புலிகளின் தாக்குதலில் சந்திரிகா, கண்ணை இழந்தும்..!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கண்ணை இழந்த போதிலும், அவருக்கு தமிழ் மக்கள் மீது கோபமோ, பழி தீர்க்கும் எண்ணமோ இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.
தேசிய நல்லிணக்கத்திற்கும் ஒருமைப்பாட்டிற்குமான பணியகத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களுக்கு இனவாதம் இல்லாத சேவையை செய்வதற்கு அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும்.
எமது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இங்கு வந்ததுக்கு காரணம், முப்பது வருட போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காகவே.
அரசியல் தீர்வு தொடர்பில் பேசும் அதேவேளை அபிவிருத்தியும் தேவை. வடக்கு மக்களின் பிரச்சினையை சந்திரிகா நன்றாக தெரிந்து வைத்துள்ளார். அதற்காகவே அவர் செயற்படுகின்றார்.
எமது நாடு அழகான சிறிய தீவு. இங்கு மத்திய, மாகாண அரசு சேர்ந்து வேலை செய்ய வேண்டும். அவ்வாறு வேலை செய்வதன் மூலமே அழகான நாடாக கட்டியெழுப்ப முடியும்.
மாறாக இனவாதம் கதைத்து கொண் டிருந்தால் எதுவும் நடைபெறாது. பிரச்சினைகள் தான் ஏற்படும். இங்கு நிறைய பிரச்சினை உள்ளது. ஆனால் அவற்றை பற்றி பேசினால் மட்டும் போதாது. அது தொடர்பான செயற்பாடுகளும் வேண்டும்.
அரசியல் வேறு, பொருளாதாரம் என்பது வேறு. ஆகவே இது இரண்டையும் தொடர்புபடுத்தி எமது நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடாது.
அவ்வாறு முன்னெடுத்தால் எமது மக்களே அதனால் பாதிப்படைவார்கள். நாம் எல்லோரும் சேர்ந்து போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தல் வேண்டும்.
வடக்கு மாகாணசபையும், மத்திய அரசும் தனித்தனியாக செயற்படமுடியாது. ஒன்றுக்கொன்று புரிந்துணர்வுடன் தான் செயற்பட முடியும்.
எமது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தால் அவரது ஒரு கண் போயிருந்தது.
அவர், கண்னை இழந்தும் கோபம் கொள்ளவில்லை. பழி வாங்கவும் இல்லை. நல்லெண்ண ரீதியில் தான் செயற்பட்டு வருகின்றார். தமிழ் மக்களுக்கு ஆதரவும் தெரிவித்து தான் வருகின்றார்.
ஆகவே அனைத்து விடயங்களையும் மறந்து மக்களுடைய அபிவிருத்தியில் ஒன்றாக வேலை செய்ய வேண்டும். இதுவே இன்றைய தேவை என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
Post a Comment