கொலைக் குற்றவாளியைப் போல, விமல் வீரவன்ச நடத்தப்படுகிறாரா..?
கொலைக் குற்றவாளியைப் போல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிணை வழங்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருடைய பிணை தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
இன்றைய பாராளுமன்ற ஒன்று கூடலின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவருக்கு கொலைக்குற்றம் செய்தவர் போல் பிணை நிராகரிப்பு செய்து கொண்டு வருவது நியாயமற்றது.
இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம் எனவும், அவர் பெயரைக் சபையில் குறிப்பிடவில்லை எனவும் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து “பெயர் குறிப்பிடா விட்டாலும் பரவாயில்லை இது தொடர்பில் ஆலாசனை செய்யப்படும்” என சபாநாயகர் பதில் அளித்தார். அவருடைய பதிலைத் தொடர்ந்து சபையில் ஒரு வித அமைதியற்ற சூழல் தொடர்ந்தது.
இதன் போது இடை நடுவில் ஆசனத்தை விட்டு எழுந்த அமைச்சர் லக்மன் கிரியெல்ல “பாராளுமன்றத்திற்கு பிணை வழங்கும் அதிகாரம் எதுவும் இல்லை. இது கூட தெரியாமல் உரையாட வேண்டாம்” எனத் தெரிவித்தார்.
அவருடைய இந்த பதிலைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் பல்வேறு வகையாக கருத்துகள் எழுப்பப்பட்டு அமைதியற்ற நிலை ஏற்படுத்தப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிற்கு தொடர்ந்தும் பிணை மறுக்கப்பட்டு வருவதும், கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரது பிணைக்காக மும்முரமாக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment