Header Ads



பிள்ளைகள் பரீட்சையில் சித்தியடைகிற போதிலும், ஒழுக்கம் தொடர்பில் திருப்தியடைய முடியாது - ஜனாதிபதி

கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்த நூற்றாண்டை தேசிய, சர்வதேச ரீதியில் வெற்றிகொள்ள வேண்டிய பொறுப்பு பிள்ளைகளுக்கு இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இரத்தினபுரி பெர்குஷன் உயர் கல்லூரியில் இன்று நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

நாட்டின் வரலாறும், வாழ்க்கை வரலாறும் அந்த நாட்டினதும் வாழ்க்கையினதும் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதற்கு சாட்சியாக இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், பணத்தின் அடிப்படையில் அனைத்து விடயங்களையும் தீர்மானிக்கும் தற்போதைய சமூகத்தின் பரீட்சையைப் போன்றே வாழ்க்கையிலும் வெற்றிபெறவேண்டிய சவாலை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கையிலுள்ள பாடசாலை பிள்ளைகள் பரீட்சையில் சித்தியடைவதில் முன்னிலையில் இருந்தபோதிலும், அவர்களது ஒழுக்கம் தொடர்பில் திருப்தியடைய முடியாதுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, பிள்ளைகளின் ஒழுக்கம் தொடர்பில் வளர்ந்தோரும் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை நாட்டுக்கு சொல்லும் வகையில் அண்மையில் சில சம்பவங்கள் நடந்துள்ளன.

பெர்குஷன் உயர் கல்லூரியின் நூற்றாண்டு விழா முத்திரை வெளியிடப்பட்டதுடன் பாடசாலையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவிகளுக்கான பரிசளிப்பு விழாவிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார். உள்ளக விளையாட்டரங்கையும் ஜனாதிபதி திறந்து வைத்து, கண்காட்சிக் கூடத்தையும் பார்வையிட்டார்.

பேண்தகு பாடசாலை செயற்திட்டத்தின் கீழ் 4000 பழமரக் கன்றுகளை நடுகைசெய்யும் திட்டத்தின் அடையாளமாக பழமரக் கன்று ஒன்றையும், சுற்றாடல் பாதுகாப்புக்காக சுற்றாடல் அமைச்சினால் தயாரிக்கப்பட்ட நாட்டிலுள்ள பாடசாலைகளில் காட்சிப்படுத்துவதற்கான காட்சிப்படுத்தல்களை வழங்கி வைப்பதன் அடையாளமாக முதலாவது அறிவித்தல் பலகையை ஜனாதிபதி வழங்கினார்.

பாடசாலையால் தயாரிக்கப்பட்ட சூழல் நேய பயணப் பை மாணவிகள் இருவரால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டதுடன், கல்லூரி அதிபர் எம்.ஹலகம ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கினார்.

1917 ஆண்டில் ஆங்கில மொழிமூல பாடசாலையாக பெப்டிஸ்ற் மிசனரியால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் உலகின் முதலாவது பெண்பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்கா அம்மையார், இலங்கையின் முதலாவது பெண் நீதிபதியான சுதர்மா தர்மதாஸ, முதலாவது பெண் நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம், முதலாவது விமானப்படை வீராங்கனை ஜமுனா பட்டங்கல, பிரபல எழுத்தாளர் சுனேத்ரா ராஜகருணாநாயக்க, அமைச்சர் தலதா அத்துக்கோரளை, உலக திருமணமான அழகுராணி ரோஸி சேனாநாயக்க உள்ளிட்ட சமூகத்தின் உயர்நிலைப் பெண்கள் இப்பாடசாலையில் கல்வி கற்றுள்ளனர்.

அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம், டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, பிரதி அமைச்சர் துனேஷ் கங்கந்த, ஆளுநர் மார்ஷல் பெரேரா, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மற்றும்மக்கள் பிரதிநிதிகளும் நிகழ்வில் பங்குபற்றினார்கள்.

No comments

Powered by Blogger.