளிலும் உளச்சுத்தியுடன் சமநிலை பேணி வழிநடாத்திச் சென்றனர். 

ஆரம்ப காலங்களில் அவர்களது அரசியல் போராட்டங்கள் அல்லது சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்காக கையாண்ட உத்திகள், பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த தலைமைகளுடன் இணைந்தே செயற்பட்டதுடன், பல்வேறு உரிமைகளையும் வென்றெடுத்தனர். (அல்லாஹ் அவர்களது மண்ணரைகளை சுவனத்துப் பூங்காவனமாக ஆக்கி அருள்வானாக!).

எனினும் பிற்காலத்தில் தனிக்கட்சியின் அவசியம் உணரப்ப்பட்டு 1957 ல் இஸ்லாமிய ஐக்கிய முன்னணி தோற்றம் பெற்றது. எனினும் அது தனது இலக்கை அடைந்து கொள்ளப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அது போன்று, இஸ்லாமிய சோஷலிஸ முன்னணி, கொழும்பு முஸ்லிம் ஐக்கிய முன்னணி, கிழக்கிலங்கை முஸ்லிம் ஐக்கிய முன்னணி என பல கட்சிகள் அமைக்கப்பட்டாலும் அவற்றினால் பாரிய செல்வாக்கினை அடைந்து கொள்ள முடியாது போனது. 

அதன் பிற்பாடு, காலஞ்சென்ற எம்.எச்.எம். அஷ;ரஃப் அவர்களினால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி 1981ல் தாபிக்கப்பட்டு, பல் வேறு சவால்களைத்தாண்டி, இலக்கினை அடையும் வண்ணம் வளர்ச்சியையும் கண்டது. அதற்கிடையில் அதே தாபகரினால் 1999 இல் தேசிய ஐக்கிய முன்னணி எனும் கட்சியும் உதயமானது. ஆனால் 2000 ஆம் ஆண்டு அவர்களது திடீர் மறைவுக்குப் பின்னர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் துண்டாடப்பட்டு சிதரிப் போனது.

உள்வீட்டுப் பிரச்சினைகளால், இன்னும் பல கட்சிகள் முளைத்தன. அவைகளுள், முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர் ஏ.எல்.அதாவுல்லா அவர்களினால் 2004ல் தேசிய காங்கிரஸும், அதே வழியில் அமைச்சர் ரிஷhத் பதியுதீன் அவர்களினால் 2005 இல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் உதயமாகின. இவ்வாறு முஸ்லிம் கட்சிகளின் தோற்றத்தின் சங்கிளித் தொடர், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக ஒற்றுமைக் கூட்டணி, ஸ்ரீ லங்கா உலமா கட்சி, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் என்று நீண்டு கொண்டே செல்கின்றது.

இவை அனைத்தையும் தாண்டி, பல முஸ்லிம் அரசியல் தலைமைகள், சிங்கள அரசியல் தலைமைகளையே இன்றும் சார்ந்திருக்கின்றனர். அதற்குள், 'ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பு' என்றொரு புதிய கட்சி உருவாக்கப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் கேகுதாவுத் தெரிவித்துள்ளார்.

உண்மையில் இருக்கும் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தாம் மக்களுக்கு வழங்கும் வாக்குறுதியை நேர்த்தியாக நிறைவேற்றுவார்களாயின் வேறு எந்தக் கட்சியும் எமது சமூகத்துக்குத் தேவை இல்லை. அதே நேரம், இருக்கும் கட்சிகளைப் போன்றே தம்பக்க நியாயங்களை மக்கள் மன்றில் பேசி, மாற்றானை இகழ்வதும் குறை காண்பதுமாக அமையிமாயின் முளைக்கப் போகும் கட்சியும் அதே பணியினைத்தான் செய்யப் போகின்றது எனலாம்.

'ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பு' ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் போராளிகளாக இருந்து, அதிலிருந்து விலகியவர்களையும், விலக்கப்பட்டவர்களையும் இணைத்தே செயற்படவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

எது எப்படியாயினும், சமூகமே நோக்கென்றும், அல்லாஹ்வின் திருப்தியே இலக்கென்றும் அமையாத வரை ஆயிரம் கட்சிகள் தோன்றினாலும் சமூகம் பயன் பெறப் போவதில்லை, மாற்றமாக அவற்றின் தாபகர்களே நிச்சயமாக பயன்பெறப் போகிறார்கள். 

மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படப் போகிறார்கள். எமது பொன்னான வாக்குகள் சிதறடிக்கப்பட்டு, 'உள்ளதையும் கொடுத்தானாம் கோழிக் கள்ளன்' என்ற பழமொழியே வெல்லப் போகிறது.

4 comments:

  1. MANITHANIN AASAYAI KABURU MAN THAAN NIRAPPA MUDIYUM.

    ReplyDelete
  2. Ellorukkun pathavi aasai pidiththirukku

    ReplyDelete
  3. Ellorukkun pathavi aasai pidithtirukku

    ReplyDelete
  4. இலங்கை முஸ்லீம்களின் சாபக்கேடே முஸ்லிம் அரசியல்

    ReplyDelete

Powered by Blogger.